Home » சிறுகதைகள் » பாம்பைக் கொன்ற காகம்!!!
பாம்பைக் கொன்ற காகம்!!!

பாம்பைக் கொன்ற காகம்!!!

ஒரு பெரிய மரம்.

அதில் ஆணும் பெண்ணுமாய் இரண்டு காக்கைகள் கூடு கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருந்தன.

ஒருநாள் அம்மரத்திலிருந்த பொந்துக்கு ஒரு கருநாகம் வந்து சேர்ந்தது. சேர்ந்ததோடு இல்லாமல் காக்கை இடும் முட்டைகளை எல்லாம் ஒவ்வொரு நாளும் காலி செய்து கொண்டு வந்தது.

ஒருநாளா… இரண்டு நாளா பல நாட்கள்!

காக்கைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை . கருநாகத்தை காக்கை என்ன செய்ய முடியும்?

அதற்காக விட்டுவிட முடியுமா? விடலாமா?

ஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது.

நரி சரியான யோசனை ஒன்றை சொன்னது.

“அந்தபுரத்தில் அரசகுமாரி குளிக்கிற இடத்திற்குப் போ. அவள் குளிக்கும்போது நகைகளை கழட்டி ஒரு பக்கம் வைப்பாள். அந்த ஆபரணங்களில் பெரியதான ஒன்றை எடுத்துக்கொள். பலர் பார்க்கும்படி மெல்லப் பறந்து வந்து அவர்களின் எதிரில் அந்த நகையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டு விடு. யாரவது பார்க்கும் படி போடா வேண்டும்.

“போட்டால்…?”

“போடு முதலில். அப்புறம் பார்” என்றது.

காக்கை தாமதிக்கவில்லை. பறந்து அந்தபுரத்திற்கு சென்று பார்த்தது அரசகுமாரியின் நகைகள்.

ஒரு முத்துமாலை அதன் கண்ணை உறுத்தியது. அதையே கொத்தி எடுத்தது.

இருந்த அரசகுமாரியின் தோழிகள் – ‘ஆ’ காகம் முத்துமாலையைக் கொத்திக்கொண்டுப் போகுது’ என்று கத்தினர்.

உடனே சேவகர்கள் ஓடி வந்தார்கள்.

காக்கை மெதுவாக – அவர்களின் கண்ணில் படும்படி பறந்துவந்தது. அவர்கள் அருகில் வந்து பார்க்கும் படி அந்த முத்துமாலையை பாம்பு இருக்கும் பொந்தில் போட்டது.

உடனே சேவகர்கள் தம் கையில் இருந்த ஈட்டிகளால் அந்தப் பொந்தைக் குத்திக் கிளறினார்கள். உள்ளே இருந்த பாம்பு சீறி வெளியே வந்தபோது அதையும் கொன்றார்கள்.

‘அப்புறம் பார்’ என்று நரியார் சொன்னதின் அர்த்தம் காக்கைக்குப் புரிந்தது. சேவகர்களும் முத்துமாலையை எடுத்து சென்றனர்.

சரியான யோசனையால் நிறைவான பலனை அடைந்த காக்கைத் தம்பதிகள் நிம்மதிப் பெருமூச்சி விட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top