எரிமலை!!!

எரிமலை!!!

எரிமலை உருவாவது எப்படி?

எரிமலை பத்தி பெருசா நமக்கு ஒன்னுந்தெரியாது. பள்ளிக்கூடத்துல படிக்கும்போது, எரிமைலைன்னா என்ன, உலகத்துல அது எங்கெங்கே இருக்குங்கிற மாதிரியான சில செய்திகள மட்டும் படிச்ச அனுபவமுண்டு. நம்ம ஊருல இல்லைங்கிறதுனால அதப் பத்தி பெருசா அலட்டிக்கிட்டதில்லை இதுவரைக்கும்?!

சில எரிமலைகள் பத்தி சில விஷயங்கள தெரிஞ்சிக்கிட்டதுண்டு. எரிமலையப் பத்தி நெனச்சாலே, ஏதோ திடீர்னு நம்ம வீட்டுக்குப் பக்கத்துல வெடிக்கப் போறது மாதிரி, கொஞ்சம் பயமாவும், திகிலாவும்தான் இருக்கும்.

எரிமலையப் பத்தி நமக்குத் தெரியாத பல உண்மைகள அலசி ஆராயத்தான் இந்தப் பதிவு. கெளம்புங்க போலாம் , எரிமலைப் பதிவுச் சுற்றுலாவுக்கு……

உலகத்துல மொத்தம் (குறைந்த பட்சம்), 1,500 எரிமலைகள் தொடர்ந்து (பல வருடங்களாக)  தீக்குழம்பைக் கக்கிக்கிட்டே இருக்குதாம்.  மாக்மா (நக்மா இல்லீங்க! ;-)) அப்படீங்கிற பாறைக் குழம்புகள், பூமியின் மிருதுவான பகுதிகளை உடைத்துக் கொண்டு வெடிக்கும்போது, பாறைகளின் தீக்குழம்புகளை எட்டுத்திக்கும் வாரி இறைக்கும் ஒரு நிகழ்வையே நாம் எரிமலை என்கிறோம்!

உண்மையில், இந்தப் பாறைக் குழம்புகள், வருடக்கணக்கில் (இருட்டில் பதுங்கியிருக்கும் திருடன் மாதிரி) பூமிக்கு அடியில், நூற்றுக்கணக்கான வருடங்கள்கூட பதுங்கி இருக்குமாம். எதிர்பாராதவிதமாக, திடீரென்று ஒரு நாள் வெடித்துச் சிதறுமாம்.  எரிமலைகள் பற்றி இதுவரை நாம் அறிந்திறாத பல உண்மைகளை தெரிஞ்சிக்கலாம் வாங்க….

எரிமலையைப் பற்றிய திகிலூட்டும் பல உண்மைகள்!

  1. உலகிலேயே, எரிமலைப் பாறை பியூமீஸ் என்னும் பாறை மட்டுமே தண்ணீரில்மிதக்கும் தன்மை கொண்டது. வெளிர் வெண்மை நிறத்தில் இருக்கும் இந்த பாறைகள், எரிமலையின்போது வெடித்துச் சிதறி பின்பு குளிரும் பாறைகளிலிருந்து பல வாயுக்கள் வெளியாவதால் ஏற்படும் ஓட்டைகளைக் கொண்டது!
  2. உலகிலேயே மிக பயங்கரமான எரிமலைகள் சூப்பர் எரிமலைகள்எனப்படுகின்றன! இவை வெடித்துச் சிதறும்போது,பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தீமழை பொழிவதோடு, உலகளாவிய பருவநிலை (தட்ப வெட்ப) மாற்றங்களையும் உருவாக்கும் தன்மை கொண்டவையாம். இவ்வெரிமலைகள், சில லட்ச வருடங்களுக்கு ஒரு முறைதான் வெடிக்குமாம். யப்பா…..தப்பிச்சோம்டா சாமீ….?! இத்தகைய ஒரு எரிமலை, அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் இருக்கிறதாம். இது வெடிப்பதற்க்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஐய்யய்யோ…..!!
  3. உலகின் மிகப்பெரிய எரிமலை, இந்தோனேஷியாவின் சும்பாவா (Sumbava) தீவில் உள்ள, டாம்போரா(Tambora) மலையில்தான் வெடித்ததாம். 1815 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறிய இந்த எரிமலைக்கு, ஒரு லட்சம் மக்கள் பலியானார்களாம்! உலகின் மிகப் பெரிய எரிமலைகள், இந்தோனேஷியாவில் சுமார் 76 இருக்கின்றன என்கிறது அமெரிக்காவின் ஒருஆய்வு!
  4. பெரும்பாலான எரிமலைகள், பூமியின் மேற்புறத்தின் விளிம்புகளில்தான் ஏற்படுகின்றனவாம். ஆனால், சூப்பர் எரிமலைகள் பூமியின் ஆழ்பகுதிகளில் தீக்குழம்புகளுடன் மறைந்திருக்கின்றனவாம். அப்படியா சங்கதி….?!
  5. உலகின் தீ-பனிக்கட்டி நாடு என்றழைக்கப்படும் ஐஸ்லாந்து நாடு, எரிமலைகளின் மேலேதான் உட்கார்ந்து இருக்கிறதாம்?!.  2010 ஏப்ரலில் ஏற்பட்ட Eyjafjallajokull volcano என்னும் எரிமலை, 1783 ஆம் ஆண்டின் ஸ்கப்டார் (Skaptar) மலையில் ஏற்பட்டு, ஐஸ்லாந்து நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு மக்களையும், விளைநிலம் மற்றும் மீன்பிடி குளங்களையும், காவு வாங்கிய எரிமைலையைவிட அளவில் சற்றே சிறியதாம்!
  6. கடந்த 1991 ஆம் ஆண்டு, பிலிப்பின்ஸ் நாட்டின், பினாடூபோ (Pinatubo) மலையில் வெடித்துச் சிதறிய எரிமலை, 22 மில்லியன் டன் சல்ஃபர் டை ஆக்சைடு என்னும் வேதிப்பொருளை (அமிலம்) கக்கியதோடு, உலகின் வெப்ப நிலைவயில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவிற்க்கு குறைத்துவிட்டதாம்?! அடேங்கப்பா….!!
  7. எரிமலைகள் வளரும் தன்மையுடையனவாம்! லாவா குழம்பும், சாம்பலும் சேர சேர, எரிமலைகளுக்கு அவை, பல்வேறு படிமங்களையும், உயரத்தையும் ஏற்படுத்திவிடுமாம். இப்படித்தான் பல மலைகளும் உருவாகின்றன என்கிறது அறிவியல் ஆய்வு!
  8. எரிமலைகள் முற்றிலும் அழிந்தும் போகக்கூடிய தன்மை உடையவையாம்!
  9. எரிமலைகளின் சக்தியானது, மாக்மா (Magma) குழம்புகளை ஒரு மிகப்பெரிய கிண்ணம் போன்ற வடிவத்தில் உருவாக்கிவிடும் தன்மை கொண்டவையாம். இவற்றை கால்டெரா (Caldera) என்கிறார்கள் ஆங்கிலத்தில்!
  10. உலகின் மிகப்பெரிய எரிமலையானது ஹவாயின் “மாய்னா லோவா (Mauna Loa)” தானாம். ஹாவாயின் 5 எரிமலைகளுக்குள் ஒன்றான இது, கடல் அளவிலிருந்து 13,000 அடி உயரத்தில் இருக்கிறதாம். ஹவாய் தீவுகளே இத்தகைய எரிமலைகளால் உருவானவைதானாம்!
  11. எரிமலைகள், சூரியன் மறைவை மிக வண்ணமயமாக்கிவிடுமாம்! கடந்த 2008 ஆம் ஆண்டு, அலாஸ்காவின், காசாடோச்சி (Kasatochi) எரிமலை வெடித்துச் சிதறியபோது, உலக மக்கள் அனைவரும் வித்தியாசமான, அசாதாரணமான அழகுடன் ஆரஞ்சு வண்ண சூரியன் மறைவை காண முடிந்ததாம். இம்மாதிரியான நிகழ்வு, எரிமலையின் சாம்பல்கள் சூரியக் கதிர்களுடன் இணையும்போது ஏற்படுபவையாம்!

