கேணிவனம் – 22

பானரோமிக் பார்வையில்
மலைத்துப்பார்க்க வைக்கும்
ஹரிஸாண்ட்டல் அதிசயம்

இரயில்….
தாஸ், அந்த இரவு வேளையில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் 11ஆவது ப்ளாட்ஃபாரத்தில் நின்றிருந்த ரயிலை, தன் மனதுக்குள் ரசித்தபடி, கவிதை என்று எதையோ எழுத முயன்றுக்கொண்டிருந்தான்.

இரயிலுக்குள், ஜன்னலோரத்தில் எதிரெதிர் இருக்கையில் சந்தோஷூம், லிஷாவும் அமர்ந்தபடி சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர்…

அங்கு பரவியிருந்த விளக்கு வெளிச்சத்தில், ஆங்காங்கே வெவ்வேறு ஊரைச் சேர்ந்த பயணிகளின் நடமாடிக்கொண்டிருக்க, அவர்களது முகமும், நடையும், உடையும் தாஸை ஒரு குழந்தையாய் மாற்றி, ரயில் நிலையத்தை திருவிழாக்கூடமாக ரசிக்க வைத்துக் கொண்டிருந்தன. மேலும் அங்கு பரவியிருந்த இரும்பின் துருப்பிடித்த வாசனை, அவனின் முந்தைய பயணங்களை நினைவுப்படுத்திக் கொண்டிருந்தது.

அவன் நினைவுகளில் டைம் டிராவல் செய்ய முயன்று கொண்டிருந்த நேரம்… திடீரென்று ரயில்வே ஸ்டேஷனின் அறிவிப்பு அவன் கவனத்தை கலைத்தது…

”பயணிகள் கவனத்திற்கு வண்டி எண் : 1028, சென்னையிலிருந்து மும்மை வரை செல்லும், மும்பை மெயில், 11ஆவது ப்ளாட்ஃபாரத்திலிருந்து சரியாக 22 மணி 50 நிமிடங்களுக்கு புறப்படும்…” என்று இயந்திரக்கன்னி பேசிக்கொண்டிருந்தாள்.

அந்த அறிவிப்பு வேற்று மொழிகளுக்கு மாறும்பொழுது, தனக்கெதிரே ப்ரொஃபஸர் கணேஷ்ராம் வந்து நின்றார். அவருடன் இன்னொரு நபரும் வந்திருந்தார்.

”ஹலோ தாஸ்! சாரிய்யா வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு…!’ என்று ப்ரொஃபஸர் இழுத்தார்.

‘பரவாயில்ல சார்… டிக்கெட் உங்ககிட்ட இருந்ததால கொஞ்சம் பதற்றமா இருந்தது… நல்ல வேளை சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க..’ என்று கூறியபடி அவருக்கருகே நின்றிருந்த நபரை தாஸ் பார்த்தான்.

ப்ரொஃபஸர் அந்த நபரை தாஸிடம் அறிமுகப்படுத்தினார்…

‘தாஸ்..? இவர் என் ஃப்ரெண்டுய்யா… பேரு மிஸ்டர் சக்கரவர்த்தி… இவரும் நம்மகூட கேணிவனத்துக்கு வர்றாரு…’ என்றதும் தாஸ் ப்ரொஃபஸரை கொஞ்சம் கோபமாகவே பார்த்தான். ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்தார்.

‘இவரு என்னோட பல எக்ஸ்பெடிஷனுக்கு ஸ்பான்ஸர் பண்ணியிருக்காரு… நல்ல வரலாற்று ஆர்வலர்… நானும் இவரும் சேர்ந்து சமீப காலமா பலவிஷயத்தை ஆராய்ஞ்சிட்டிருக்கோம். இதுதவிர காட்டுப்பாதையில நல்ல அனுபவசாலி, அதனால, இவர் வர்றதுல உனக்கெதுவும் ஆட்சேபனையிருக்காதுன்னு நினைக்கிறேன்..?’ என்று தீர்க்கமாக சொல்லிக்கொண்டார்.

