Home » படித்ததில் பிடித்தது » விநாயகர் பெருமை!!!
விநாயகர் பெருமை!!!

விநாயகர் பெருமை!!!

கணபதி, கஜானன், ஆனைமுகத்தான் என்றெல்லாம் நம்மால் துதிக்கப்படும் பிள்ளையார் இன்று விநாயக சதுர்த்தி நன்னாளில் நாடெங்கிலும் வணங்கப்படுகிறார்.  குறிப்பாக மகாராஷ்ட்ரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அவரவர்  வீட்டில் நன்றாகக்   கொண்டாடப்பட்டு வந்த விநாயக சதுர்த்தி  விழாவினை மரியாதைக்குரிய திலகர் பெருமான் ஆங்கிலேயருக்கு  எதிராக பாரத மக்களை, குறிப்பாக ஹிந்துக்களை திரட்டுவதற்காக இத் திருவிழாவினை  சமூகத் திருவிழாவாக 1900 களில் நடைமுறைப்படுத்தினார்.
பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பதாக மிகவும் எளிமையான இறை. வயல்காடுகளில் பணி துவங்குகையில், அங்கே இருக்கும் சாணத்தைக் கொண்டு கூட பிள்ளையார் என பிடித்து வைத்து பூசிப்பதுண்டு. அதனில் சொருகப்படும் அருகம்புல்லினால், அச் சாணி கெடாது இருக்கும்.
அனைவர் வீட்டிலும் பிற தெய்வங்களுக்கு பூஜை செய்யும் சமயத்தில் மஞ்சளில் பிள்ளையார் செய்து அவர் அனுமதி பெற்றே முக்கிய பூஜை  துவங்கும்.  எத்தகைய எளிய ஓவியத்திலும் சிறப்பாய் விளங்கிடும் தெய்வம், கம்ப்யூட்டர் யுகத்தில் வித விதமாய் ஓவியங்கள் வருகின்றன. விநாயகர் கம்ப்யூட்டர் இயக்குவது போன்றெல்லாம், அதே போல் வித விதமாய் சிலைகளும்.
தமிழகத்தில், வாதாபி மீது படை எடுத்து வந்த பரஞ்சோதி என்பார் தமிழகத்தில் விநாயக வழிபாடு கொணர்ந்தார் எனவும்,  அதன் காரனமைத்தன் வாதாபி கணபதிம் பஜேஹம் என்ற பாடல் உள்ளதாக ஒரு வாதம் உண்டு.
ஆனால் அதற்கும்  முன்னதாகவே தமிழகத்தில் வழிபாடு   நடந்துள்ளது என்பதற்கு  பிள்ளையார்பட்டி விநாயகர் சாக்ஷி, சுமார் 2  அல்லது 3   ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட சிலை என்பது,  (அதன் கீழ் சிற்பியின் கையெழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது  என்பதும்  அங்கே  இரு கையுடன், ஜடாமுடியுடனும் சிவ லிங்கத்தை வழிபடுகிறார்  என்பதும்  சுவாரசியமான  தகவல்கள்) .
ஆனால் வேத காலத்தில் விநாயக வழிபாடு இல்லை, என்பது வியக்க வைக்கும் தகவல். ஆதி சங்கரரின் பஞ்சாயதன வழிபாட்டில், இடம் பெறும் சோனபத்ரம்    அவருக்குரியது.
விநாயகரின் தலை யானை, உடல் மனிதன் (உடல் பூத வகை  என்று சொன்னால்  பஞ்ச பூதங்களால் ஆன எனப் பொருள் கொள்ள வேண்டும்)
அவர் வாஹனம் மூஞ்சூறு எனப்படும் எலி வகை.
பாலூட்டி வகையில் நிலத்தில் வாசிப்பதில் பெரியது யானை, சற்று நடுத்தரமான உருவம் மனிதன் மற்றும் சிறிய உருவம் எலி. எனவே  விநாயகரின் வடிவு தாய்மையின் வடிவம் என்பதாலே, தாய்க்கு முதலிடம் கொடுக்கும் ஹிந்துக்கள், கணேசருக்கும் முதலிடம் கொடுத்துள்ளார்கள்.
       பெரும்பாலான நூல்களில் அவர் வழிபாட்டு செய்யுள் இடம் பெறும். அவருக்கென விநாயகர் அகவல் ஒளவையாரால் தனியாகப் பாடப்பட்டுள்ளது. அது  முழுவதும் யோக சாஸ்திரத்தை குறிப்பதாக உள்ளது.
அவருக்கு தமிழகத்தில் சிறப்பாக பிள்ளையார்பட்டி, திருச்சி, கோவை,  புதுவை  ஆகிய  ஊர்களில்  தனிக்  கோயில்கள் உள்ளன.
மதுரையில் இருக்கும் முக்குறுணி (1  குறுணி என்பது 6 படி) விநாயகருக்கு 18  படி அரிசி கொண்டு கொழுக்கட்டை படைப்பர், அது ஒரு வாரம் முன்னரே அடுப்பில் ஏற்றப்படும்.
நம்மில் நிறைந்திருக்கும் ஞானத்தை, மாயை மறைத்து இருக்கிறது என்பதன் குறியீடே  கொழுக்கட்டை.  (பூரணம் ஞானம், மாவு மாயை)   18  என்ற எண்ணின் சிறப்பிற்கு கீதையின் அத்தியாயம் ஒன்றே தற்பொழுது போதுமானது.
விநாயகர் அகவல்: ஒரு தத்துவ அறிமுகம்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவைப் பிராட்டியாரால்அருளிச் செய்யப்பட்டது. இது தமிழ்ச் சைவர்களின் நித்திய பாராயண நூல்களில் ஒன்றாக விளங்குகின்றது. தமிழர்கள் கைக்கொண்டொழுகிய வழிபாட்டுநெறியோடு யோகநெறியையும் விளக்கியருளும் சிறப்பு வாய்ந்தது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த நூல் தமிழருக்கு அறிவிக்கும் அரிய செய்திகளை இக்கட்டுரை திரட்டித் தருகின்றது. இக்கருத்துக்கள் சைவசித்தாந்தப் பேராசிரியர் திரு இரா.வையாபுரியார் அவர்கள் விநாயகர் அகவலுக்கு எழுதியுள்ள பேருரையினின்றும் திரட்டப் பட்டது.

‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர், சிவபுரத்திலுள்ளார்’. விநாயகர் அகவலைப் பாராயணம் செய்யும்போது இப்பொருள்கள் நினைவுக்கு வந்து பாராயணத்தைப் பயனுடையதாக்கும்.

இந்நூல் 15ஆவது வரி ‘அற்புதம் நின்ற கற்பகக் களிறே’ என்று கூறுவதால் இந்நூலில் கூறப்படும் விநாயகப் பெருமானின் திரு நாமம் ‘கற்பக விநாயகர்’ என்பது.

அவர் தன் நிலையில்,

• சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டாதவர்.
• துரியநிலையில் இருப்பவர்.
• ஞானமே சொரூபமாக இருப்பவர்.

இது அவருடைய சொரூப நிலை அல்லது உண்மை நிலை எனப்படும். இது பரசிவமாக இருக்கும் நிலை.

ஞானமே சொரூபமாக உடைய பரசிவம் தன்னை அடியவர்கள் வழிபட்டு உய்வதற்காகவும் அடியவர்களுக்கு அருள் செய்வதற்காகவும் அற்புதமான வடிவம் கொண்டு காட்சிக்கும் நினைப்புக்கும் சொல்லுக்கும் எட்டுபவராக எளிவந்து அருளும். அத்தகைய அற்புதக் கோலங்களில் ஒன்று விநாயக வடிவம். ( அற்புதம் – அற்புதம் என்பது உலகில் எங்கும் காணப்படாது இயற்கைக்கு மாறாக நிகழ்வது. இது திருவருளால் மட்டுமே நிகழ்வது.)

