Home » சிறுகதைகள் » முல்லாவின் கதை
முல்லாவின் கதை

முல்லாவின் கதை

முல்லாவின் புகழ் நாளுக்கு நாள் பெருகி வந்த காலகட்டம் அது. இதன் காரணமாக அவருக்குப் பல சீடர்கள் சேர்ந்தனர்.
முல்லாவின் புகழ் மக்களிடையே அதிகரித்ததும் மன்னர் செவியிலும் முல்லாவின் புகழ் பற்றிய செய்தி விழுந்தது.
உடனே மன்னர் முல்லாவை அழைத்து அவருக்கு உரிய பதவியைக் கொடுத்தார்.

ஒரு நாள் முல்லாவின் நண்பர் ஒருவர்,
“முல்லா! தங்களிடம் நீண்ட நாட்களாக ஒரு விஷயம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்,” என்றார்.

“அப்படியா! அது என்ன விஷயம்?” என்று கேட்டார் முல்லா.

“ஒன்றுமில்லை முல்லா! உங்களை எல்லாரும் அறிஞர் என்றும், தத்துவஞானி என்றும் புகழ்கின்றனர்.
அரசர் உம்மை மதித்து உங்களுக்கு உயரிய பதவி அளித்துள்ளார். எப்படி இந்த அளவுக்கு தாங்கள் உயர்வு பெற்றீர்கள்?
இதன் ரகசியத்தை என்னிடம் கூறுவீர்களா?” என்று கேட்டார்.

“உம்மிடம் சொல்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், இந்த ரகசியத்தைக் கூறினால்
நீங்கள் ஊர் முழுவதும் தண்டோரா போட்டு விடுவீர்கள்!” என்றார் முல்லா.

“அப்படியெல்லாம் செய்யமாட்டேன்,” என்றார் முல்லாவின் நண்பர்.

“கண்டிப்பாக ஒருவரிடமும் இதைக் கூறமாட்டீர்களே?” என்று கேட்டார் முல்லா.

“சத்தியமாகக் கூறமாட்டேன். இதனால் எவ்வளவு லாபம் கிடைப்பதாக இருந்தாலும்,
நீங்கள் சொல்லும் ரகசியத்தை ஒருவரிடமும் கூறமாட்டேன்,” என்றார் முல்லாவின் நண்பர்.

“எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் யாரிடமாவது, நான் சொன்னதைக் கூறிவிட்டால்…?”
திரும்பவும் கேட்டார் முல்லா.

“கண்டிப்பாக ஒருவரிடமும் நீங்கள் சொன்ன ரகசியத்தைக் கூறமாட்டேன்.
கோடி பொன் கொட்டிக் கொடுத்தாலும் இந்த ரகசியத்தை வெளிப்படுத்தமாட்டேன்,”
என்றார் முல்லாவின் நண்பர்.

“நண்பரே! நானும் உங்களைப் போலத்தான்.
ஒரு ரகசியத்தைக் காப்பாற்றுவதில் நீங்கள் எவ்வளவு கவனமாக இருக்கிறீர்களோ, அப்படித்தான் நானும்.
கோடி கோடியாகப் பொருள் கொடுத்தாலும் என்னிடம் உள்ள ரகசியத்தை வேறு ஒருவருக்கு
எந்த சந்தர்ப்பத்திலும் கண்டிப்பாக கூறமாட்டேன்,” என்றார் முல்லா.

வெறுத்துப் போனார் முல்லாவின் நண்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top