கோடை வெயிலை சமாளிக்க…
தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு!
––––––––––––––––––––––––––––––––––––
வெயில் உக்கிரமாகி வருவதால் வெளியில் தலை காட்ட முடியவில்லை. ‘சுள்’ளென்று அடிக்கும் வெயில் மண்டையை பிளந்து விடும் போல உள்ளது. அனல் காற்று உடம்பு முழுவதும் பரவி ‘தகதக’வென எரிய வைக்கிறது. இதனால் சாதாரணமாக வெளியில் சென்று வந்தாலே உடலும், உள்ளமும் சோர்வடைந்து விடுகிறது என்று வெளியில் சென்று வரும் அனைவரும் சொல்வதை கேட்டிருப்போம்.
உண்மையில், நாக்கை வறண்டு போக செய்யும் கோடை வெயில் காலத்தில், நாம் ஒவ்வொருவரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வெயிலில் செல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள், முன் எச்சரிக்கையுடன் இருந்தால் வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம். கோடை வெயிலில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமானால், எப்போதும் உங்களை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள்.
காலையில் எழுந்தவுடன் இரண்டு முதல் நான்கு கிளாஸ் வரை நீர் பருகுங்கள். ஒரு மணிக்கொரு முறை சிறிது நீர் பருகுங்கள். சோற்றுக் கற்றாழை பசுமையாய் கிடைத்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலிதான். அதனை உடலில் தடவி தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளியுங்கள். உடம்பு ஏசி போட்டது போல இருக்கும். இல்லையெனில் சோற்று கற்றாழை ஜெல் என கிடைக்கும். அதனை உடலில் நன்கு தடவிக் கொள்ளுங்கள்.
வெயில் என்று, உடற்பயிற்சியை நிறுத்தி விடாதீர்கள். உடற்பயிற்சிக்கு என்றுமே விடுமுறை கிடையாது. வெயிலை சமாளிக்க உடற்பயிற்சி அவசியம். ஆனால் கொளுத்தும் வெயிலில் சென்று உடற்பயிற்சி செய்ய வேண்டாம். தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு என பழங்களை சாப்பிடுங்கள். நாளை மேலும் சில எளிய வழிகளை பார்க்கலாம்…