கேணிவனம் – 26

1-ஆம் காலக்கோடு (Timeline)-ல் நடந்தது..! (தொடர்ச்சி)

லிஷாவை துப்பாக்கியைமுனையில் பிடித்தபடி சக்கரவர்த்தி அனைவரையும் அந்த கேணிவனக்கோவிலுக்குள் நடத்தி சென்றான்.

இன்ஸ்பெக்டர், சக்கரவர்த்தியை மெதுவாக நெருங்க முயற்சிக்க, சக்கரவர்த்தி அவர்பக்கமாய் திரும்பி அவருக்கும் துப்பாக்கியை நீட்டி எச்சரித்தான்.

‘வேண்டாம் இன்ஸ்பெக்டர்… கிட்ட வராத… சுட்டுருவேன்…’ என்று மிரட்டவே, அவர் பின்வாங்கினார்…

கோவில் மண்டபத்தில் ஆறு பேரும் நின்றிருக்க… சக்கரவர்த்தி, கொஞ்சம் பின்னுக்குவந்து அனைவரும் தனது பார்வையில் படும்படி வந்து நின்றுக்கொண்டான். அங்கிருந்த அனைவருக்கும் சக்கரவர்த்தியின் இந்த செயல் மிகவும் பயம் கொடுத்துக் கொண்டிருந்தது… ஒருவரைத்தவிர… அது… ப்ரொஃபஸர் கணேஷ்ராம். அவர் சற்றும் தயங்காதவராய் சக்கரவர்த்திக்கு முன் வந்து நின்றார்.

‘என்ன ப்ரொஃபஸர் இன்னும் என்ன பாத்துக்கிட்டு, அதான் கேணிவனம் இருக்கிற இடம் தெரிஞ்சிடுச்சில்ல… எடுங்க அந்த ஃபோட்டோஸை..?’ என்று ஏற்கனவே பேசிவைத்தவர்கள் போல் பேசிக்கொள்ள… தாஸ் தனக்குள், இதில் ப்ரொஃபஸரும் உடந்தையாய் இருப்பதை எண்ணி திகைத்து போய் நின்றிருந்தான்.

‘ப்ரொஃபஸர் சார்..? என்ன இதெல்லாம்..?’ என்று தாஸ் தயக்கத்துடன் கேட்க, சக்கரவர்த்தி அவன்பக்கம் திரும்பி முறைத்தார்…

‘வேண்டாம் தாஸ், அவரை எதுவும் கேக்காத… கஸ்டபட்டு அவரை நான்தான் இந்த திட்டத்துக்கு கட்டாயபடுத்தி சம்மதிக்கவச்சேன். அவருக்கு இன்னும் சரியா உலகம் தெரியல..’ என்று சீறினான்.

‘என்ன திட்டம்..?’ என்று மீண்டும் தயக்கத்துடன் தாஸ் கேட்டான்.

‘அதை உங்கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல… ப்ரொஃஸர்… எங்கே அந்த ஃபோட்டோ..?’ என்று மீண்டும் ப்ரொஃபஸரை பார்த்து கத்தினான். அவர் இயந்திரத்தனமாய் யாரிடமும் எதுவும் பேசாமல், தனது பேக்-லிருந்து ஒரு ஃபோட்டோவை எடுத்து சக்கரவர்த்தியிடம் நீட்டினார். சக்கரவர்த்தி அந்த புகைப்படத்தையும் அந்த கோவிலையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான். ப்ரொஃஸர் மேலும் அந்த பேக்-லிருந்து ஹேண்டிகேமிராவை எடுத்து, அதன் லெதர் பட்டையை தயாராக தனது தோளில் மாட்டிக்கொண்டார்.

தனக்கு நேரெதிரில் நின்றிருக்கும் தாஸின் கண்களை அவர் பார்ப்பதை மிகவும் சிரமப்பட்டு தவிர்த்தார். ஆனால் தாஸ் அவரையே பார்த்து அவரை வெட்கி தலைகுனிய வைத்தான். மிகவும் யோசித்தபடி ப்ரொஃபஸர், வேறுபக்கம் பார்த்தபடி தாஸுக்கு பதிலளித்தார்.

