உடல் சூடு தரும் லவங்கம்…
கண் பார்வைக்கு வெந்தயம்!
லவங்கம்: பல் வலிக்கு, முதலில் லவங்க எண்ணெய் வைத்து விட்டு, பிறகு பல் மருத்துவர்களிடம் செல்பவர்கள் அநேகர்.
பல பாடகர்கள், கச்சேரிக்கு முன்பு 1 கிராம்பை வாயில் போட்டு மென்று கொண்டேயிருப்பார்கள். தொண்டையில் இருக்கும் சளியைத் தடுக்கும் ஆற்றல், கிராம்பிற்கு உண்டு. தீராத இருமல், தொண்டை கட்டு, தொண்டை கரகரப்பை லவங்கம், மஞ்சள் பொடி, துளசி சேர்த்துக் கொதிக்க வைத்த நீரைச் சூடாக குடித்தால், உடனே குணம் தெரியும்.
தலைச்சுற்றல், பித்த வாந்திக்கு, லவங்கப் பொடி, தேன் மற்றும் உப்புக் கலந்து நாக்கில் தடவலாம். முகப் பொலிவிற்கு உபயோகப்படுத்தப் படுகிறது. வடநாட்டு சமையல்களில், லவங்கம் கட்டாயமாக சேர்க்கப்படுகிறது.
குளிர் காலங்களில் லவங்கப்பொடி சேர்த்த தேனீர், உடலுக்கு சூடு விளைவித்து, குளிர் தாங்கக் கூடிய சக்தியை அளிக்கிறது.
“Halitosis” என்னும் வாய் துர்நாற்றம், விக்கல் போன்றவற்றிற்கு, லவங்கம் மிகவும் உபயோகப்படுகிறது. லவங்கத்தில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், அயோடின், கொழுப்புச்சத்து, நார் சத்து உள்ளது. இது நாட்டு மருந்து மட்டுமல்ல, சக்தியும் தரவல்லது.
வெந்தயம்: வெந்தயத்தில் பி1, பி2, பி3, பி6, பி12, டி உள்ளன. இது கண்களுக்கு மிக நல்லது. சிறந்த மலமிளக்கி என்பதுடன், ஜுரம், சர்க்கரை நோய், ஆஸ்த்துமா, சைனஸ் போன்றவற்றிற்கு, சிறிது தேனுடன் குழைத்துச் சாப்பிடவேண்டும். சுடு தண்ணீரில், வெந்தயம் கட்டிய மூட்டையை வைத்து, ஒத்தடம் தரலாம்.