அவ்வற்புத வடிவமானது:

• தாமரை மலர்போன்ற மென்மையும் அழகும் மலர்ச்சியும் உடைய திருவடிகள்.
• அத்திருவடிகளில் இனிய ஒலியெழுப்பும் சிலம்பு.
• பொன்னரைஞாண்.
• அழகிய பட்டாடை அணிந்த இடுப்பு
• பேழை (பெட்டி) போன்ற வயிறு.
• பெரிய வலிமை மிக்க தந்தம்.
• யானைமுகம்.
• முகத்தில் அணிந்த சிந்தூரம்.
• ஐந்துகைகள்.
• அங்குசம், பாசம் என்னும் ஆயுதங்கள்.
• நீலமேனி (நீலம் – கருமை)
• தொங்குகின்ற வாய்.
• நான்கு தோள்.
• மூன்று கண்.
• கன்னத்தில் மதநீர் வடிந்த சுவடு.
• இருபெரிய செவிகள்.
• பொற்கிரீடம்
• பூணூல் புரள்கின்ற மார்பு.

இது குணங்குறி அற்ற பரசிவம் உயிர்களுக்கு அருளும் பொருட்டு மேற்கொள்ளும் வடிவங்களுள் ஒன்று. அதனால் தடத்த வடிவம் அல்லது தடத்த நிலை எனப்படும். இறைவடிவங்களைத் தரிசித்துத் தொழும்போது திருவடியிலிருந்து தொடங்கி உச்சிவரைக் கண்டு திருமேனியில் விழியைப் பதித்தல் முறை. திருவடி என்பது திருவருள்.  திருவருளால் இக்காட்சி நடைபெறுகின்றது என்பது பொருள்.

•  அவருக்கு நிவேதனப் பொருள்கள் முப்பழம்.
•  ஊர்தி மூஷிகம்
•  அவர் தன்னை வழிபடும் அடியவர்களுக்குத் தாய்போன்ற அன்புடையவர்.
•  எப்பொழுதும் அடியவர்களைப் பிரியாமல், அவர்களுடைய அறிவுக்கு அறிவாய், அறிவினுள்ளே இருந்து அவர்களுக்கு வாழ்வில் வழிகாட்டுவார்.
•  அடியவர்களுக்குப் பக்குவம் வந்த காலத்தில் குருவடிவாக வெளிப்பட்டு வந்து, முன் நின்று தீக்கை செய்து உண்மை ஞானம் புகட்டுவார்.
•  அடியவர்களை யோகநெறியிலும் ஞானநெறியிலும் நிற்கச் செய்வார்.
•  ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலப் பிணிப்பிலிருந்து விடுபடச் செய்வார்
•  நின்மல அவத்தை (அருளுடன் கூடிநிற்கும் நிலை) யில் நிற்கச் செய்வார்.
•  அளவில்லாத ஆனந்த அனுபவம் விரியச் செய்வார்.
•  இறுதியில் தன்னைப்போலத் தன் அடியவர்களையும் என்றும் மாறாத அழியாத நிலையில் (தத்துவநிலை) நிற்கச் செய்வார்.

விநாயகப் பெருமான் உணர்த்தும் ஞானநெறி

•  குருவாக வந்து தீக்கை அருளுகின்றார்

•  இதுவரையிலும் அவ்வுயிர் செத்துப் பிறந்து உழல்வதற்குக் காரணமான மயக்க அறிவைப் போக்குகின்றார்.

•  திருவைந்தெழுத்தை (‚ பஞ்சாக்கரம்) நெஞ்சில் பதிவிக்கின்றார்.

•  உள்ளத்தில் வெளிப்பட்டு விளங்கி நிற்கின்றார்.

•  பதி, பசு, பாசம் எனும் அனாதியான முப்பொருள்களின் இயல்பினை விளக்கி உரைக்கின்றார். சஞ்சிதம் எனும் பழவினையைப் போக்குகின்றார். ஞானோபதேசம் செய்கின்றார்.

•  உபதேசித்த ஞானப்பொருளில் ஐயம்,  திரிபு ஆகியன நேரிடாமல் தெளிந்த உணர்வு உண்டாமாறு அருளுகின்றார்.