‘என்னை மன்னிச்சிடு தாஸ், நான் சாகுறதுக்குள்ள, நான் ரொம்பவும் விரும்பி படிச்ச வரலாறுல என் பேரும் வரணும் ஒரு நப்பாசை… அதுக்கு என்ன செஞ்சாலும்..? இது நான் மனசறிஞ்சி செய்யல… ஆனா, எதுவும் செய்யத் துணிஞ்சிட்டேன்..’ என்றார்.

‘அதுக்குத்தான் என்னை கடத்துனீங்களா..?’ என்று துப்பாக்கிக்கு நேரே லிஷா அப்பாவியாய் கேட்டாள். அவர் மேலும் வெட்கி தலைகுனிந்து வேறுபக்கம் திரும்பி ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டார்.

‘என்ன லிஷா சொல்றே..? உன்னை கடத்துனது இவங்கதானா..?’ என்று சந்தோஷ் அதிர்ச்சியாய் கேட்க, லிஷா அவனை பார்த்தபடி, ‘இந்த ஆளு என்னை லிஸா லிஸா-ன்னு ‘ஷ’ வராம ‘ஸ’ போட்டு கூப்பிடும்போதெல்லாம் எனக்குள்ள என்னவோ தோணிக்கிட்டே இருந்தது… என்னை கடத்தின ஆளை நான் நிழலாத்தான் பாத்திருக்கேன். ஆனா, இந்தாளோட மிரட்டல் வாய்ஸ்-ஐயும், உருவத்தையும் வச்சி பாக்கும்போது, இவன்தான் என்னை கடத்தியிருக்கானோன்னு தோணுது…’ என்று லிஷா சொன்னதும்தான், தாஸ்-ம் லிஷா கடத்தப்பட்டபோது தனக்கு வந்த ஃபோன்கால் வாக்கியங்களை நினைவுக்கூர்ந்தான். பிரம்ம சித்தர் சமாதி இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சி சொல்லு…  இல்லன்னா கண்டிப்பா லிசாவைக் கொண்ணுடுவேன்…’  என்று அந்த குரல் பேசியது நினைவுக்கு வந்தது… சந்தேகமேயில்லை… லிஷாவை கடத்தி ஆரம்பத்திலிருந்தே இந்த கேணிவனத்தைப் பற்றிய தகவலை அறிந்து கொள்ள முயற்சித்தது… இந்த ப்ரொஃபஸர் மற்றும் இந்த சக்கரவர்த்திதான். என்று புரிந்து கொண்டான்.

சக்கரவர்த்தி இதெல்லாம் தெரிந்த விஷயம்தானே என்று இந்த பேச்சுக்கு மறுப்பேதும் கூறாமல், கடமையே கண்ணாய், தனது கையிலிருந்த ஓவியத்தையும், அந்த கோவிலில் இருக்கும் ஓவியங்களையும் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு கருவறையில் நுழைந்து அங்கிருந்த கிணறுபோன்ற பள்ளத்தை எட்டிப் பார்த்தான். அது பாதாளம் வரை பாயும் இருளை காட்டிக்கொண்டிருந்தது… அதன் மீதிருக்கும் மூடி ஒருபக்கமாய் சாய்ந்திருக்க, போன்ற கல்லை நகர்த்தி பார்த்தான். மிகுந்த பிரயத்தனத்திற்கு பிறகு அந்த கல்-ஐ எடுத்து கிணற்றின் மேல் மூட எத்தணிக்க, அது பொருந்தாமல் இருந்தது… எவ்வளவு முயன்றும் பொருத்த முடியவில்லை…

மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று ஒன்றும் புரியாமல் போகவே, தாஸை நெருங்கி வந்தான்.

‘தாஸ்..? இந்த ஃபோட்டோவை பாரு..?’ என்று நீட்டினான்.

தாஸ் அதை ஆர்வத்துடன் உற்றுப்பார்த்தான். அதில் ஒரு வட்ட வடிவ ஓவியம் ஒன்று வரையப்பட்டிருந்தது… இது… இந்த கேணிவனத்தை திருகும் முறைகளில் ஒன்றைக்காட்டும் ஓவியம் என்று சட்டென்று தாஸூக்கு புலப்பட்டது… ஆனால், இந்த பிரத்யேக ஓவியம் இவர்களுக்கு எப்படி கிடைத்திருக்கும்..? என்று குழம்பினான். எதவும் கூறாமல், விடைதெரியாதவனைப் போல் நடித்துக் கொண்டு அந்த ஃபோட்டோவைப் பார்த்துக் கொண்டு நின்றான்.

