கேணிவனம் – 17

காலை 7.30 மணி…

தாஸூம் சந்தோஷூம் தி-நகர் போலீஸ் ஸ்டேஷனில் அமர்ந்திருந்தனர்…

இன்ஸ்பெக்டர் வாசு, சந்தோஷின் தொலைபேசி அழைப்பினால் ஸ்டேஷனுக்கு அந்த காலை வேளையில் துரிதமாக வந்திருந்தார். நடந்த நிகழ்வுகளை விசாரித்து, லிஷா முன்னாள் இரவு ஓட்டிக் கொண்டு போன தாஸின் கார் நம்பரை வெவ்வேறு ஸ்டேஷனுக்கு தெரிவித்து, தேடிப்பார்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

சந்தோஷ், ஒரு சிலையைப் போல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தான்…

இரண்டு நாட்களுக்கு முன்பும், இதே போலீஸ் ஸ்டேஷனில், விரக்தியாய் அமர்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அப்போது அவனை காப்பாற்ற லிஷா வந்தாள். ஆனால், இப்போது அவளும் இல்லை… அதனால், மிகவும் பலவீனமாக இருப்பதைப் போல் உணர்ந்தான். இன்ஸ்பெக்டர் அவன் நிலையை புரிந்துக் கொண்டவராய் அவனுக்கு ஆறுதல் கூறினார்…

‘சந்தோஷ், ஏன்யா இப்படி டல்-ஆ உக்காந்துட்டிருக்க… மனசை தளரவிடாத… எது நடந்தாலும் தாங்கிக்கிற மனப்பக்குவம் வேணும்…’ என்று சுலபமாக கூறிவிட, அவர் கருத்தை ஏற்றுக்கொள்ள எள்ளவும் முயலாமல் அமர்ந்திருந்தான்.

தாஸ், சந்தோஷின் சார்பாக, குணாமீது சந்தேகப்படுவதாக கம்ப்ளைண்ட் எழுதிக் கொண்டிருந்தான். எழுதி முடித்ததும், சந்தோஷிடம் கம்ப்ளைண்ட்டில் கையெழுத்து வாங்கப்பட்டு இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது…

கம்ப்ளைண்டை படித்துப் பார்த்த இன்ஸ்பெக்டர், தாஸை ஏறிட்டுப் பார்த்தார்…

‘மிஸ்டர் தசரதன்..?’

‘ப்ளீஸ் கால் மீ தாஸ்..’

‘தாஸ்..? நீங்க சந்தோஷூக்கும் லிஷாவுக்கும் என்ன வேணும்..?’ என்று கேட்க…

‘வெல்விஷர்… ஃப்ரெண்ட்… அதுக்கடுத்தபடியா இவங்களுக்கு பாஸ்…’ என்று மூன்றே வார்த்தைகளில் அவர்களுக்குள்ளான உறவுமுறையை பற்றி தாஸ் இன்ஸ்பெக்டருக்கு உணர்த்தினான்.

‘உங்க ப்ரொஃபஷன் என்ன..?’

‘நான் ஒரு ரைட்டர்… ஹிஸ்ட்ரி பேஸ் பண்ணி ஃபிக்ஷனல் நாவல்ஸ் எழுதிட்டிருக்கேன்..’

‘இந்த கேஸுல… உங்க ப்ரொஃபஷன் சைடுல பகைமை வர ஏதாவது காரணமிருக்கா..?’

‘தெரியல சார்… லிஷாவும் சந்தோஷும் என்னோட அஸிஸ்டெண்ட்ஸ்… எனக்கு என் கதைக்கு தேவையான வரலாற்று தகவல்களையும், வேற  தகவல்களையும் திரட்டி கொடுப்பாங்க… அவ்வளவுதான்…’ என்று தாஸ் விளக்கி கூறினான்.

‘ஓகே…’ என்று கூறியபடி இன்ஸ்பெக்டர் திரும்பி சந்தோஷை பார்த்தார்… அவன் இன்னமும் எங்கோ வெறித்தபடி உட்கார்ந்திருந்தான்.

‘சந்தோஷ்… பயப்படாத… என்ன ஆச்சுன்னு கண்டுபிடிச்சுடலாம்… இப்பவே குணா வீட்டுக்கு போய் அவனை மிரட்டி விசாரிக்கிறேன்’ என்று கூறியபடி இன்ஸ்பெக்டர் எழுந்து ஜீப்புக்கு சென்றார்…

‘சார்.. நீங்க தப்பா எடுத்துக்கலன்னா… நாங்களும் கூட வரலாமா..?’ என்று தயக்கத்துடன் தாஸ் கேட்க… அவர் இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு, சரி என்று தலையசைக்க, சந்தோஷூம் தாஸும் தனது இன்னோவாவில், போலீஸ் ஜீப்பை தொடர்ந்தபடி சென்றனர்.

