Home » பொது » குன்னக்குடி வைத்தியநாதன்!!!
குன்னக்குடி வைத்தியநாதன்!!!

குன்னக்குடி வைத்தியநாதன்!!!

பக்க வாத்தியமாக இருந்த வயலின் கருவியை, ‘பேச’ வைத்தவர் குன்னக்குடி வைத்தியநாதன். பல திரைப்படங்களுக்கு இசை அமைத்து சாதனை புரிந்தார். ‘வயலின்’ என்றால் முதலில் நினைவுக்கு வருவது, குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் தான். வயலின் இசையால், தனது ரசிகர்களை 61 ஆண்டுகளாக மெய்மறக்க வைத்து, அத்துறையில் முடிசூடாமன்னனாகத் திகழ்ந்த இவர், வயலினுக்கே பெருமை சேர்த்தவர் என்று கூறலாம். கர்நாடக இசை, மெல்லிசை, திரையிசை போன்ற பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்து, தனது விரல் லாவகத்தினால் தனக்கே உரித்தான பாணியில் மக்களை மயக்கி, அவர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ‘பத்மஸ்ரீ விருது’, ‘கலைமாமணி விருது’, ‘இசைபெரறிஞர் விருது’, ‘கர்நாடக இசைஞானி விருது’ எனப் பல்வேறு விருதுகளைப் பெற்ற குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 2 மார்ச், 1935

பிறந்த இடம்: குன்னக்குடி சென்னை மாகாணம், பிரிட்டிஷ் இந்தியா

இறப்பு: 8 செப்டம்பர், 2008

தொழில்: வயலின் வித்வான், இசையமைப்பாளர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள், இந்தியாவில் தென்தமிழ்நாட்டில், இறைவன் முருகனின் கோவில் நகரமான குன்னக்குடியில் மார்ச் 2ஆம் தேதி, 1935 ஆம் ஆண்டில், ஸ்ரீ ராமஸ்வாமி சாஸ்த்ரி என்பவருக்கும், திருமதி மீனாட்சி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவருடைய தந்தை தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் ஒரு அறிஞராகத் திகழ்ந்ததால், கர்நாடக இசை மற்றும் கதாகாலக்ஷேபத்தில் ஒரு இசையமைப்பாளராகவும், நுட்பத்திறமை மிக்கவராகவும் இருந்தார். இதன் காரணமாகவே, வைத்தியநாதன் அவர்கள், அவரது இளம் வயதிலேயே, அவரது தந்தையிடமிருந்து தென்னிந்திய பாரம்பரிய இசை கற்கத் தொடங்கினார். தனது 12வது வயதிலிருந்து கச்சேரிகளில் பங்கேற்றார். அவரது மூத்த சகோதரியான குன்னக்குடி சுப்புலட்சுமியும், மிகச் சிறந்த கர்நாடக இசைப் பாடகியாகவும், கைத்தேர்ந்த வயலின் வித்வானாகவும் இருந்தவர்.