‘என்ன தாஸ், இது என்னன்னு தெரியுதா..?’ என்று கசக்கரவர்த்தி மிரட்டல் தொணியில் கேட்க…

‘இல்லையே..?’ என்று தாஸ் நடித்தான்.

‘வேண்டாம்… தாஸ்… பொய் சொல்லாத… இது என்னன்னு சொல்லிடு..? நான் பயங்கர கோபத்துல இருக்கேன். என்கூட விளையாடாத…?’ என்று ஒரு பைத்தியக்காரனைப் போல் கத்தினான்.

‘இல்ல சார்… உண்மையிலேயே இது என்னன்னு எனக்கு பிடிபடலை…’ என்று மேற்கொண்டு தனது பொய்யை உறுதிப்படுத்தவே… சக்கரவர்த்தி மேலும் கோபம் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.
சந்தோஷ் இன்ஸ்பெக்டரை பார்த்துக் கொண்டிருந்தான். அவர் ஏதாவது செய்து குழுவை காப்பாற்றி நிலையை சீர் செய்வாரா என்ற எண்ணத்தில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், உண்மையில் இன்ஸ்பெக்டர் வாசு செய்வதறியாமல் திகைத்து நின்றிருந்தார்.

சக்கரவர்த்தி சந்தோஷூக்கு அருகில் சென்று, அவனது தலையில் இம்முறை துப்பாக்கி வைத்தான். சந்தோஷ் சற்றும் பயப்படாமல், உறுதியாகவே நின்றிருந்தான்.

‘தாஸ், இந்த ஓவியத்துல இருக்கிறது என்னன்னு சொல்லலைன்னா… இ…இதோ… இந்த ச..சந்தோஷ்-ஐ சுட்டுடுவேன்..’ என்று அவன் தலையை துப்பாக்கி முனையினால் ஒரு தட்டு தட்டி அதட்டினான்.

லிஷாவுக்கு. சந்தோஷ் தலையில் துப்பாக்கி இருப்பது மிகவும் பதற்றமாய் இருந்தது… ஐயோ..! தாஸ் சீக்கிரம் தெரிந்ததை சொல்லிவிடுங்கள்… என்று மனதிற்குள் பிரார்த்தனை செய்து கொண்டாள். ஏதாவது விபரீதம் ஆகிவிட்டால் என்ன செய்வது? என்று அவளுக்குள் பயங்கரமாய் பயந்துக்கொண்டிருந்தாள்.

தாஸ்-ம் பயந்தான்… இந்த சக்கரவர்த்தியை பகைத்துக் கொள்ள முடியாது… இதில் இருக்கும் விஷயத்தை சொல்லலாமா வேண்டாமா.. என்று யோசித்துக் கொண்டிருந்தான். சில நேரங்களில் சட்டென்று முடிவெடுக்க தோன்றாது. அதுபோல்தான் இப்போது தாஸூம் முடிவெடுப்பதற்கு சிரமப்பட்டுக்கொண்டிருந்தான். காலம் தாமதிப்பதற்காக, கேள்வியை மாற்றி கேட்டான்.

‘இந்த ஓவியம் உங்களுக்கு எங்க கிடைச்சதுன்னு சொல்லுங்க… என்னால முடிஞ்ச உதவியை நான் செய்றேன்..’ என்றான்.
‘இ…இது… ப்ரொபஸர்-தான் கண்டெடுத்தாரு….’

‘எப்படி..?’

‘ப்ரொஃபஸர் கேக்குறான்ல..? சொல்லுங்க…?’ என்று அவரை மிரட்ட.. அவர் வழக்கம்போல் தாஸை நேருக்கு நேர் பார்க்காமல் எங்கோ பார்த்தபடி பதிலளித்தார்.