அந்த நபர் தாஸிடம் கைநீட்டியபடி… ‘ஹலோ தாஸ், ப்ளெஸர் மீட்டிங் யூ..! உங்களைப் பத்தி ப்ரொஃபஸர் நிறைய சொல்லியிருக்கார்…’ என்று சக்கரவர்த்தி கைகுலுக்க… அவரது பிடி மிகவும் கெட்டியாய் இருந்தது…

தாஸுக்குள் ஏதோ தோன்றி மறைந்தது… இவர் யார்? இந்த பயணத்துக்கு தேவையா..? ஏன் இந்த ப்ரொஃபஸர் கடைசி நிமிடத்தில் இப்படி ஒரு புதிய நபரை இந்த பயணத்தில் திணிக்கிறார் என்று ஏகப்பட்ட குழப்பம் தோன்றினாலும், வெளிப்படையாய் அவனால் எதுவும் காட்டிக்கொள்ள முடியவில்லை…

நேரம் சரியாக 10:52 என்று காட்டிக்கொண்டிருக்க… ரயில்… கூவியபடி மெல்ல நகர்ந்தது…

அய்யோ இன்னும் இந்த இன்ஸ்பெக்டரை காணவில்லையே என்று தாஸ் பதறினான். வண்டி மெதுவாக வேகம் கூட்ட… நகரும் வண்டியில் அனைவரும் ஏறிக்கொண்டனர்… ரயில் பெருமூச்சுவிட்டபடி ப்ளாட்ஃபாரத்தை தாண்டியது…

சந்தோஷ், லிஷா அமர்ந்திருந்த வரிசையில் மற்ற மூவரும் அமர்ந்துக் கொள்ள, ப்ரொஃபஸர் தனது நண்பரை சந்தோஷூக்கும், லிஷாவுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும் அந்த நபரை வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

தாஸ் பதற்றமாக இன்ஸ்பெக்டரின் வருகைக்காக அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருக்க…
‘பாஸ், எங்க இன்ஸ்பெக்டரைக் காணோம்..’ என்று சந்தோஷ் கேட்டான்…

‘அதான் தெரியல… ஃபோன் பண்ணி பாத்தா… ரிங் போயிட்டேயிருக்கு எடுக்க மாட்டேங்கிறாரு… அவரு வரலைன்னா, இந்த ட்ரிப்-பே பாழாயிடும். அவரோட இன்ஃப்ளூயன்ஸ்லதான் வண்டிய அந்த காட்டுவழியில நிறுத்தி இறங்க முடியும். இல்லேன்னா, அந்த பாதையை கண்டுபிடிக்கிறது கஷ்டம்’ என்று தாஸ் புலம்பிக்கொண்டிருந்த சமயம், அவன் தோளில் ஒரு கை விழுந்தது… இன்ஸ்பெக்டர்தான். ஜீன்ஸிலும், கருப்பு சட்டையிலும், சற்றே இளமையாய் தெரி்ந்தார்.
‘தேங்க் காட்… வந்தீங்க…’ என்று தாஸ் சந்தோஷப்பட்டான்.

‘நான் ட்ரெயின் ஏறிட்டேன்னு எஸ்.எம்.எஸ். அனுப்பினேனே..? பாக்கலியா..?’ என்றுகூறியபடி அவரும் தனது லக்கேஜ்ஜை வைத்துவிட்டு அமர…

‘பாக்கலை சார்… ஆமா..? நாம இறங்க வேண்டிய இடத்துல, ட்ரெயினை நிறுத்த ப்ரமிஷன் வாங்கிட்டீங்களா..?” என்று தாஸ் கேட்டான்.

‘டோன்ட் வர்ரி… கேஸ் விஷயமா போறதா சொல்லி பர்மிஷன் வாங்கிட்டேன். அதுமட்டுமில்ல, நீங்க அன்னிக்கி ட்ராவல் பண்ண ரயிலோட லாக் (Log) ஷீட் வாங்கிட்டேன். நீங்க எந்த இடம்னு சொன்னீங்கன்னா… நான் ட்ரெயினை நிறுத்திடுறேன். இறங்கிடலாம்…’ என்று கூற… தாஸ் நிம்மதியடைந்தான்.