•  ஐம்புலன்கள் விடயங்களை நோக்கி ஓடி விருப்பு வெறுப்புக் கொண்டு துன்புறாதபடி புலனடக்கம் உண்டாவதற்குரிய வழியினைக் காட்டியருளுகின்றார்.

•  உடம்பில் உள்ள தத்துவக் கருவிகள் எவ்வாறு ஒடுங்குகின்றன என்பதை அறிவிக்கின்றார்.

•  பிராரத்த வினை தாக்காதவாறு காப்பாற்றுகின்றார்.

• ஆணவம லத்தால் வரும் துன்பத்தைப் போக்குகின்றார்.

•  ஆன்மாவை நின்மல நிலைக்கு உயர்த்தி நின்மலதுரியம் நின்மலதுரியாதீதம் என்னும் நிலைகளில் திருவருளுடனும் சிவத்துடனும் கலந்து நிற்கச் செய்கின்றார்.

குருவாக வந்த விநாயகப் பெருமான் இவ்வாறு ஞானநெறியை அருளி, இந்த ஞானநெறியில் நெகிழ்ந்து விடாது உறுதியாய் நிற்பதற்குரிய யோகநெறியினையும் அறிவித்தருளுகின்றார்.

•  ஒன்பது வாயில்களை உடைய உடம்பில் உள்ள ஐம்புலன்கள் ஆகிய கதவுகளை அடைத்து மனம் உள்ளே (அகமுகப்பட்டு) நிற்கச் செய்கிறார்.

•  இதனால் ஆதாரயோகம் மேற்கொள்ளும் முறையினைத் தெளிவிக்கின்றார்.

•  மவுனசமாதி நிலையினை அடையச் செய்கின்றார்.

•  இடநாடி, வலநாடி, சுழுமுனா நாடி என்னும் நாடிகளின் வழியாய் மூச்சுக்காற்று இயங்கும் முறையினைத் தெரிவிக்கின்றார்.

•  சுழுமுனா நாடி மூலாதாரத்திலிருந்து கபாலம் வரையிலும் (தலையுச்சி) சென்று நிற்கும் நிலையினைத் தெரிவிக்கின்றார்.

•  அவ்வாறு செல்லும் வழியில் உள்ள அக்கினி மண்டலம், சூரிய மண்டலம், சந்திர மண்டலம் என்னும் பகுதிகளின் இயல்பைத் தெரிவிக்கின்றார்.

• மூலாதாரத்தில் உள்ள ஹம்ச மந்திரம், குண்டலினி சத்தி, பிரணவ மந்திரம் என்பனவற்றின் இயல்பினைத் தெரிவிக்கின்றார்.

•  இடகலை, பிங்கலை என்னும் மூச்சுக்காற்ரினால் குண்டலினி என்னும் சத்தியை எழுப்பிச் சுழுமுனைநாடி வழியாக மேலே கபாலம் வரையிலும் பிரணவமந்திரத்துடன் ஏற்றும் முறையினையும் தெரிவிக்கின்றார்.

•  இவ்வகையில் பிரணவமந்திரம் பலகலைக்களாகப் பிரிக்கப்பட்டு, (மூன்று, ஐந்து, பன்னிரண்டு, பதினாறு) உடம்பில் அங்கங்கே நிறுத்தித் தியானிக்கப்படுவதாகிய பிராசாத யோகம் என்னும் நெறியினையும் கற்பிக்கின்றார்.

•  இப்பிராசாத யோகத்தினால் ஆன்மா பிரமரந்திரம் (தலையுச்சி) என்னும் இடத்தையும் கடந்து மேலே துவாதசாந்தப் பெருவெளி என்னும் இடம்வரையிலும் சென்று சிவத்துடன் கலந்து நின்று சிவானந்தம் அனுபவிக்கச் செய்கின்றார்.

• இவ்வாறு ஆறாதார யோகம், அட்டாங்க யோகம், பிராசாத யோகம் என்னும் முறைகளில் நிற்கச் செய்து மனோலயம் அடையச் செய்கின்றார்.