‘அன்னிக்கு உங்கிட்ட நான் காமிச்ச கிரீடம் டீடெய்ல்ஸை கண்டெடுத்த அதே HDRI இமேஜிங் ப்ராஸஸ்லதான் இதையும் கண்டெடுத்தேன். நீ கொடுத்த ஓவியத்துல, அந்த சித்தரோட உள்ளங்கால்-ல பச்சை குத்தியிருந்த டிஸைன் இது…’ என்று கூற… தாஸ்-க்குள் ஒரு தெளிவு… அந்த சித்தர் தனது உள்ளங்காலில் பச்சை குத்தியிருந்தார் என்றால் இந்த வடிவத்தை ரகசியமாக பாதுகாக்கும் எண்ணத்தில் செய்திருப்பார். பச்சை குத்தியதின் அர்த்தம், அழியால் இருப்பதற்காகத்தான். அப்படியென்றால் சந்தேகமேயில்லை… இது அவர் பயணம் செய்யும் வழக்கமான காலக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வடிவம்தான். இதை பிரயோகித்து இந்த கேணிவனம்மூலம் அவரிருக்கும் காலத்திற்கு பயணப்பட முடியும் என்று ஊகித்தான்.

சக்கரவர்த்தி தொடர்ந்தான்…

‘இந்த டிஸைன் என்னதுன்னும், நாங்க எப்படி இந்த கேணிவனத்தை யூஸ் பண்ணி டைம் டிராவல் பண்றதுன்னும் சொல்லிக்கொடு… இல்லண்ணா, இவன் தலை சிதறிடும்’ என்றான்.

ஆனால், சந்தோஷ் அவன் மிரட்டலுக்கு பயப்படவில்லை… ‘பாஸ், நீங்கொண்ணும் சொல்லாதீங்க பாஸ்… இவன் ஒரு டுபாக்கூர் பார்ட்டி, சும்மா மிரட்டுறான்..’ என்று மிகவும் உறுதியாய் பேசிக்கொண்டிருக்க…

டம்ம்ம்ம்ம்ம்….

சந்தோஷ்-ன் மூளையை துப்பாக்கி தோட்டா பதம் பார்த்தது… அந்த துப்பாக்கியின் ஓசை அந்த காடு முழுவதும் எதிரொலித்தது…

அனைவருக்கும் நடந்ததை உணர சில விநாடிகள் பிடித்தது…

சந்தோஷ் இறந்து விழுந்தான். லிஷாவின் கண்கள் இதுவரை விரிந்திராத அளவில் விரிந்தது…

‘ஹயோ… ச…ந்தோ..ஓஓஓஓ…. ஷ்…’ என்று அவள் இதுவரை தொட்டிராத உச்சஸ்தாயி-ல் கத்தினாள்.

‘ஏய்… கத்தாத…’ என்று மிரட்டினான்.

அனைவரும் உறைந்திருந்தனர்… லிஷா பயங்கரமாக அழ ஆரம்பித்தாள். ப்ரொஃபஸரும் சற்றே வித்தியாசமாய் சக்கரவர்த்தியை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார்…

‘எ…ஏன்… என்னய்யா நீ… ஏன் இவனை சுட்டே..’ என்று பயமும் கோபமும் கலந்து கேட்க… சக்கரவர்த்தி சீறினான்.

‘ப்ரொஃபஸர்… ரொம்ப பேசுனேன்னா… உன்னையும் சுட்டுருவேன்…’ என்று அவரையும் சேர்த்து மிரட்டினான்.

தாஸூக்கும், இன்ஸ்பெக்டருக்கும் நிலைமை மிகவும் விபரீதமாக மாறியிருந்தது… புரிந்தது…

‘தாஸ், இப்ப சொல்லு… இந்த ஓவியத்துல இருக்கிற டிஸைனுக்கு என்ன அர்த்தம்னு சொல்லு… இல்லன்னா, இவளையும் சுட்டுருவேன்…’ என்று கூறி, லிஷாவின் தலையில் சூடான துப்பாக்கி முனையை வைத்தான். அவள் அழுகையை தொடர்ந்தபடி இருந்தாள். அவளுக்கு, தன்னை சுட்டுக்கொன்றுவிட்டால் தேவலை என்று உள்மனது கதறியது.

தாஸ்..! உடனடியாக என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்க…

‘சொல்லிடுறேன்… சொல்லிடுறேன்… அவளை சுட்டுடாதீங்க… ப்ளீஸ்…?’ என்று கெஞ்சினான்…

ஒரு சின்ன அமைதி…

திடீரென்று இன்ஸ்பெக்டருக்கு அருகிலிருந்த பேக்-லிருந்து சட்டென்று வாக்கி டாக்கி சத்தம் எழுப்பியது…

ஷ்ஷ்க்க்க்… அந்த சத்த த்தை கேட்டதும், சட்டென்று சக்கரவர்த்தி துப்பாக்கியை திருப்பி இன்ஸ்பெக்டர் இருந்த திக்கில் சுட்டான்.