இன்ஸ்பெக்டரிடம் ப்ரொஃபஸரும் சக்கரவர்த்தியும் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

வண்டி வேகமெடுத்துக் கொண்டிருந்தது…. தாஸூக்குள் ஏதோ ஒன்றை மறப்பது போன்ற ஒரு எண்ணம் இருந்துக் கொண்டேயிருக்க… எழுந்து அந்த கம்பார்ட்மெண்டின் கதவருகே சென்றான்.
வெளியே…

சென்னையின் புறநகர்பகுதியின் வீடுகள் ஆங்காங்கே மண்ணில் விழுந்த நட்சத்திரங்களாய் தெரிந்து கொண்டிருக்க… தனது மொபைலை எடுத்தான்…
அதில் “1 Message(s) Recieved” என்றிருந்தது…

‘இரயிலேறிவிட்டேன். சில நிமிடங்களில் சந்திப்போம்…’ என்று இன்ஸ்பெக்டர் அனுப்பிய குறுந்தகவல் ஆங்கிலத்தில் இருந்தது…

அதைப் பார்த்ததும் தாஸூக்கு தான் மறந்த விஷயம் நினைவுக்கு வந்தது… தாத்தாவுக்கு தகவல் சொல்லவில்லையே..! என்றெண்ணியபடி தாத்தாவுக்கு ஃபோன் செய்ய எத்தனித்த போது… தாத்தாவிடமிருந்தே ஃபோன் வந்தது.

செல்ஃபோன் ரிங்டோன்
அழைக்காதே..! அழைக்காதே..!
அவைதனிலே எனையே ராஜா..!

எப்படி நாம் நினைத்தது தாத்தாவுக்கு தெரிந்திருக்கும். இதுதான் டெலிபதியோ..? இல்லை இது தற்செயல்தான் என்று தர்க்க ரீதியில் மனது தீர்ப்பளித்தாலும் சமயத்தில் இதையெல்லாம் நம்ப தோன்றுகிறதே… என்று உள்ளுக்குள் வியந்தபடி ஃபோனை ஆன் செய்தான்.

‘ஹலோ… ஓல்டு ஃப்ரெண்ட்… எப்படியிருக்கீஙக தாத்தா..?’ என்று குதூகலமாக பேச்சை தொடங்கினான்…

‘ஹலோ… தம்பி… நான் சுசீலா… பேசறேம்ப்பா..’ என்று சமையல்காரம்மாவின் குரல் கேட்டது…

‘சுசீலாம்மா..? என்னாச்சு..?’ என்ற தாஸின் குரலும் நடுக்கம் காட்டியது. என்ன நடந்திருக்குமோ என்று கணநேரத்தில் அவனுக்குள் ஏதேதோ விபரீத எண்ணங்கள் வந்து போனது…

‘தாத்தாவுக்கு ரொம்ப உடம்பு முடியாமயிருக்கு… அவரு உங்ககிட்ட சொல்லவேணாம்னு சொல்றாரு… எனக்குத்தான் மனசு கேக்கலை… அதான் ராத்திரியா இருந்தாலும் பரவாயில்லன்னு ஃபோன் பண்ணிட்டேன்…’ என்றவள் கூறிவிட்டு ஃபோனை வைத்துவிட… தாஸூக்கு நிற்கும் இடம் தள்ளாடியது. சரியாக சந்தோஷ் அங்கு வந்து சேர்ந்தான். தாஸின் நிலையைப் பார்த்ததும் அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

‘பாஸ் என்னாச்சு… பாஸ்..? பாஸ்… சீட்டுக்கு வாங்க… வந்து உக்காருங்க…’ என்று கூறியபடி அவனை கைத்தாங்கலாக அழைத்துவந்து சீட்டில் உட்கார வைத்தான்.