குன்னக்குடி வைத்தியநாதன், சண்முகநாதபுரம் பள்ளியில் படிப்பை தொடங்கினார். பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லை. தந்தை நடத்தி வந்த சண்முக வித்யாசாலை என்கிற சமஸ்கிருத பாடசாலையில் படிப்பதில் ஆர்வம் காட்டினார்.
வைத்தியநாதனின் சகோதரிகள் பாட, சகோதரன் மிருதங்கம் வாசிக்க அக்கம் பக்க ஊர்களில் பல நிகழ்ச்சிகள் நடக்கும். வயலின் வாசிக்க திருப்பத்தூர் ராயர் என்பவர் வருவார்.
இரண்டு கச்சேரிகளுக்கு ராயர் வரவில்லை. அந்தக்கச்சேரிகள், வயலின் இல்லாமலேயே நடந்து முடிந்தது.
அதன் பிறகு ஒரு நாள் வந்த ராயரிடம், வைத்தியநாதனின் தந்தை ‘என்ன ராயரே, இப்படி பண்ணிட்டீங்க! குழந்தைகள், வயலின் இல்லாமல் கச்சேரி பண்ணி சிரமப்பட்டு விட்டார்கள்’ என்றார்.
இதனால் கோபம் அடைந்த ராயர் ‘குழந்தைகளுக்குபாடக் கத்துக்கொடுத்துட்டீர், பையன் மிருதங்கம் வாசிக்கிறான். வீட்டுல மக்கு ஒன்று (வைத்தியநாதன்) சும்மா ஊரைச் சுத்திட்டு திரியுதே! அதற்கு வயலினை சொல்லிக்கொடுக்கிறதுதானே?’ என்று கூறினார்.
அப்போது வீட்டுக்குள் நுழைந்த 8 வயது சிறுவனான வைத்தியநாதனை, தந்தை அருகே அழைத்தார். தொடர்ந்து வயலின் கலைஞர் ராயரைப் பார்த்து, ‘இவரைத்தானே ஒன்றுக்கும் ஆகாதவன் என்கிறாய்! இந்த ஊரே ஆச்சரியப்படும்படி இவனை வயலினில் நிபுணனாக உருவாக்கிக் காட்டுகிறேன் பார்’ என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
உடனே வயலின் கலைஞர் ராயர் ‘சாஸ்திரியாரே! நீர் சொல்கிறபடி அவனை உருவாக்கினால் சந்தோஷப்படுற முதல் ஆள் நான்தான். ஆனால் வயலின் வாசிப்பது நீர் நினைப்பது போல சாதாரண விஷயம் அல்ல. அதற்கு சுரஸ்தானத்தை மனதில் இருத்தி வாசிக்கணும். கடுமையான சாதகம் அவசியம். இதெல்லாம் உமக்கு தெரியாதது அல்ல. ஆனா உங்கள் பையனுக்கு புரியும்படி தெரிய வையும்’ என்று கூறிவிட்டு சென்றார்.
இதுகுறித்து குன்னக்குடி வைத்தியநாதன் கூறியதாவது
‘நான் என் அம்மாவிடம் சென்றேன். அப்போது எனது தாயார், ‘உன்னைப்பற்றி இதுநாள் வரை எதுவுமே பேசாதவர் உன் தந்தை. உனக்கு வேதம்தான் சொல்லித்தரப் போகிறேன் என்று கூறி வந்தவர், வயலினை கற்றுத்தர முன்வந்து இருக்கிறார். இதை நீ ஒரு சத்தியவாக்காக எடுத்துக்கொண்டு கற்றுக்கொள்ளவேண்டும். இதில் எங்க விருப்பத்திற்கு மாறாக நடப்பதாக இருந்தால், நீ வீட்டை விட்டே போயிடலாம் என்றார். உடனே அம்மாவின் காலில் விழுந்து `நாளையிலிருந்தே வயலின் கற்றுக்கொள்கிறேன்’ என்று கூறினேன்.
அதன்படி 1943-ம் ஆண்டு எனக்கு வயலின் பயிற்சி தொடங்கப்பட்டது. இசையின் பால பாடங்களான சரளிவரிசை, ஜண்டை வரிசை, கீதங்கள், கீர்த்தனங்கள் அனைத்தும் என்னை ஏகத்துக்கும் குழப்பின. இருப்பினும் அம்மா சொன்ன ‘வீட்டை விட்டு போயிட வேண்டியதுதான்’ என்கிற வாசகம் எனக்கு அசரீரி மாதிரி கேட்டுக்கொண்டே இருந்ததால், அந்த பயம் தந்த நிர்பந்தத்தில் வேண்டா வெறுப்பாக வாசிக்க, நாளடைவில் என்னை அறியாமலேயே எனக்குள் இசை ஈடுபாடு ஏற்பட்டது. இப்படி இருந்த நான் ஒரு `மிராகிள்’ மனிதனானேன். அது அப்பாவின் வேண்டுதலா, அம்மாவின் ஆசியா, அல்லது முருகப்பெருமானின் முடிவா, எனது தலைவிதியா? என்று புரியவில்லை. என் வளர்ச்சி கண்டு என் வீட்டாருக்கு ஆச்சரியம்.
அடுத்த ஆண்டே, குன்றக்குடி மலைக்கோவிலில் சகோதரிகள் பாட, சகோதரர் மிருதங்கம் வாசிக்க, நான் வயலின் வாசிப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தது யார் தெரியுமா? என்னை `மக்கு பையன்’ என்று சவால் விட்டாரே, அந்த திருப்பத்தூர் ராயர்தான்!
கச்சேரி முடிந்ததும், என் தந்தையிடம் வந்த ராயர், ‘என்னய்யா! உன் கைவண்ணமா? அல்லது அந்த முருகன் அருளா?’ என்றார்.
‘இவனுக்குள் இவ்வளவு திறமை இருப்பது எனக்கே இப்போதுதான் தெரியும். இது தெரிந்து இருந்தால், இத்தனை காலம் இவனை வீணடித்து இருக்கமாட்டேன்’ என்று என் தந்தை கூறினார்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், வயலின் வாசிப்பைத்தான் தந்தையிடம் கற்றேன். கீர்த்தனைகளை எல்லாம் என் சகோதரிகள் பாடும்போதே கேட்டுக்கேட்டு, மனப்பாடம் ஆகி இருந்ததால் கச்சேரி செய்ய, அது எனக்கு மிகவும் உதவியாக அமைந்தது.’
இவ்வாறு குன்னக்குடி வைத்தியநாதன் கூறினார்.
வயலின் இசையை கற்ற குன்னக்குடி வைத்தியநாதன் ஆரியக்குடி ராமானுஜ அய்யங்கார் முதல் வீணை எஸ்.பாலசந்தர் வரை மிகப் பிரபலமான வித்வான்கள் அனைவருடைய கச்சேரிகளிலும் வயலின் வாசித்துள்ளார்.

