Home » நகைச்சுவை » மாமாவும் மருமகளும் !!
மாமாவும் மருமகளும் !!

மாமாவும் மருமகளும் !!

மாமா வீட்டினிள் நுழைந்த போது ஆறு வயது காவியா பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவள் அம்மாவிடம் அடம்பிடித்து அழுதுக் கொண்டிருந்தாள்.

மாமா தன் தங்கையைக் கண்டிப்பது போல் கண்டித்து விட்டு தன் மருமகளைத் தூக்கி கண்துடைத்துப் பள்ளிக்குப் போகப் பிடிக்காத காரணத்தைக் கேட்டார்.

“மாமா, எனக்கு ஸ்கூலுக்குப் போவ பிடிக்கல. நீ வந்திருக்கிற இல்லையா… இன்னைக்கி மட்டும் நான் வீட்டுலேயே உன் கூட இருக்கிறேன் மாமா” என்று கெஞ்சினாள் காவியா.

“காவியா… மாமாவுக்கு இன்னைக்கு உடம்பு சரியில்லை. அதனால இன்னைக்கி நீ ஸ்கூலுக்குப் போ. நாளைக்கு நான் அமைச்சர்கிட்ட பேசி உன் ஸ்கூலுக்கே லீவு விட சொல்லுறேன்… என்ன.. இன்னைக்கி போயிட்டு வாம்மா…” என்றார் மாமா கனிவாக.

காவியா மாமாவை நிமிர்ந்து பார்த்தாள். “மாமா… நெஜமாலுமே நீ சொன்னா ஸ்கூலுக்கே லீவு விடுவாங்களா…?” ஆச்சர்யமாகக் கேட்டாள்.

“என்ன காவ்யா…. மாமாவ என்ன சாதாரண ஆளுன்னு நெனச்சிட்டியா…? நான் சொன்னா உன் ஸ்கூல் என்ன…? இந்தியாவுல இருக்கிற எல்லா ஸ்கூலுக்கும் நாளைக்கி லீவு விட சொல்லுவேன். நீ வேணா பாக்குறீயா….?” என்று சொல்லிக்கொண்டே செல் போனை எடுத்து எண்களை அழுத்தினார். காவியா அவரையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்தாள்.

“அலோ… நான் காவியாவோட மாமா பேசுறேன். காவியா என் கூட விளையாடனும்ன்னு ஆசைப்படுறாள். அதனால நாளைக்கு எல்லா ஸ்கூலுக்கும் லீவு விட்டுடுங்கள். இது என் ஆர்டர்.” என்று சொல்லிவிட்டு லைனைக் கட்பண்ணினார்.

தன் மாமாவின் செல்வாக்கை ஆச்சர்யம் மாறாமல் பார்த்தக் காவியாவிடம் சொன்னார். “காவியா… நீ இன்னைக்கு ஸ்கூலுக்குப் போயிட்டு வா. நாளைக்கு லீவுன்னு உங்க மிஸ் சொல்லுவாங்க பாரு…” என்றார்.
காவியாவும் குதித்துக்கொண்டு பள்ளிக்கு ஓடினாள். புன்முறுவலுடன் பார்த்தத் தன் தங்கையை அலட்சிய புன்னகையுடன் பார்த்து விட்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்தார் மாமா.

தொலைகாட்சியில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விளம்பரங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top