டம்ம்ம்ம்ம்….

ஆஆஆஆஆஆஆஆ மீண்டும் லிஷா கத்தினாள்…

சட்டென்று வந்த அந்த வாக்கி-டாக்கி சத்தத்தை கேட்டு அதிர்ந்து போய் தவறாக இன்ஸ்பெக்டரை சுட்டுவிட்டதை சக்கரவர்த்தி உணர்ந்தான். இதற்குள் இன்ஸ்பெக்டர் விழுந்து கிடந்தார்.

தாஸ் மீண்டும் அதிர்ச்சியடைந்தான்… நோஓஓஓ.ஓ…. என்று தன்னையுமறியாமல் கத்தினான்… பேக்-லிருந்து வாக்கி டாக்கியில், கர்நாடகா காட்டு இலாகாவினர் புலம்பிக்கொண்டிருந்தார்கள்…

‘Hello… Anybody there..? We just heard a Gunshot..?’ என்று வினவிக்கொண்டருந்தனர்.

சக்கரவர்த்தி தனக்கு எதிரில் இருந்த, ப்ரொஃபஸரையும், தாஸையும் மாறி மாறி பார்த்தபடி, நடுங்கும் குரலில் பேசினான்.

‘ச…சாரி… அந்த சத்தம் கேட்டு, சுட்டுட்டேன்..! தாஸ்…? சீக்கிரம் இந்த ஓவியத்துல இருக்கிறதை சொல்லிடு…’ என்று லிஷாவை பார்க்க… அவள் அழுகை நின்று உறைந்து போய் இன்ஸ்பெக்டரின் பிரேதத்தை வெறித்துக்கொண்டிருந்தாள். அப்படியே மயங்கி விழுந்தாள்.

‘Hello..? Hello..? We heard another Shot… Who is this..? Do you Copy… Who is this…?  Over’ என்று வாக்கி-டாக்கி புலம்பிக்கொண்டிருந்தது… சக்கரவர்த்தி அந்த வாக்கிடாக்கியை எடுத்து அணைத்தான்.

தாஸ் நடுங்கும் கைகளில் அவன் பிடித்திருந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தான். அந்த கேணிவனத்தின் மேலிருக்கும் மூடி போன்ற கல்லை திருகி வைக்கவேண்டிய ப்ரிஸெட் சமாச்சாரத்தை கணித்தான்.

‘இ…இது… அந்த கோவில்… க..கருவறைக்குள்ள இருக்கிற… கல்லை திருகி வைக்க வேண்டிய க்… கோ-ஆர்டினேட்ஸ்..னு நினைக்கிறேன்’ என்றான்.

‘போய் நீயே இதுல இருக்கிற மாதிரி வை…’ என்று கூற… தாஸ், உறைந்து போய் நின்றிருக்கும் லிஷாவை பார்த்துவிட்டு அங்கிருந்து கருவறைக்குள் மெதுவாக நடந்து சென்று நுழைந்தான்.

அந்த கருவறையில்… பிரதான மூலவர்சிலை சாய்ந்திருந்த்து… அந்த மூடி போன்ற கல் ஒரு சாய்வுநிலையில் திரும்பியிருந்தது… அது கடைசியாய் குணா திருகிவிட்டு புலியிடமிருந்து தப்பிக்கும்போது உள்ளிறங்கிய காலக்கட்டத்தை சென்றடையும் செட்டிங்க்ஸ்… பேசாமல், இதில் குதித்துவிட்டால், நாம் மீண்டும், இந்த கதையின் ஆரம்பத்தில் தொடங்கிய ரயில் பயணத்தை சென்றடைந்துவிடலாம். பிறகு, நடக்கும் அத்தனையும் சீர்செய்து, இந்த கேணிவன கோவிலுக்கு வரும் திட்டத்தை கைவிட்டுவிடலாம், லிஷாவின் கடத்தலையும் தடுக்கலாம்… ஆனால், இந்த சித்தரின் உள்ளங்காலிலிருந்த ஓவியத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் காலக்கட்டத்திற்கு சென்றடைந்தால், இந்த சித்தரை சந்தித்து பேசும் பாக்கியம் கிடைத்தாலும் கிடைக்கலாம்… எது… உகந்தது..? என்று மனதிற்குள் குழம்பியபடி இருக்க…

‘தாஸ்… ஆச்சா..?’ என்று வெளியிலிருந்து சக்கரவர்த்தி மிரட்டினான்.