‘என்னாச்சு பாஸ்..? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க..?’ என்று சந்தோஷ் கேட்க, அவனைத் தொடர்ந்து அனைவரும், என்னாச்சு… என்னாச்சு… என்று கேட்டு கொண்டிருக்க… தாஸ் யாருக்கும் பதிலளிக்காமல், ஃபோனை எடுத்து தாத்தாவின் நம்பருக்கு டயல் செய்தான்.

‘ஹலோ..?’ மறுமுனையில் சுசீலாம்மா பேசினாள்.

‘சுசீலாம்மா… நா… நான்… தாத்தாகிட்ட பேசணும்..’ என்றுகூற, மறுமுனையில் சிறிது நேரம் மௌனம்…

‘ஹ்ஹ…ல்லோ…’ என்று மிகவும் பலஹுனமான குரலில் தாத்தா பேசினார்…

‘தாத்தா… உங்களுக்கு என்னாச்சு தாத்தா..?’
‘புதுசா ஒண்ணும் ஆகலை… வயசாகுதுல்லியா… இதெல்லாம் சகஜம்தான். இவ ஒரு பைத்தியக்காரி, சொல்லாதேன்னு சொன்னா கேக்காம, உனக்கு வேற ஃபோன் பண்ணிட்டா…’
‘தாத்தா, நா.. நான்… உங்களை பாக்க இப்பவே கிளம்பி வர்றேன் தாத்தா..?’

‘வேண்டாம் தாஸ்… நீ எங்கேயோ வெளியில… இருக்கே போலருக்கு… ‘

‘ஆமா தாத்தா… நான் அந்த கேணிவனத்துக்கு போக கிளம்பினேன். ஆனா….’ என்று இழுத்தவன், சிறிது நேர இடைவெளிக்கு பின் தொடர்ந்தான், ‘ஆனா, நான் போகலை தாத்தா, அடுத்த ஸ்டேஷன்லியே இறங்கிடறேன்… இப்பவே உங்களை பாக்க கிளம்பி வர்றேன்’ என்றான்.

தாத்தா, ஒரு சிரமமான பெருமூச்சுவிட்டபடி பதிலளித்தார்…

‘தாஸ், நீ ஒண்ணும் வரவேணாம். நீ வந்துட்டா மட்டும் எனக்கு சரியாயிடுமா..? நீ இப்போவே வந்து என்னை பாக்கிறதைவிட, கேணிவனத்துக்கு போயிட்டு வந்து என்னை பாக்க வந்தேன்னா, நாம நிறைய விஷயம் பகிர்ந்துக்கலாம். நா..நான்… உங்கிட்ட அதைத்தான் விரும்புறேன். இப்போ வராத… கேணிவனத்துக்கு போயிட்டு வா…’ என்று தன்னால் முடிந்தவரை உடையாத குரலில் தீர்க்கமாக கூறினார்.

தாஸூக்கு மிகவும் வருத்தமாக இருந்தது… மேற்கொண்டு எதுவும் பேசுவதற்குள் தாத்தா ஃபோனை கட் செய்துவிட்டார்.

————————

அடுத்த நாள்….

பகல் 11 மணியளவில், ட்ரெயின் ஒரு காட்டுப்பாதையில் நின்றிருந்தது… அனைவரும் முகத்தில் குழப்பத்துடன் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க… தாஸூம் அவன் குழுவினர்களும் தமது பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தனர்.

மக்கள் ட்ரெயினிலிருந்து இறங்கும் தாஸ் மற்றும் குழுவினர்களை, வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருக்க… இன்ஸ்பெக்டர் தனது செல்ஃபோனில் வண்டியின் கார்ட்-க்கு ஆங்கிலத்தில் நன்றி செலுத்திக் கொண்டிருந்தார். வண்டி நகர்ந்து அவர்களை கடந்தபடி அந்த இடத்தை விட்டு புள்ளியாய் சென்று மறைந்தது…

ஆறுபேரும் அந்த காட்டுப்பாதையை பார்த்துக் கொண்டிருந்தனர்…

‘ஸோ! தாஸ்… இந்த இடம்தானா..? நல்லாத் தெரியுமா..?’ என்று ப்ரொஃபஸர் உரிமையுடன் கேட்டார்…

‘நாங்க காட்டுல தொலைஞ்சதே வழி தெரியாமத்தான் சார். இந்த இடம் மாதிரிதான் தெரியுது… காட்டுக்குள்ள போய் பாத்தாதான் தெரியும்…’ என்று கூற, அனைவரும்… காட்டுப் பாதைக்குள் நுழைந்தனர்.

