Home » பொது » சாவர்க்கரின் தமிழகத் தோழர்
சாவர்க்கரின் தமிழகத் தோழர்

சாவர்க்கரின் தமிழகத் தோழர்

வ.வே.சு.ஐயர்
(பிறப்பு: 1881, ஏப். 2- மறைவு: 1925, ஜூன் 4)

திருச்சி நகரத்தில் ஒரு பகுதி வரகநேரி. இங்கு கல்வி இலாகாவில் பணிபுரிந்து கொண்டிருந்த வேங்கடேச அய்யர் என்பவருக்கும் காமாட்சி அம்மாளுக்கும் 1881, ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி பிறந்தவர் வ.வே.சுப்பிரமணியம் என்கிற வ.வே.சு.ஐயர்.

திருச்சியில் இவரது ஆரம்பக் கல்வி. தனது 12-ஆவது வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பிறகு திருச்சி தூய வளனார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அப்போது வழக்கறிஞராகப் பணியாற்ற பிளீடர் என்ற ஒரு தேர்வு இருந்தது. அதைப் படித்து வக்கீலாக இவர் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும்போதே திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் பாக்கியலட்சுமி.

இவருடைய உறவினர் ஒருவர் பர்மாவில் ரங்கூனில் இருந்தார்; பெயர் பசுபதி ஐயர். அவரிடம் சென்று ரங்கூனில் வக்கீலாகப் பணியாற்றினார் வ.வே.சு.ஐயர். அங்கு தான் லண்டன் சென்று பாரிஸ்டராக வேண்டுமென்கிற ஆசை இவருக்கு வந்தது. லண்டன் புறப்பட்டுச் சென்றார். ரங்கூனில் இருக்கும்போது திருச்சியைச் சேர்ந்தவரும் மருத்துவத் தொழில் புரிந்து வந்தவருமான தி.சே.செளந்தரராஜன் என்பவரின் நட்பு கிடைத்தது. இவர் தான் புகழ்மிக்க டி.எஸ்.எஸ்.ராஜன் ஆவார்.

இங்கிலாந்துக்குச் சென்ற ஐயர் அங்கிருந்த ‘இந்தியா ஹவுஸ்’ எனுமிடத்தில் தங்கினார். ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா என்பவருக்குச் சொந்தமானது இந்த இந்தியா ஹவுஸ். அவர் ஒரு சிறந்த தேசபக்தர். அங்கு இவருக்கு வீரர் விநாயக தாமோதர சாவர்க்கருடைய நட்பு கிடைத்தது. அங்கிருந்த தேசபக்தர்கள் ஒன்றுகூடி இந்தியா சுதந்திரம் பெற வேண்டியதன் அவசியத்தை பிரிட்டிஷ் மக்களுக்கு விளக்கிச் சொல்லும் பணியை மேற்கொண்டனர்.

இவர்களுடைய நடவடிக்கைகளைக் கவனித்து வந்த பிரிட்டிஷ் அரசு இவர்களுக்குப் பல விதங்களிலும் தொல்லைகள் கொடுத்தது. அதைத் தவிர்க்க இவர்கள் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் குடிபுகுந்தனர். அப்போது ஷியம்ஜி கிருஷ்ண வர்மா இறந்து போனார்.

லண்டனில் பாரிஸ்டர் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் இவர் அந்தப் பட்டத்தை நிராகரித்துவிட்டார். தேசபக்திதான் அதற்குக் காரணம்.

அப்போது 1910-இல் லண்டனில் கர்ஸான் வில்லி எனும் ஆங்கிலேய அதிகாரி மதன்லால் திங்க்ரா எனும் தேசபக்த இளைஞனால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதன் காரணமாக இந்தியா ஹவுசில் குடியிருந்த அனைத்து இந்தியர்களுக்கும் பிடித்தது சனியன். போலீஸ் தொல்லை அதிகரித்தது. விடுதி சோதனைக்குள்ளாகியது. திங்க்ராவுக்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பாரிசிலிருந்து லண்டன் வந்த சாவர்க்கரை ஆங்கில அரசாங்கம் கைது செய்து சிறையில் அடைத்தது. வ.வே.சு.ஐயர் இவரைச் சிறையில் சென்று சந்தித்தார். அதனால் ஐயர் மீது சந்தேகப்பட்ட ஆங்கில அரசு இவரையும் கைது செய்ய திட்டமிட்டது. இந்தச் செய்தியை எப்படியோ ஐயர் தெரிந்து கொண்டார். சாவர்க்கரும் ஐயரை எப்படியாவது சிறைப்படாமல் தப்பி இந்தியா போய்விடுமாறு கேட்டுக் கொண்டார்.

