Home » சிறுகதைகள் » விதிக்கு விளக்கம் தெரியுமா?
விதிக்கு விளக்கம் தெரியுமா?

விதிக்கு விளக்கம் தெரியுமா?

ஒரு செல்வந்தரின் வீட்டில் அமர்ந்து முல்லா அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார். செல்வந்தருக்குத் திடீரென ஒரு சந்தேகம் வந்து விட்டது. 
“முல்லா அவர்களே விதி என்று மனிதர்கள் கூறுகிறார்களே அது என்ன?” என அவர் கேட்டார்.

“நாம் எதிர்பார்ப்பது நடக்காத போது அதற்கு விதி என்று பெயரிட்டு அழைக்கிறோம்.” என்றார் முல்லா.

செல்வந்தருக்கு முல்லாவின் விளக்கம் சரியாகப் புரியவில்லை.

“இன்னும் சற்று தெளிவாக இதைப் பற்றிச் சொல்லுங்களேன்” எனச் செல்வந்தர் கேட்டுச் கொண்டார்.

முல்லா உடனே “என் அருமை நண்பர் அவர்களே! முதலில் நான் உங்களை எதற்காகச் சந்திக்க வந்தேனோ, அந்த விஷயத்தைக் கூறி விடுகிறேன். அப்புறம் விதியைப் பற்றித் தெளிவாக விளக்குகிறேன்” என்றார்.

“எதற்காகச் சந்திக்க வந்தீர்?” என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார்.

“எனக்கு ஒரு கோடிப் பொன் கடனாக வேண்டும் உங்களைக் கேட்டுப் பெறலாம் என்றுதான் வந்தேன்” என்றார் முல்லா.

செல்வந்தருக்கு அதிர்ச்சியாக இருந்தது. “இவ்வளவு பெரிய தொகை முல்லாவிற்கு எதற்கு?” என்று விளங்காமல் திகைத்தார்.

“நான் கேட்டது என்ன ஆயிற்று?” என்று முல்லா கேட்டார்.

“இவ்வளவு பெரிய தொகையைத் திடீரென்று கேட்டால் எப்படி?” என்றார் செல்வந்தர் தயக்கத்துடன்.

முல்லா சிரித்துக் கொண்டே, “உம்மிடம் கடன் கேட்டால் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிகையுடன் உங்களை நான் சந்தித்தேன் உங்களால் பணத்தைக் கொடுக்க முடியவில்லை அல்லது கொடுக்க விரும்பவில்லை அப்போது எனக்கு ஏற்படுகிற ஏமாற்றம் இருக்கிறதே அதை விதி என்று எண்ணி மனம் சமாதானம் அடையலாம்” என்று விதிக்கு விளக்கம் தந்தார் முல்லா.

பிறகு முல்லா சொன்னார் “நான் விளையாட்டுக்காகத்தான் உமம்மிடம் கடன் கேட்டேன் நீர் குழப்பமடைய வேண்டாம்” எனக் கூறிச் சிரித்தார். .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top