இசையுலக வாழ்க்கை

தனது இசைப்பயணத்தை, தனது பிறப்பிடமான குன்றக்குடியிலுள்ள ஷண்முகநாதர் ஆலயத்தில் இசைக்கபடும் பக்தி இசையைப் பயின்று, பக்திப் பாடல்களை, ஆலய அர்ச்சகர்களுடன் இணைந்து பாடுவதிலிருந்து தொடங்கினார். ஆரம்பத்தில் தனது சமகாலத்தவர்களான செம்மங்குடி சீனிவாசய்யர், மகாராஜபுரம் சந்தானம், சூலமங்கலம் சகோதரிகள், சீர்காழி கோவிந்தராஜன், டி.என். ராஜரத்தினம் பிள்ளை, திருவெண்காடு சுப்ரமணிய பிள்ளை ஆகியோருடன் இணைந்து குழுவாக கச்சேரிகளில் பங்கேற்றார். சிறிது காலத்திற்குப் பின்னர், தனிக் குழு ஒன்றை நிறுவி, தனித்து செயல்பட்டார். மேலும், 1976ல் இருந்து, அவர் தனியாகவும் கச்சேரிகள் செய்ய ஆரம்பித்தார்.

காரைக்குடியில் நடந்த அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அவர்களின் இசைக் கச்சேரியில், பக்க வாத்தியமாக வயலின் வாசித்ததே, இவரின் முதல் வயலின் அரங்கேற்றமாகும். வலயப்பட்டி சுப்பிரமணியம் என்ற தவில் வித்வானுடன் இணைந்து, பெருமளவு வயலின் கச்சேரிகளை அரங்கேற்றிய அவர், 3000க்கும் மேற்பட்ட கச்சேரிகளை அவரது கூட்டணியில் அரங்கேற்றியுள்ளார். இவர், கர்நாடக இசை, திரைப்பட இசை போன்றவையோடு நிறுத்திக் கொள்ளாமல், பறவைகள் மற்றும் மிருகங்களின் ஓசைகள் போன்ற இயற்கை ஒலிகளையும், சிறிதளவு கூட மாற்றமில்லாமல், அப்படியே வயலினில் வாசித்தார்.