சமீபத்தில் பெய்திருந்த மழையினால், காட்டுப்பாதை மிகவும் மோசமாக இருந்தது… சொத சொத என்ற வழுக்குப்பாதையில் நடப்பது அவ்வளவு சுலபமாய் இருக்கவில்லை…

தாஸ் வழிகாட்டிபோல் முன்னால் நடந்து போய்க்கொண்டிருக்க… அவனைத் தொடர்ந்தபடி இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சர்வஜாக்கிரதையாய் அங்குமிங்கும் பார்த்தபடி நடந்துக்கொண்டிருந்தார்.

ஆனால், இன்ஸ்பெக்டரின் அலர்ட்-ஆன இந்த நடையும், அவர் அங்குமிங்கும் சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு நடக்கும் தோரணையும், சந்தோஷூக்கு சிரிப்பு வரவழைத்தது…. இது தாளமுடியாமல் அவரிடமே இதை கேட்டும்விட்டான்.

‘சார்… நீங்க ரொம்பத்தான் அலர்ட்-ஆ நடக்கறீங்க… நம்ம கர்நாடகா ஃபாரஸ்டுக்குதானே வந்திருக்கோம், நீங்க நடக்கிறதை பார்த்தா, ஏதோ அமேஸான் ஃபாரஸ்ட்டுக்குள்ள வந்தமாதிரி பில்டப்-ஆ இருக்கு..’ என்று கூறி சிரிக்க… அவர் நடந்தபடியே அவனுக்கு பதிலளித்தார்.

‘ஏன், அமேஸான் ஃபாரஸ்டுதான் அடர்த்தியான காடா..? கர்நாடகாவுல இன்னும் மனித கால் படாத காடுங்க எவ்வளவோ இருக்கு’ என்று கூறியபடி நடையைத் தொடர்ந்தார்.

‘சரி சார், ஒரு சின்ன கேள்வி…! இப்போ உங்க முன்னாடி புலியோ சிங்கமோ வந்துடுச்சின்னா என்ன பண்ணுவீங்க..?’ என்று நடந்தபடி கேட்க…

இன்ஸ்பெக்டர் சட்டென்று நின்று, திரும்பி சந்தோஷின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தார்…

சந்தோஷ் நடுங்கிப் போனான்.

‘அப்படி ஏதாச்சும் மிருகம் வந்திச்சுன்னா… இந்த துப்பாக்கியல ஷூட் பண்ணிடுவேன். புலியோ சிங்கமோ மட்டுமில்ல… வேற எந்த பிரச்சினை வந்தாலும் சரி, ஷூட் பண்ணிட வேண்டியதுதான்…’ என்று கூற, சந்தோஷ் கொஞ்சம் மிரண்டு போனான். அனைவரும் ஒரு கண நேரம் நின்று, அவர் கையிலிருந்த துப்பாக்கியை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

ப்ரொஃபஸர் நிலமையை சகஜமாக்க முயன்றார்…

‘சார், நீங்க ஷூட் பண்ணனும்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது… நான் என்னோட ஹேண்டி கேமிரா-வை கொண்டு வந்திருக்கேன்…! ஷூட் பண்றதுக்கு..’ என்று கூறி சிரித்தபடி, தனது பையிலிருந்து ஹேண்டி கேமிராவை எடுத்து ரெக்கார்ட் செய்து கொண்டே வந்தார்.