ஐயர் ஏற்கனவே தாடி மீசை, தலைமுடி இவற்றை வளர்த்துக் கொண்டிருந்தார். அதோடு ஒரு சீக்கியர் போல உடை அணிந்துகொண்டு தனது கைப்பெட்டியுடன் கிளம்பி கப்பல் ஏறச் சென்றார். இவர் பெட்டியில் இவரது பெயரின் முன் எழுத்துக்களான ‘வி.வி.எஸ்’ பொறிக்கப்பட்டிருந்தது. இவரைப் பல இடங்களிலும் தேடிய போலீஸ், இந்தியா செல்லவிருந்த கப்பலில் ஏறியிருந்த இந்தியர்களைச் சோதனையிட்டது. அதில் ஒரு சர்தார் இருந்ததைப் பார்த்தார். இவர்களுக்கு வ.வே.சு.ஐயர் பற்றிய அடையாளங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த சர்தார் நிச்சயமாக ஐயராக இருக்க முடியாது என்று நினைத்தனர்.

எனினும் ஒரு சந்தேகம். அவரைச் சோதித்துப் பார்த்து விடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது ஐயர் பெயருக்கு வந்ததாகப் பொய்யான ஒரு தந்தி கவரை, அதன் மீது வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருந்ததை அவரிடம் கொடுத்தனர். அந்த உறையை வாங்கிப் பார்த்த ஐயர், “ஓ! இது எனக்கு வந்த தந்தி அல்லவே. வி.வி.எஸ். ஐயர் என்பவருக்கல்லாவா வந்திருக்கிறது” என்றார். போலீசார் விடவில்லை. “மன்னிக்க வேண்டும். இதோ உங்கள் பெட்டியில் வி.வி.எஸ்.ஐயர் என்று எழுதப்பட்டிருக்கிறதே” என்றனர். உடனே சமயோசிதமாக ஐயர், “அதுவா, என் பெயர் வி.விக்ரம் சிங், அதன் சுருக்கம்தான் இந்த வி.வி.எஸ்” என்றார் நிதானமாக. எவ்வித ஆபத்தான சூழ்நிலையிலும் நிதானம் தவறாதவர் ஐயர் என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிகிறது.

ஓராண்டு காலம் பாரிசில் தங்கிய ஐயர் பிறகு ரோம் நகருக்குப் போனார். அங்கிருந்த பல மாறுவேஷங்களில் பல ஊர்களுக்கும் சென்றுவிட்டு கப்பலில் இந்தியா நோக்கிப் பயணமானார். இவர் கடலூரில் இறங்கி அங்கிருந்த நடந்தே புதுச்சேரி போய்ச் சேர்ந்தார். ஐயர் புதுச்சேரி வந்த செய்தி போலீசாருக்கு நெடுநாள் கழித்தே தெரிந்தது. இங்கும் போலீஸ் தொல்லை இவரைத் தொடர்ந்தது.

இந்த சூழ்நிலையில் திருநெல்வேலியிலிருந்து சிலர் வந்து புதுச்சேரியில் ஐயரைச் சந்தித்தனர். அவர்களுக்கு ஐயர் துப்பாக்கிச் சுடக் கற்றுக் கொடுத்தார். அதில் வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, மாடசாமி ஆகியோரும் அடங்குவர். 1911-ஆம் வருஷம் அப்போது திருநெல்வேலி ஜில்லா கலெக்டராக இருந்த ஆஷ் என்பார் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்ட வாஞ்சிநாதன் எனும் இளைஞரும் தன்னையே சுட்டுக்கொண்டு இறந்து போனார். இவர் ஏற்கனவே புதுச்சேரி சென்று அங்கிருந்த சுதேசித் தலைவர்களைச் சந்தித்ததனால், புதுச்சேரி சுதேசிகள் ஐயர் உட்பட அனைவரும் சந்தேக வலையில் சிக்கிக்கொண்டார்கள்.

