Home » பொது » சுதந்திரமே பெயரானவர்
சுதந்திரமே பெயரானவர்

சுதந்திரமே பெயரானவர்

சந்திரசேகர ஆசாத்
(பிறப்பு: 1906, ஜூலை 23- பலிதானம்: 1931, பிப். 27)

சர்ரென்று ஒரு கல் பறந்து ஒரு மண்டையைத் தாக்கியது. ரத்தம் கொட்டியது. தாக்கப்பட்டது ஒரு சப்-இன்ஸ்பெக்டர். தாக்கியது ஒரு சிறுவன்.

காசியில் சுதந்திரக் கனலை ஏற்படுத்தும் விதமாக ஒரு ஊர்வலம் நடந்துகொண்டிருந்தது. அதில் பல தலைவர்கள் கலந்துகொண்ட பெரும் கூட்டம் ஊர்வலமாகச் சென்றது. அதைத் தடுக்க முயன்ற ஆங்கில சப்-இன்ஸ்பெக்டர், ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சுவாமி சங்கரானந்தர் என்ற துறவியை தன் லட்டியால் அடித்துக்கொண்டிருந்தார்.

அந்த நேரத்தில் அந்த இடத்துக்கு காசி வித்யா பீடத்திலிருந்து புறப்பட்ட மாணவர்கள் ஊர்வலமும் வந்து சேர்ந்தது. அந்த ஊர்வலத்தில் வந்துகொண்டிருந்த சிறுவன் இந்தக் காட்சியைக் கண்டான். அகிம்சை முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் இப்படி ஒரு வன்முறையை கட்டவிழ்த்துவிடுகிறார்களே என எண்ணினான். உடனே கோபம் உச்சிக்கேறியது. ஒரு கல்லை எடுத்தான், குறி பார்த்தான், அடித்தான், சப் இன்பெஸ்க்டர் தலை உடைந்து ரத்தம் கொட்டியது.

சிறுவன் சிரித்தவாறு கம்பீரமாக நின்றிருந்தான். சப்-இன்ஸ்பெக்டர்,  ‘அந்த பையனைப் பிடி, பிடி’ என்று கத்தினான். கான்ஸ்டபிள்கள் ஓடிவந்து அந்தச் சிறுவனைப் பிடிப்பதற்குள் அந்தச் சிறுவன் காட்டுப் பகுதிக்குள் ஓடித் தப்பிவிட்டான்.

அந்த சிறுவன் தான், சந்திரேசகர ஆசாத்.

இப்படி சிறுவயதிலேயே வீர சாகசம் செய்த சந்திரசேகர ஆசாத்தின் இயற் பெயர் சந்திரசேகர சீதாராம் திவாரி ஆகும். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டபோது அவரது வயது 15. அப்போதே நீதிமன்றத்தில் சுவாரஸ்யமான பதிலை அளித்து நீதிபதியை கோபப்படச் செய்தார். அதன் பிறகே  ‘சந்திரசேகர ஆசாத்’ என அனைவராலும் அறியப்பட்டார்.

ஆசாத், 1906 -ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 -ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம், சபுவா மாவட்டம் ‘பாப்ரா’ என்ற ஊரில் பிறந்தார். அப்பா சீதாராம் திவாரி. அம்மா ஜக்ராணி தேவி.

சிறுவனாக இருக்கும்போதே வில் வித்தை கற்றார். (இந்தப் பயிற்சிதான் சப்-இன்ஸ்பெக்டர் மண்டையை குறிதவறாமல் தாக்க உதவியது எனலாம்) இவரது அம்மாவிற்கு, சந்திரசேகரை சமஸ்கிருதம் படிக்கச் செய்ய வேண்டும் ஆசை. எனவே காசிக்கு அனுப்பினார்.

சப்-இன்ஸ்பெக்டர் மண்டையை உடைத்துவிட்டு தலைமறைவாக இருந்த போது, சந்திரசேகருக்கு ஒரு செய்தி வந்தது. ‘நாளை கல்லூரியில் ஹிந்தி பரீட்சை நடக்கிறது. அதைப் புறக்கணிக்க வேண்டும். அதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்’ என்று.

மறுநாள் காலை திட்டமிட்டபடி போராட்டம் நடந்தது. அப்போதும் போலீஸார் கையில் சிக்காமல் தப்பித்தார். ஆனாலும் போலீசார் அவரை தேடிச் சென்று 1922, பிப்ரவரி 12 அன்று கைது செய்தனர். அவரும் தன்னை கைதுசெய்ய அனுமதித்தார். அதன் பின் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு.

பிப்ரவரி 21 அன்று அந்த வழக்கு நடந்தது.

நீதிபதி உன் பெயர் என்ன என்று கேட்டார்.

“என் பெயர்…………. என் பெயர்…………..” என ஒரு கணம் ஏதோ நினைத்தவன் போல் நிறுத்தி “ஆசாத்” என சத்தமாக கூறினார்.

இந்தப் பதிலைக் கேட்ட நீதிபதியும், அங்கிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

அங்கு கூச்சலும் குழப்பமும் நிகழ்ந்தது.

“சைலன்ஸ்! சைலன்ஸ்!” என்ற நீதிபதி,

“உன் அப்பா பெயர் என்ன?” என்று கேட்டார்.

“விடுதலை” என்று பதில் சொன்னார் சந்திரசேகர்.