லிஷா மிகவும் தயங்கியபடி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்துக்கொண்டிருக்க, அவளை கைத்தாங்கலாக பிடித்தபடி சந்தோஷ் தொடர்ந்து கொண்டிருந்தான்.

ப்ரொபஸருக்கு நடப்பது கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. இருந்தாலும், ஹேண்டி கேமிராவில் அவர்கள் நடந்து செல்லும் பாதையை ரெக்கார்ட் செய்தபடி நடந்துக் கொண்டிருந்தார். அவருக்கும் பின்னால், சக்கரவர்த்தி என்ற அந்த புதிய நபர் செடிகொடிகளை சட்டை செய்யாமல் நல்ல அனுபவசாலி போல், மிகவும் அலட்சியமாகவே நடந்து வந்து கொண்டிருந்தார்.

———————————–

கிட்டத்தட்ட 3 மணி நேரமாக காட்டுக்குள் சேறுநிறைந்த பகுதிகளில் நடந்ததால் அனைவரும் களைப்படைந்திருக்க… ஒரு இடத்தில் கொஞ்சமாக வெட்ட வெளியும், பாறைகளும் தெரியவே, அங்கேயே அனைவரும் அமர்ந்தனர்.

லிஷாவுக்கு அசுரத்தனமாய் தண்ணீர் தாகமெடுத்தது… கையிலிருந்த பாட்டிலை முழுவதுமாக குடித்து முடித்தாள். இருந்தும், அவளுக்கு தாகம் அடங்கவில்லை…

‘சந்தோஷ்… தண்ணி பாட்டில் கொடு… தாகமே அடங்கலை…’ என்று கேட்க. அவனுக் எடுத்து கொடுத்தான்.

தாஸ் அவளை எச்சரித்தான்… ‘ரொம்ப தண்ணி குடிக்காத லிஷா… வயிறு ரொம்பிடிச்சுன்னா, அப்புறம் நடக்க ரொம்ப கஷ்டமா இருக்கும்…’

‘என்ன பண்ணட்டும் தாஸ்..! ரொம்ப தாகமா இருக்கே..!’ என்று கூற…

‘இதை சாப்பிடுங்க… தாகம் அடங்கிடும்..’ என்று சக்கரவர்த்தி ஒரு ப்ளாஸ்டிக் கவரை நீட்டினார்…

‘இது என்ன..?’ என்று சந்தோஷ் ஆவலாய் கேட்க…

‘நெல்லிக்காய்..’

‘நெல்லிக்கா எதுக்கு..?’ என்று லிஷா கேட்டாள்

‘இதைச் சாப்பிட்டா தாகம் அடங்கிடும், மறுபடியும் தாகம் எடுக்கும்போது, இன்னொரு நெல்லிக்காவை சப்பிக்கிட்டே வந்தா, நாக்குல நீர் வத்தாது…’ என்று சக்கரவர்த்தி விளக்கம் கொடுக்க, லிஷா அந்த நெல்லிக்காயை வாங்கி சாப்பிட்டாள்.

உண்மைதான், தாகம் சட்டென்று அடங்கிப்போனது… சில நெல்லிக்காய்களை எடுத்து தனது பையில் போட்டுக் கொண்டாள்.

‘ரொம்ப தேங்க்ஸ்… பரவாயில்லியே..! நீங்க ரொம்பவும் ப்ரிப்பேர்ட்-ஆ வந்திருக்கீங்க போல..?’

‘நான்தான் சொன்னேன்ல, இவரு காட்டுவழிப்பாதையில ரொம்பவும் எக்ஸ்பர்ட்னு…’ என்று ப்ரொஃபஸர், அந்த சக்கரவர்த்தியின் புகழை மீண்டும் பாடினார்.

‘வேற என்ன சார் கொண்டு வந்திருக்கீங்க..’ என்று சந்தோஷ் ஆவலாய் கேட்டான்…

‘வேணுங்கிறதை கொண்டு வந்திருக்கேன்..’ என்று அவர் மொட்டையாய் பதிலளித்தார்…

‘இருங்க நானே கெஸ் பண்றேன்… ம்ம்ம்… மருந்து கொண்டு வந்திருக்கீங்களா..?’