•  இதனால் உண்டாகும் அகக் காட்சியினால் ஆன்மாவின் இயல்பு,  உடம்பின் இயல்பு,  மாயாமலம் கன்மமலம் ஆணவமலம் என்பனவற்றின் உண்மையியல்பு ஆகியவற்றை அறிய வைக்கின்றார்.

•  சப்தப்பிரபஞ்சம் (ஒலியுலகம்) அர்த்தப்பிரபஞ்சம்(பொருளுலகம்) என்பனவற்றினியல்பையும் அவற்றில் பரம்பொருள் சிவலிங்கரூபமாகக் கலந்திருக்கும் முறையினையும் அறியச் செய்கிறார்.

•  இத்தகைய பரம்பொருள் மிகச் சிறிய பொருள்களுக்கெல்லாம் மிகச் சிறியதாகவும், மிகப் பெரிய பொருள்களுக்கெல்லாம் மிகப் பெரிய பொருளாகவும் இருக்கும் நிலையை உணரச் செய்கின்றார்.

•  இத்தகைய பரம்பொருள்சை உலகவாழ்வில் இருந்துகொண்டே அறிவதும் அப்பொருளுடன் கலந்து ஆனந்தம் அனுபவிப்பதும் கரும்பினைக் கணுக்கணுவாகச் சுவைத்துச் செல்லும் அனுபவம் போன்றது.

• இந்த அனுபவம் நீடித்திருக்கத் திருநீறு உருத்திராக்கம் முதலிய சிவசின்னங்களை அணிய வேண்டும்.
•  அவற்றையும் அவற்றை அணிந்துள்ள அடியார்களையும் சிவமெனவே கண்டு வழிபடுதல் வேண்டும்.

•  எப்பொழுதும் அடியார் கூட்டத்துடன் கலந்திருத்தல் வேண்டும்.

•  திருவைந்தெழுத்து மந்திர செபத்தைக் கைவிடலாகாது.

இவ்வாறு விநாயகப் பெருமான் பக்குவமுடைய ஆன்மாவுக்கு ஞானோபதேசம் செய்து ஞானநெறியிலும் யோகநெறியிலும் நிற்கச் செய்து இவ்வுலகிலேயே சீவன்முத்தனாக இருந்து சிவானந்தம் அனுபவிக்கும் நிலையினையும் தந்து, அவ்வான்மா சிவத்தைப் போலென்றும் ஒரேதன்மையுடையதாய் இருக்கும் நிலையினை அடையச் செய்கிறார்.

அந்நிலையிலிருந்து அவ்வான்மா தன்னைவிட்டு நீங்காமல் தனக்கே அடிமையாய் இருக்கும் நிலைமையினையும் விநாயப் பெருமான் அருளுகின்றார் என்னும் அரிய செய்திகளை விநாயகர் அகவல் என்னும் இந்த நூல் கூறுகின்றார்.

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?

விநாயகர் சதுர்த்தி வர இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் அனைவரும் மிகவும் ஆவலாக காத்திருக்கும் பண்டிகை இதுவாகும். வட்டாரங்கள் மற்றும் பண்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, யானையின் தலையை கொண்ட கடவுளை ஒவ்வொரு இந்து வீட்டிலும் பயபக்தியுடன் வணங்கிடுவார்கள்.

யானையின் தலை, தொந்தி வயிறு, எலியின் மீது சவாரிப்பது என விநாயகரை பல வடிவங்களில் குறிப்பிடுகிறோம்.

அவ்வளவு பெரிய கடவுளான விநாயகர் ஏன் ஒரு சின்ன சுண்டலி மீது பயணிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள பலருக்கும் பெரிய ஆவல் இருக்கும். சொல்லப்போனால், விநாயகர் இப்படி எலியின் மீது சவாரி செய்வதற்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையும் உள்ளது.

