ஆசிரியர் ஆனந்தமூர்த்தி மாணவர்களிடம் நீதி போதனை வகுப்பில் ஒரு கேள்வி கேட்டார் “”மாணவர்களே.. நமது உடல் அவயங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மற்றும் மிகவும் வலிமையான உறுப்பு எது எனச் சொல்ல முடியுமா..?”
ஒரு மாணவன் எழுந்து “”இதயம் சார்.. நெஞ்செலும்புக் கூட்டுக்குள்ளே மிகப் பாதுகாப்பாக உள்ள அது 70 வயது சராசரி மனிதனின் ஆயுளில் சுமார் 4 கோடி தடவை துடிக்கிறது சார்…!”
மற்றொரு மாணவன் எழுந்து “”மனிதனின் மூளைதான்… மண்டை ஓட்டுக்குள் பாதுகாப்பாக உள்ளது. இதயம் துடிப்பது நின்றாலும் மூளை செல்களின் இறப்பையே இறப்பு என மருத்துவ உலகம் அறிவிக்கிறது..”
ஒரு மாணவி எழுந்து “”சிறுநீரகங்கள்தான் பாதுகாப்பாக அடிவயிற்றில் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன..”
மற்றொரு மாணவன் எழுந்து “”தண்டுவடம்தான் முதுகில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது சார்…”
ஒரு மாணவி “”கண்கள் தலையில் கபாலக்குழிக்குள் பாதுகாப்பாக உள்ளன.. இமைகள் மூடிபோல அவற்றைக் காக்கின்றன..”
ஆசிரியர் கை அமர்த்தி “”நீங்கள் சொன்ன எல்லாவற்றிலும் இரட்டை அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது நாக்குதான். வாய் மற்றும் பற்கள் கோட்டைபோல பாதுகாக்க, மிகவும் வலிமையான, அபாயகரமான உறுப்பாக நாவைத்தான் கருதுகிறார்கள் அறிஞர்கள்.
வள்ளுவர் “பயனில சொல்லல்’ என பத்து குறள்பாக்கள் பாடியுள்ளார். தீயினால் சுட்ட வடுவும் ஆறி விடுமாம். நாவினால் சொன்ன சுடு சொல் காயம் ஆறவே ஆறாதாம். சொல் சுடுமாம். பல இன்னல்களை நாம் பேச்சினால்தான் வரவழைத்துக் கொள்கிறோம். பேசாத சொல்லுக்கு நாம் எஜமான்.
பேசிய வார்த்தை நமக்கு எஜமான். “”வார்த்தைகளை மிருதுவாகப் பார்த்துக்கொள்ளுங்கள். சிலவேளை அவற்றைத் திரும்ப நீங்கள் விழுங்க வேண்டி இருக்கலாம்” என்பது பழமொழி.
சொல்லென்றும் மொழி என்றும் பொருள் என்றும் இல்லை! சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை என கண்ணதாசன் பாடியுள்ளார்”.
மாணவர்கள் மனம் மகிழ்ந்து கைதட்டி ஆர்ப்பரித்தனர்.