திரையுலக வாழ்க்கை

தமிழில் பக்திப் பாடல்களுக்காக அவரது சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தார். இத்துடன் அவரது இசையுலக வாழ்க்கை நின்று விடாமல், அவர் திரைத்துறையிலும் கால் பதித்தார். திரைத்துறையில் அவர், முதன்முதலில் இசையமைத்த படம், 1969ல் வெளியான ‘வா ராஜா வா’ என்ற திரைப்படமாகும். மேலும், அவர், ‘தெய்வம்’, ‘ராஜராஜசோழன்’, ‘கந்தன் கருணை’, ‘மேல்நாட்டு மருமகள்’, ‘திருவருள்’, ‘திருமலை தென்குமரி’, ‘அகத்தியர்’, ‘மனிதனும் தெய்வமாகலாம்’ உள்ளிட்ட 22 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்தார். 1970ல் வெளியான ‘திருமலை தென்குமரி’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக, தமிழக அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர் விருதைப்’ பெற்றார். பின்னர், 1983ல், அவரது சொந்தத் திரைப்படமான ‘தோடிராகம்’ என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார். தெய்வீக மணம் கமழும், பக்திச் சுவை சொட்டும் பாடல்கள் மட்டுமல்லாமல், அவர் பல தமிழ்த் திரைப்படங்களில் பின்னணியும் பாடி இருக்கின்றார். மேலும், ஒரு சில திரைப்படங்களில் (2005ல் வெளியான ‘அந்நியன்’ திரைப்படத்தில்) கௌரவ வேடங்களிலும் நடித்துள்ளார்.

பிறப்பணிகள்

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 28 ஆண்டுகளாக, தஞ்சாவூரிலுள்ள திருவையாறு தியாகராஜா சபாவின் செயலாளராக செயல்பட்ட அவர், ‘தியாகராஜா ஆராதனைகளை பல ஆண்டுகளாக நடத்தி வந்தார். ‘இசைக்கு நோய்த்தீர்க்கும் மருத்துவ குணம் உள்ளது’ என்பதை உணர்ந்து, அதில் மிகத் தெளிவாக இருந்த அவர், ‘ராக ஆராய்ச்சி மையம்’ என்ற அமைப்பை நிறுவி, ‘இசை மூலமாக, சில நோய்களுக்கு தீர்வு காண முடியுமா?’ என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அவர், ஆல் இந்தியா ரேடியோவுடன் நீண்ட நாட்கள் நட்புறவில் இருந்து வந்தார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

நெற்றியில் நீண்ட திருநீற்றுப் பட்டையும், பெரிய குங்குமப் பொட்டும் தனது அடையாளங்களாகக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான, “பத்மஸ்ரீ விருது”, இந்திய அரசால் வழங்கப்பட்டது.

‘கலைமாமணி விருது’

1970ல் வெளியான ‘திருமலை தென்குமரி’ என்ற திரைப்படத்திற்காக, ‘தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது’ பெற்றார்.

1989ல், ‘இசைப்பேரறிஞர் விருது’ வழங்கப்பட்டது.

1993 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாடமி மூலம் ‘சங்கீத் நாடக அகாடமி விருது’, மற்றும் ‘கர்நாடக இசைஞானி விருது’ பெற்றார்.

இறப்பு

குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர், சென்னையிலுள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டார். பின்னர், அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், செப்டம்பர் 8ஆம் தேதி, 2௦௦8 ஆம் ஆண்டில், மரணமடைந்தார். அவர் இறக்கும் போது, அவருக்கு வயது, 75.

காலவரிசை

1935: குன்னக்குடியில் மார்ச் 2, 1935 ஆம் ஆண்டில், ஸ்ரீ ராமஸ்வாமி சாஸ்த்ரிக்கும், திருமதி மீனாட்சிக்கும் மகனாகப் பிறந்தார்.

1947: தனது 12வது வயதிலிருந்து கச்சேரிகளில் பங்கேற்றார்.

1969: அவர் திரைத்துறையில், முதன்முதலில் ‘வா ராஜா வா’ என்ற திரைப்படத்திற்காக இசையமைத்தார்.

1970: 1970ல் வெளியான ‘திருமலை தென்குமரி’ என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக, தமிழக அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர் விருதைப்’ பெற்றார்.

1976: தனியாகவும் கச்சேரிகள் நடத்த ஆரம்பித்தார்.

1983: அவரது சொந்தத் திரைப்படமான ‘தோடிராகம்’ என்னும் திரைப்படத்தைத் தயாரித்தார்.

1989: ‘இசைப்பேரறிஞர் விருது’ வழங்கப்பட்டது.

1993: சங்கீத நாடக அகாடமி மூலம் ‘சங்கீத் நாடக அகாடமி விருது’, மற்றும் ‘கர்நாடக இசைஞானி விருது’ பெற்றார்.

2005: ஷங்கர் அவர்களின் படமான ‘அந்நியன்’ திரைப்படத்தில், அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

2008: சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், செப்டம்பர் 8ஆம் தேதி,  மாரடைப்பால் மரணமடைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top