‘இல்ல…’

‘ஏன்..?’

‘அதான் இவ்வளவு பெரிய காடு இருக்கே… இங்கே இல்லாத பச்சிலை மருந்துகளையா நான் கொண்டு வரணும்..?’

‘ஓ.. அப்போ உங்களுக்கு சித்தா தெரியுமா..?’

‘சித்தாவும் தெரியும்…’

‘சரி, இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்ட கேள்வியையே உங்ககிட்டயும் கேக்குறேன். சும்மா ஒரு ஃபன்-க்காகத்தான்… திடீர்னு சிங்கமோ புலியோ வந்தா என்ன பண்ணுவீங்க..?’

‘வேட்டு வைப்பேன்…’ என்றவர்கூற…

‘வேட்டா..?’

‘வேட்டுன்னா, பட்டாசுய்யா…’ என்று சந்தோஷின் சந்தேகத்துக்கு, ப்ரொஃபஸர் பதிலளித்தார்…

‘பட்டாசை வச்சிக்கிட்டு என்ன பண்ணுவீங்க..?’

‘நம்ம இன்ஸ்பெக்டர் வச்சிருக்கிற துப்பாக்கியவிட, இந்த பட்டாசுகள் அதிகமா சத்தம் எழுப்பும். அந்த சத்தத்துக்கு எந்த மிருகமா இருந்தாலும், கிட்டவே வராது…’ என்று சக்கரவர்த்தி கூற, இன்ஸ்பெக்டர் அவனை ஒருமுறை முறைத்து பார்த்தார்.

மீண்டும் பயணம் துவங்கியது…

———————————-

சூரியன் உச்சியிலிருந்து சரிந்து கொண்டேவர… இவர்களது பிற்பகல் நேர பயணம் சுமூகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென்று வானம் இருண்டு கொண்டு, அந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் மீண்டும் பலத்த மழை வரும்போல் தோன்றியது.

‘இன்னும் பத்து நிமிஷத்துல பயங்கர மழை வரப்போகுது..’ என்று சக்கரவர்த்தி புலம்ப ஆரம்பித்தார்.

‘மழைதானே… வரட்டும் எனக்கு மழை ரொம்ப பிடிக்கும்’ என்று லிஷா கொஞ்சலாக கூறினாள்…

‘அடர்ந்த காட்டுக்குள்ள மழையில மாட்டுறதைவிட ஆபத்தான விஷயம் வேறெதுவுமில்ல..’ என்று சக்கரவர்த்தி கூற… அனைவரது முகமும் இருண்டு போனது.

இதற்குமுன் இந்த காட்டுக்கு குணாவுடன் வந்தபோது, தாஸ் இதே எச்சரிக்கையை குணாவிடம் கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது.
இன்று இரவு வருவதற்குள் எப்படியாவது கேணிவனத்தை கண்டுபிடித்துவிட வேண்டும் என்று அவன் நினைத்திருந்த வேளை, பலமாக மழை பிடித்தது…

அனைவரும் ஒரு அடர்த்தியான மரத்தின் கீழ் நின்றிருந்தனர். ஆனாலும், நனைந்துக் கொண்டுதான் இருந்தனர்.
மழை நீர் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு குட்டி ஓடையாக மாறி ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓடை ஓடும் திசையைப் பார்த்ததும், தாஸ் மனதிற்குள் ஏற்கனவே இருந்த ஐயம் உறுதியானது.

‘அடக்கடவுளே..!’ என்றான்.

‘என்னாச்சு.. தாஸ்..’ என்று இன்ஸ்பெக்டர் பதற்றத்துடன் கேட்க…

‘சார்… நாம திசை மாறி வந்துட்டோம்…’ என்றவன் கூறிமுடிக்க, அங்கிருந்த அனைவரது மனநிலையையும் எப்படியோ அறிந்துக் கொண்ட இயற்கை, இடிச்சத்தம் கொண்டு பின்னனி இசைத்தது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top