இயற்கை இனிமையானது. பூவையும் காற்றையும் நிலவையும் படைத்துச் சிரிக்கும் இயற்கை, சமயத்தில் எரிமலையாய் கோபக்கனல் வீசும். இயற்கையின் இந்த அசுர முகமறிவோம் இன்றைய தகவல் துளியில்…

எரிமலை உருவாவது எப்படி? அண்டப் பெருவெடிப்பில் உருண்டு விழுந்த பூமிப்பந்து, குளிர்ந்து பின் கோளானது. ஒன்பது கோள்களில் மனித உயிர்கள் வாழக்கூடிய வகையில் அமைந்திருப்பதாய் இன்று வரை அறியப்பட்டிருப்பது பூமி மட்டுமே. புவியின் மேற்பரப்பு மவுனித்திருந்தாலும் அதற்கு அடுத்த அடுக்கு, அதாவது மண்டல் எனப்படும் நடு அடுக்கு தீப்பிழம்புக் குழம்பாய் இருக்கும். இதில் பாறைகளும் உலோகங்களும் 1100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகிய நிலையில் இருக்கும். அவற்றோடு கார்பன் டை ஆக்ஸைடு போன்ற வாயுக்களும் அழுத்தப்பட்ட நிலையில் இருக்கின்றன.

இந்த மேண்டில் பகுதிக்கு மேலிருக்கும் நிலப்பரப்பு பலவீனமாக, அடர்த்தி குறைந்து, வெடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக இருந்தால் அங்கு எரிமலை வெளிப்படும். எரிமலை வெடித்துச் சிதறும்போது அப்பகுதியில் இருந்து சூரியனைப் பார்த்தால் சூரியன் பச்சை அல்லது நீல நிறத்தில் காணப்படும். எரிமலைச் சாம்பல் துகள்கள் வளிமண்டலத்தில் பரவி சூரியக் கதிர்களைத் தடுப்பதே இந்நிற மாற்றத்திற்குக் காரணம். எரிமலைக் குழம்புகளை ஆராய்கையில் அவற்றில் வெள்ளி, தங்கம், பித்தளை போன்ற உலோகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடலடி மட்டத்திலிருந்து கணக்கிடுகையில், ஹவாயிலுள்ள மெளனா லோ மிக உயரமான எரிமலையாகக் கருதப்படுகிறது. இதன் உயரம் 30,000 அடி. கடல் மட்டத்திலிருந்து கணக்கிடுகையில் சிலி பகுதியில் அமைந்துள்ள ஓஜாஸ் டெல் சாலடோ மிக உயரமான எரிமலையாகக் கருதப்படுகிறது. இந்நூற்றாண்டில் அதிக நேரம் எரிமலைக் குழம்பைக் கக்கிக்கொண்டிருக்கும் எரிமலை கிலாயியா. ஹவாயில் அமைந்துள்ள இம்மலை தொடர்ந்து 16ஆண்டுகளாக எரிமலைக் குழம்பைக் கக்கிக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top