Home » சிறுகதைகள் » யாதனின் நீங்கியான்!!!
யாதனின் நீங்கியான்!!!

யாதனின் நீங்கியான்!!!

திருக்குறள் கதைகள்

ஒருவன் தன வேலையில் இடமாற்றம் காரணமாக, இருந்த வீட்டைக் காலி செய்து கொண்டு வேறு ஊருக்குப் போகவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த ஊருக்குப் போகவேண்டுமானால், வழியில் உள்ள ஒரு பெரிய ஆற்றைக் கடந்தாகவேண்டும்.

ஆறு நிறைய தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றைக் கடப்பதற்கு, ஒரு படகை வாடகைக்குப் பேசி ஏற்பாடு செய்து கொண்டான். வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் படகில் ஏற்றினான். மனைவி, மற்றும் இரு குழந்தைகளுடன் படகில் ஏறி அமர்ந்து கொண்டான்.

படகு ஆற்றில் சிறிது தூரம் சென்றவுடன், ஆடத் தொடங்கியது. படகில், அளவுக்கு அதிகமான பாரத்தை ஏற்றியதன் காரணமாக,படகு,மெல்ல மெல்ல ஆற்றில் அமிழத் தொடங்கியது. ஆற்றுநீர் கொஞ்சம் கொஞ்சமாக படகின் உள்ளே வரத் தொடங்கியது. நிலைமையின் ஆபத்தைப் புரிந்துகொண்ட அவன்,விரைந்து செயலாற்றத் தொடங்கினான். பாரத்தைக் குறைப்பதற்காக, ஒவ்வொரு பொருளாக எடுத்து ஆற்றில் வீசினான்.

இவ்வாறு கட்டில்,பீரோ,கிரைண்டர்,மிக்சி,குளிர்சாதனப் பெட்டி என்று ஒவ்வொன்றாக ஆற்றிலே தள்ளி விட்டான். ஓரளவு பாரம் குறைந்தவுடன்,படகு, மெல்ல மெல்ல மேலே எழும்பி வந்தது.படகில் நீர் நுழைவதும் நின்றுவிட்டது. படகு பாதுகாப்பாக மறுகரையை வந்து அடைந்தது.

கவலையுடன் இருந்த மனைவியைப் பார்த்துக் கணவன் சொன்னான்,”கவலைப்படாதே, இந்தப் பொருட்கள் எல்லாம், நம்மைவிட்டுப் போகாதிருந்தால், நம்முடைய உயிர், நம்மைவிட்டுப் போயிருக்கும். நம்முடைய அருமைக் குழந்தைகளையும்,நாம் இழந்திருப்போம். நம்மைவிட்டுப் போன இப்பொருட்களை எல்லாம், நாம் திரும்பப் பெறமுடியும். ஆகையால் நீ கவலைப்படாதே”-என்று ஆறுதல் கூறினான். அவன் மனைவி,கண்களில் ஆனந்தக் கண்ணீர்மல்க, அப்படியே தன கணவன் மீது சாய்ந்து கொண்டாள்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

என்பது குறள். ஒருவன், எந்தெந்தப் பொருட்களிடம் பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருட்களினால், அவனுக்குத் துன்பம் இல்லை என்பது இக்குறளின் பொருள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top