புதுச்சேரியில் ஐயருக்கு எத்தனை தொல்லைகள் தரவேண்டுமோ அத்தனையையும் போலீசார் தந்தனர். இவ்வளவு தொல்லைகளுக்கு இடையிலும் இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

முதல் உலக யுத்தம் 1918-இல் முடிந்தது. இந்திய தேசபக்தர்களுக்கு மாற்றம் நேரிடும் என்ற உணர்வு வந்தது. அதனால் 1918-இல் பாரதியார் இந்திய எல்லைக்குள் நுழைய கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு விடுதலையானார்.

1920-இல் ஐயர் இந்திய எல்லைக்குள் வந்தார். வந்த பின் இந்தியா முழுவதும் சில மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஹரித்துவார், கவி ரவீந்திரரின் சாந்திநிகேதன், மகாத்மா காந்தியின் சபர்மதி ஆகிய ஆசிரமங்களுக்கும் சென்று வந்தார். இது போன்ற குருகுலம் ஒன்றை தமிழகத்தில் தொடங்க ஆர்வம் கொண்டார்.

ஊர் திரும்பிய பின் ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக அமர்ந்தார். அதில் வெளியான கட்டுரை ஒன்று தேச விரோதமானது என்று சொல்லி இவருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை கிடைத்தது. அப்போது பெல்லாரி சிறையில் இருந்த போதுதான் கம்ப ராமாயண ஆங்கிலக் கட்டுரையை எழுதி முடித்தார். 1922-இல் சிறையிலிருந்து விடுதலையான ஐயர் திருநெல்வேலி ஜில்லாவில் சேரன்மாதேவி எனுமிடத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஓர் ஆசிரமம் நிறுவினார். அதற்கு ‘பரத்துவாஜ ஆசிரமம்’ என்று பெயர்.

மிக நன்றாக நடந்து வந்த இந்த ஆசிரமத்துக்கு வழக்கமான தமிழ்நாட்டு அரசியல் விளையாட்டால் ஒரு கெட்ட பெயர் வந்தது. ஆசிரமத்தில் அனைத்து ஜாதிக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உணவும் சமபந்தி போஜனமும்தான் கொடுக்கப்பட்டது. ஆனால் புதிதாகச் சேர்ந்த சில பிராமணக் குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தனியாக உணவு பரிமாற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர்களுக்குத் தனியாக உணவளிக்க ஐயர் ஏற்பாடு செய்தார்.

ஆனால் ஐயர் மற்ற எல்லா குழந்தைகளோடும்தான் உணவு அருந்தினார். அவர் மட்டுமல்ல, அவர் பெண் மற்றும் மற்ற பிராமணக் குழந்தைகளும் அப்படியே. ஆனால் அவரைப் பிடித்த துரதிர்ஷ்டம், இப்படி சில பிராமணப் பிள்ளைகளின் பெற்றோர் ஒரு நிபந்தனையாகக் கேட்டுக் கொண்டதற்கிணங்க தனி உணவு அளித்தது ஜாதிப் பிரச்னையாக உருவெடுத்தது. அது பிரம்மாண்டமாக வளர்ந்தது.

தமிழ்நாட்டு வழக்கப்படி, இங்கு ஜாதியை வைத்துத்தான் அரசியல், ஆகையால் ஐயர் மீது ‘ஜாதி வெறியன்’ என்ற முலாம் பூசப்பட்டது. பூசிய தலைவர்கள் ஈ.வே.ராமசாமி நாயக்கர், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர்.

மகாத்மா காந்தி வரையில் இந்த பிரச்னை எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் ஐயர் மிகவும் மனம் வருந்தி நொந்து போனார்.

இந்த நிலையில் 1925-இல் ஜுன் மாதம் குருகுலக் குழந்தைகளோடு பாபநாசம் அருவிக்கு சுற்றுலா சென்ற போது, அவரது மகள் சுபத்ரா அருவியைக் கடக்கத் தாண்டியபோது அவளது தாவணி நீரில் பட்டு அவளை அருவிக்குள் இழுத்துக் கொண்டது.

அவளைக் காப்பதற்காக அவளைத் தொடர்ந்து தண்ணீரில் பாய்ந்த ஐயரும் அருவிக்குள் போய்விட்டார் (1925, ஜுன் 4). இருவரின் உடலும் கிடைக்கவில்லை. ஒரு மகத்தான வீரபுருஷனின் இறுதிக் காலம் அவலச்சுவையோடு முடிந்து போய்விட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top