‘இ..இன்னும் ஒரு நிமிஷம்..’ என்று கூறியபடி, தாஸ் அங்கு திறந்திருந்த அந்த கல்லை எடுத்து மீண்டும் அந்த கிணற்றை மூடினான். பிறகு சிதைந்த நிலையில் அங்கிருந்த தெய்வச்சிலையை திருகி, சரியாக கருவறையிலிருந்து வெளியே நோக்கும்படி வைத்தான். பிறகு, அந்த கருவறைக்கு உள்புறமாய் வரைந்திருந்த அம்புக்குறிகள் சுட்டிக்காட்டிய திசைக்கு எதிர்புறமாய், அந்த மூடிக்கல்லை திருகினான். இப்போது அந்த மூடிக்கல் அந்த கிணற்றில் கச்சிதமாய் அமர்ந்து கொண்டது…

இந்த செயல்முறையை ஆச்சர்யமாக பார்த்தபடி சக்கரவர்த்தி தன்னை மறந்து அந்த கருவறையை நெருங்கி மெல்ல அடியெடுத்துக் கொண்டிருந்தான். ப்ரொஃபஸரும் அவனை தொடர்ந்து மெய்மறந்த நிலையில் நடந்து கருவறையை நெருங்கிக் கொண்டிருந்தார்.

அவர்களுக்கு பின்னால், மண்டபத்தில் விழுந்து கிடந்த இன்ஸ்பெக்டர் மெல்ல கண்திறந்து, இருவரையும் பார்த்தார். அவர் உயிர்பிரிய இன்னும் சில நிமிடங்கள் பாக்கியிருப்பது புரிந்தது…

தாஸ் இப்போது, மீண்டும் அம்புக்குறிகள் சுட்டிக்காட்டிய திசையில் மூன்றுமுறை அந்த கல்-ஐ சுற்றினான். மீண்டும் அந்த கல் எம்பி நின்றது. இப்போது, இப்போது அந்த ஓவயித்தை பார்த்தான். அதில் குறிப்பிட்டிருந்த வரைபடத்திற்கு ஏற்றாற்போல், அந்த மூடிக்கல்லை திருகினான். ஆனால், வேண்டுமென்றே… அந்த ஓவியத்தைவிட சற்றே மாறுதலாய் நிறுத்தினான்… பிறகு, அந்த கல்-ஐ சிரமத்துடன் தள்ளினான். தனியாக தள்ளமுடியாமல் திணறும்போது, சக்கரவர்த்தியும் வந்து கைகொடுத்து உதவினான். இப்போது அந்த கல் முழுவதுமாக அகன்று, உள்ளே கரிய பள்ளம் தெரிந்தது…

‘தாஸ்… இதுதான் இந்த ஓவியத்துல இருந்த செட்டிங்ஸ்-ஆ..?’ என்று சக்கரவர்த்தி கேட்டான்.

‘ஆமா..?’

‘ஏன் அந்த கல்-ஐ பழையபடி வச்சிட்டு அப்புறமா சுத்துனே..?’

‘ஒருவேளை இந்த சிஸ்டத்தை ரீஸெட் முறைப்படி செய்யனுமோன்னு தோணுச்சு..’ என்று மூச்சு வாங்கியபடி பதிலளித்தான்.

‘க்ளெவர்.. இது எனக்கு தோணாம போச்சு…’ என்று கூறி, அந்த கிணற்றுக்குள் ஆவலாய் எட்டிப்பார்த்தான். திடீரென்று பின்பக்கமாய் இன்ஸ்பெக்டர் வந்து சக்கரவர்த்தியை கட்டிக்கொண்டு, பின்பக்கமாய் மண்டபத்தில் விழ, இருவரும் ஆக்ரோஷமாய் கட்டிப்புரண்டனர். தாஸ் செய்வதறியாமல் திகைத்து நின்றிருந்தான். மண்டபத்தில் லிஷா மயங்கி விழுந்திருப்பதை பார்த்து அவளை நோக்கி ஓடி எழுப்ப முயற்சித்துக்கொண்டிருந்தான்.