அனைத்து தடங்கல்களையும் நீக்கி, பாரபட்சம் இன்றி அனைவரையும் ஆசீர்வதிப்பவர் தான் விநாயகர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். மற்ற கடவுள்களை வணங்குவதற்கு முன்பாக விநாயகரை ஏன் வணங்க வேண்டும் என்பதற்கு அவர் எலியின் மீது பயணிக்கும் கதையே விளக்கமளிக்கும்.

விநாயகர் பயணிக்கும் எலி, கடந்த ஜென்மத்தில் முனிவரால் சபிக்கப்பட்ட ஒரு உபதேவதையாக விளங்கியது என்ற விஷயம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். விநாயகர் ஏன் எலியின் மீது பயணிக்கிறார் என்ற கதையை முழுமையாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

க்ரோன்ச்சாவின் கதை விநாயக புராணத்தின் படி, விநாயகரின் எலி கடந்த ஜென்மத்தில் உபதேவதையாக இருந்துள்ளது. அதனை க்ரோன்ச்சா என அழைத்தனர். இந்திரனின் அரச சபையில் வாமதேவ முனிவர் என்ற மிகுந்த ஞானம் கொண்ட முனிவரின் கால்களை க்ரோன்ச்சா மிதித்து விட்டது.

வேண்டும் என்றே தன் காலை மிதித்து விட்டது என எண்ணி, வெகுண்டு எழுந்த வாமதேவ முனிவர், அதனை ஒரு எலியாக மாற சாபம் அளித்தார். இதனை கேட்டு அதிர்ந்த க்ரோன்ச்சா, அவர் காலில் மண்டியிட்டு கருணை காட்ட மன்றாடியது. இது வாமதேவ முனிவரின் கோபத்தை குறைத்தது. தன் சாபத்தை திருப்பி பெற இயலாது என கூறினார்.

ஆனால் விநாயகரின் வாகனமாக விளங்கும் எனவும் கூறினார். அதனால் அனைவராலும், ஏன் பிற கடவுள்களாலும் கூட வணங்கப்படும் ஒன்றாக மாறியது. இதன் விளைவாக, வாமதேவ முனிவரின் சாபத்தினால் க்ரோன்ச்சா எலியாக உருமாறி, மகரிஷி பரஷர் ஆசிரமத்தில் விழுந்தது.

க்ரோன்ச்சாவின் பயங்கரவாதம் இருப்பினும் க்ரோன்ச்சா சாதாரண எலியல்ல. சொல்லப்போனால், மலையளவில் பெரியதாக விளங்கியது. அதே போல் அதனை பார்த்த அனைவரையும் அஞ்ச வைத்தது. பல வகையான தொந்தரவுகளை அளித்து, கண்ணில் பட்ட அனைத்தையும் அழித்து வந்தது. உலகத்தில் வாழ்ந்த மக்களுக்கு பயங்கரத்தின் மற்றொரு அர்த்தமாக விளங்கியது.

விநாயகரின் வாகனம் இந்நேரத்தில் தான் பரஷர் ரிஷியின் ஆசிரமத்திற்கு விநாயகர் அழைக்கப்பட்டார். அவரை பரஷர் ரிஷியும் அவரின் மனைவியுமான வத்சலாவும் கவனித்துக் கொண்டனர். ராட்சச எலியை பற்றியும், அது உருவாக்கியுள்ள பயத்தை பற்றியும் கேள்விப்பட்ட விநாயகர் அதனை எதிர்கொள்ள முடிவெடுத்தார்.

தன் ஆயுதங்களின் ஒன்றான பாஷாவை (சுருக்கு) எடுத்த விநாயகர், க்ரோன்ச்சா இருக்கும் திசையில் அதனை பறக்க விட்டார். அந்த பாஷா மிகவும் பிரகாசமாக இருந்ததால் அதன் வெளிச்சம் இந்த அண்டம் முழுவதும் படர்ந்தது. எலியை துரத்திய பாஷா அதன் கழுத்தை சுற்றிக் கொண்டது. அதை அப்படியே விநாயகரின் காலடியில் கொண்டு சேர்த்தது.

இதனால் விநாயகரிடம் மன்னிப்பு கோரிய க்ரோன்ச்சா அவரின் வாகனமாக மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top