நீதிபதி பொறுமையிழந்து “சரியா சொல்லு, உன் வீடு எங்கே என்று?” என்றார்.

“என் வீடு சிறைச்சாலை!” என்றார் சந்திரசேகர்.

நீதிபதிக்கு கோபம் பொங்கி வந்தாலும், வேறு வழியில்லாமல் தடுத்துக் கொண்டே, “உன் வேலை என்ன?” என்று கேட்டார்.

“ஆங்கிலேயர்களை பாரதத்திலிருந்து விரட்டுவது” என பதிலளித்தார் சந்திரசேகர்.

கோபம் கொண்ட நீதிபதி தீர்ப்பை எழுதத் தொடங்கினார்.

“ஆசாத் என்று தன்னை அழைத்துக் கொண்ட இந்த காங்கிரஸ் சுதந்திர வீரன் இந்தியக் குற்றவியல் சட்டம் 504 பிரிவின்படி போலீசாரை மிரட்டிய குற்றம் செய்திருக்கிறான். 447 பிரிவின்படி அனுமதியில்லாமல் தடை செய்யப்பட்ட இடத்திற்குள் நுழைந்திருக்கிறான். 143- ஆவது பிரிவின்படி அமைதியைக் குலைத்திருக்கிறான். இவை அனைத்தும் மதிப்புள்ள ஆங்கில ஆட்சிக்கு எதிராகச் செய்துள்ள குற்றங்களாக இருந்தாலும், சிறுவன் என்ற காரணத்தால் நீதிமன்றம் இவனுக்கு 12 பிரம்படி தண்டனை விதிக்கிறது.” என்று முடித்தார்.

தண்டனையை வீரமுடன் ஏற்ற சந்திரசேகர், ஒவ்வொரு பிரம்படிக்கும் “பாரத் மாதா கீ ஜே!” என குரலெழுப்பி பாரத நாட்டின் மீது கொண்ட சுதந்திரப்பற்றை வெளிப்படுத்தினார். அன்று முதல், அவர் ‘சந்திரசேகர ஆசாத்’ என அழைக்கப்பட்டார்.

மகாத்மா காந்தி, ஒத்துழையாமைக் கொள்கையைக் கைவிட்ட பிறகும், கொள்கையில் உறுதியாய் இருந்த சந்திரசேகர ஆசாத், முழு சுதந்திரத்தை எந்த வழியிலும் அடைந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார்.

ராம் பிரசாத் பிஸ்மில் என்பவரின் அறிமுகம் கிடைத்த்து. இவர்  ‘இந்துஸ்தான் குடியரசு’ என்ற அமைப்பை ஆரம்பித்து நடத்திவந்தார். இந்த அமைப்பில் சந்திரசேகர ஆசாத் சேர விரும்பினார். அதில் சேர்வதற்காக விளக்குத்தீயில் தன் கையை சுட்டுக்கொண்டு தனது மன உறுதியை நிரூபித்தார்.

1925 -ஆம் ஆண்டு காகோரி ரயில் கொள்ளையில் ஈடுபட்டார். அப்போது ஆங்கில அரசு புரட்சியாளர்களை ஒடுக்க தீவிரம் காட்டியது. சந்திரசேகர ஆசாத், பகத் சிங், சுக் தேவ், ராஜ்குரு போன்றவர்கள் இணைந்து சோஷலிச முறையில் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டு இந்துஸ்தான் குடியரசு அமைப்பினை மாற்றி “இந்துஸ்தான் சோசலிஷக் குடியரசு அமைப்பு” என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

1931, பிப்ரவரி 27 அன்று அலகாபாத் ‘அல்ப்ரெட்’ பூங்காவில் இயக்க நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது போலீஸார் சுற்றி வளைத்துக்கொண்டனர். நண்பர்களைத் தப்பிக்க வைத்துவிட்டு தானும் தப்பிப்பதற்காக போலீஸாரிடம் போரிட்டார். அப்போது அவர் காலில் குண்டடிபட்டது. தப்பிச்செல்ல முடியாது என்ற நிலை ஏற்பட்டது. துப்பாக்கியில் ஒரே ஒரு குண்டு மட்டுமே இருந்தது. போலீஸாரிடம் உயிருடன் சிக்க அவர் விரும்பவில்லை. தன்னைத் தானே சுட்டுக்கொண்டு வீரமரணம் அடைந்தார்.

தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பக்தி கொண்டவராக வளங்கிய சந்திரசேகர ஆசாத் இந்தியா விடுதலை அடைவதை கொள்கையாக கொண்டும் போராடியவர்.

ஆசாத்துக்கு அனைத்துமே இந்த நாடுதான். தொடர்ந்து பசி, தாகம், ஏழ்மை ஆகிய கடும் பிரச்னைகள் நச்சரித்துக் கொண்டு இருந்தபோதும்  ஒரு தடவைக் கூட கடமையில் தளர்வு ஏற்பட்ட தனது வாழ்க்கையில் அவர் அனுமதிக்கவே இல்லை.

ஆசாத்துடைய வாழ்க்கை, கொள்கைக்காக சமர்ப்பணம் ஆனது. பிறழாத தேசபக்தி கொண்ட லட்சியப் பற்று ஒன்றே அவருடைய வாழ்க்கை மூச்சு.

இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் மாபெரும் புரட்சி வீர்ராகத் திகழ்ந்த சந்திரசேகர ஆசாத்தின் முழு வாழ்க்கை வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் வீர சரித்திரம் ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top