சக்கரவர்த்தியும், இன்ஸ்பெக்டரும் கையிலிருக்கும் துப்பாக்கியை பிடுங்கிக் கொள்ளும்பிரயத்தனப்போரில் ஈடுப்பட்டிருந்தனர். ப்ரொஃபஸர் கணேஷ்ராம், கருவறையில் கிணற்றுக்கு அருகில் நின்றபடி இந்த சண்டையை பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

இருவரின் சண்டையில், துப்பாக்கியை இன்ஸ்பெக்டர் கிட்டத்தட்ட தன்பிடிக்குள் சிக்கும்படி வென்று கொண்டிருந்தார். ஆனால் திடீரென்று கைதவறி சுட்டுவிட, இம்முறை குண்டு ப்ரொஃபஸரின் தோள்பட்டையில் பட்டது…

‘ஹக்க்க்க்…’ என்று தனது தோள்பட்டையை பிடித்தபடி அவர் கிணற்றுக்குள் சாய… தாஸ் ஓடிச்சென்று அவரை பிடித்துக் கொண்டான். அவர் பிடி நழுவிக்கொண்டே வர, அவரது தோளில் மாட்டியிருக்கும் ஹேண்டிகேமிராவின் லெதர் ஸ்ட்ரைப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டான். அவரும் அதைப்பிடித்து முடிந்தவரை தொங்கி கொண்டிருந்தவர்… ஒருகட்டத்தில் வலி தாங்க முடியாமல் திணறினார்… அவர் தனது முழுபலத்தை பிரயோகித்து, தாஸை ஏறிட்டுப் பார்த்தார்…

‘த்த்த்த்தாஆஆஆஆஸ்ஸ்….. தாஸ்….. எ…என்….என்னை மன்னிச்சிடுய்யா…’ என்றபடி ஹேண்டிகேமிராவை பிடித்திருந்த தனது பிடியை தளர்த்திக் கொள்ள…. அவர் அந்த கரிய பள்ளத்தில் விழுந்து மறைந்தார்…

‘சாஆஆர்…’ என்று தாஸ் கத்த… தனக்கு பின்னால்….

டம்ம்ம்ம்ம்ம்ம்…. என்று மீண்டும் ஒரு சத்தம்…

தாஸ் மீண்டும் திடுக்கிட்டு திரும்பினான்.

சக்கரவர்த்தி ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அருகில் இன்ஸ்பெக்டர், தனது வயிற்றை ஏற்கனவே துளைத்திருந்த தோட்டாவை பிடித்தபடி அமர்ந்திருந்தார்…

‘தாஸ்…?’ என்று அவர் மிகவும் மெதுவாக அழைத்தார்… தாஸ் ஓடி அவரிடம் சென்றான்.

‘சார்… என்ன சார்… இப்ப… என்ன சார் செய்யலாம்..?’

‘செய்…யலாமில்ல… செய்யனும்… நி… நீதான் செய்யனும்… புல்லட் என் வயித்தை துளைச்சிடுச்சி… பயங்கர ப்ளட் லாஸ் வேற..! நான் இன்னும் அதகபட்சம் 20 நிமிஷம்தான் உயிரோட இருப்பேன். இந்த கேணிவனத்தைப் பத்தி வெளிய தெ… தெரியக்கூடாதுன்னு.. நீ சொன்னது… உ…உண்மைதான்… வெளியே தெரிஞ்சா..ஆ… சக்கரவர்த்தி மாதிரி ஆளுங்க..ளால… பெரிய ஆபத்து… என்ன.. செய்யனுமோ..? செஞ்சிடு….. இது…. வெ…ளியில… தெரியக்கூடாது…’ என்று கூறி மேற்கொண்டு பேச முடியாமல் இன்ஸ்பெக்டரும் மயக்கமடைகிறார்…

தாஸ் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான்…

தனிமை…

தனிமை..! எல்லாமுறையும் இனிப்பதில்லை…

5 நிமிடத்திற்கு முன்பு வரை இருந்த சூழல் மொத்தமாக மூன்று தோட்டாக்கள் நிர்ணயித்த விதிப்படி திடீரென்று மாறிப்போனதை நினைத்து வருந்தினான். சந்தோஷ்..! போலீஸ் ஷூவை போட்டுக்கொண்டு, ஒரு சிறு பிள்ளையைப் போல் துள்ளி துள்ளி விளையாடியபடி அந்த காட்டுப்பாதையில் நடந்து வந்தது நினைவுக்கு வந்து போனது. மேலும், லிஷாவும் தாஸூம் இரயிலில் ஜன்னலோரம் அமர்ந்து சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்த காட்சிகளும் வந்து மறைந்தது… இதெல்லாம் சேர்த்து வைத்து யோசிக்கும்போது, தாஸூக்க அழவேண்டும்போல் இருந்தது… நெஞ்சு கணக்க ஆரம்பித்திருந்தது…

அந்த காட்டுப்பிரதேசத்தில், இப்போது அவன் மட்டுமே முழித்திருக்கும் ஜீவனாய் தோன்றியது. அவன் அமர்ந்திருக்கும் கோவில் மண்டபத்தை சுற்றி பார்த்தான். மண்டபம் முழுவதும், ஆங்காங்கே… ரத்தம் சிதறிய அடையாளங்கள் சூழ்ந்திருந்தது… இத்தனை உயிர்கள் போகும் என்று தெரிந்திருந்தால், இந்த பயணத்தை மேற்கொள்ளாமல் இருந்திருக்கலாமே..? என்று மனதிற்குள் கதறி அழுதான். இன்ஸ்பெக்டர் உடம்பிலிருந்து ரத்தம் இன்னும் வெளியேறிக்கொண்டிருக்க… தாஸ் அவரது கழுத்துப்பகுதியில் விரல்வைத்துப் பார்க்க, நாடி நின்று போயிருப்பது தெரிந்தது. அதிர்ந்தபடி அவரையே பார்த்துக் கொண்டிருக்க…

சட்டென்று அந்த் காட்டுப்பிரதேசத்தில் காற்று பலமாக அடித்தது. அங்கே கருவறைக்கு கீழே விழுந்திருக்கும் புகைப்படம் (சக்கரவர்த்தி கொடுத்தது) பறந்து வந்து இவனுக்கு அருகில் விழுந்தது. உடனே தாஸூக்கு, தனது தாத்தா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன…

‘நீ அந்த சித்தரைத் தேடிப்போகலைப்பா, அவர்தான் உன்னை தன்கிட்ட வரவழச்சிக்கிறாருன்னு நினைக்கிறேன்…’

தாஸ் உடனே ஒரு முடிவோடு எழுந்தான். அந்த புகைப்படத்திலிருக்கும் ஓவியங்களில் குறிப்பிட்டிருப்பதுபோல், அந்த கருவறைக்குள்ளிருக்கும் கல்-ஐ மாற்றி வைத்தான். பிறகு தோளில் ப்ரொஃபஸரின் ஹேண்டிகேமிராவை மாட்டிக் கொண்டான். ஒரு தீர்மானத்தோடு அந்த கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு குதித்தான்.

காரிருள்…

காற்றாய் மிதந்தான்..!

பந்தம்..! சொந்தம்..! பற்று..! சோகம்..! எல்லாம் அற்ற நிலையில் தன்னைமறந்து கருவறைக்குள் இருக்கும் குழந்தையைப் போலானான்.

மயங்கினான்.

கனவில் மட்டுமே தெரியும் சில அரிய வகையான ஓவியங்களும், நினைவலைகளும் ஏதேதோ கண்களுக்கு தெரிந்து மறைந்தது.

எவ்வளவு நேரம் என்று கணிக்க முடியாத சுயநினைவில்லாதிருந்தான்.

சட்டென்று கண்களை அகலத் திறந்து பார்த்து விழித்தான். கண்ணுக்கு நேரே, உயர உயர வளர்ந்து நிற்கும் மரங்களின் பசுமையும் அதற்குபின்னால் தெரியும் நீலவண்ணத்தில் வானமும் கண்ணுக்கு தெரிந்தது. அவன் சுவாசிக்கும் காற்றில் ஒருவித புத்துண்ரவான ஆக்ஸிஜன் பரவியிருப்பது புரிந்தது. மெல்ல எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.

அது 12ஆம் நூற்றாண்டு என்று அவனுக்கு இன்னமும் புரியவில்லை..!

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top