————————–

ஜீப்,  குணா வீட்டை நெருங்கி நிற்க… இன்ஸ்பெக்டர் ஆர்வமாக இறங்கி வீட்டு கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றார்…

உள்ளே…

வீடு பூட்டியிருந்தது… குணாவின் ஃபோன் நம்பருக்கு ஃபோன் செய்தார்… அது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது…

‘சந்தேகமேயில்ல… இந்தப்பயதான் ஏதோ விளையாட்டு காட்டுறான்…’ என்று இன்ஸ்பெக்டர் கூற, தாஸூக்கு ஒருவழியாக ஆறுதலாக இருந்தது…

ஏனென்றால், லிஷா ஒருவேளை ஏதாவது விபத்தில் சிக்கி இறந்திருப்பாளோ என்ற பயம் உள்ளூர தாஸூக்கு இருந்து வந்தது… மேலும், அதிகாலையில் அவளிடமிருந்து வந்த ஃபோன்காலை வைத்து அவளுக்கு என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான். அவனுக்கு லிஷாவைவிட, சந்தோஷின் நிலையை நினைத்துதான் பதற்றமாய் இருந்தது…

‘டோண்ட் வர்ரி, எங்கே போயிடப்போறான். எப்படியும் ட்ரேஸ் பண்ணிடலாம்… நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க… குணாவைப் பத்தி தெரிஞ்சதும் நான் உங்களுக்கு இமீடியட்டா ஃபோன் பண்றேன்…’ என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத்தார்.

இருவரும் மீண்டும் தாஸின் இன்னோவாவில் ஏறி திருவான்மியூர் ஆஃபீசுக்கு திரும்பி கொண்டிருந்தனர்…

சந்தோஷ் மெல்ல பேச ஆரம்பித்தான்…

‘பாஸ், லிஷா உயிரோட இருப்பாளான்னு பயமாயிருக்கு..’ என்று நடுக்கத்தடன் சொன்னான்.

‘நீ மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா..? அவளுக்கு ஒண்ணும் ஆயிருக்காது.’

‘ஒரு வேளை அந்த குணா, அவளை கொலை பண்ணியிருந்தா என்ன பண்றது..?’

‘குணாவைப் பத்தி நீ தப்பா புரிஞ்சிட்டிருக்கே… அவன் அந்தளவுக்கு தைரியசாலி இல்ல… யாருக்கும் தெரியாம எவ்வளவு பெரிய தப்பு வேணும்னாலும் செய்வான். ஆனா, தன் மேல சந்தேகம் வந்து மாட்டிக்குவோம்னு தெரிஞ்சா… ஓடி போய் ஒளிஞ்சுக்குவான்… இப்போக்கூட அப்படித்தான் ஒளிஞ்சியிருக்கானோன்னு தோணுது..’

‘அப்போ லிஷா, அவன்கிட்ட இல்லேங்குறீங்களா..?’

‘தெரியல… ஆனா, சான்ஸஸ் கம்மின்னு சொல்றேன்…’

‘அப்போ, லிஷா வேற எங்கேயிருப்பா..?’

சற்று நேரம் மௌனமாய் இருந்துவிட்டு தொடர்ந்தான்… ‘சாரி சந்தோஷ்… என்னால எதுவும் கெஸ் பண்ண முடியல…’ என்று கூறியபடி காரை மெதுவாக ஓட்டிக்கொண்டிருந்தான்.

லிஷா எங்கே…? லிஷா எங்கே…? என்று அவனுக்குள்ளும் அந்த கேள்வி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தது…

—————————

சில மணி நேரங்களுக்கு பிறகு…

போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் வாசுதேவன் ஃபோனில் பேசி கொண்டிருந்தார்…

‘வாட்… அப்படியா..?’

‘. . . . . ‘

‘நல்லா செக் பண்ணி பாத்தீங்களா..?

‘. . . . .. ‘

‘இன்பர்மேஷன் கரெக்டதானா..?’

‘. . . . . .’

‘ஷிட்…!’ என்று சற்றே தளர்ந்தவர்… ‘ஓகே… நான் மறுபடியும் லைன்ல வர்றேன்..’ என்று ஃபோனை துண்டித்தார்…

அருகிலிருக்கும் கான்ஸ்டபிள் ஆர்வம் தாங்காமல்… அவரிடம் வந்து… ‘என்ன சார்… என்னாச்சு… அந்த லிஷா பொண்ணுக்கு உயிருக்கு ஏதாச்சும் ஆபத்தா..’ என்று தன்னுடைய கணிப்பில், இன்ஸ்பெக்டர் ஃபோனில் பேசியதை வைத்து தோராயமாக கேட்டார்… இன்ஸ்பெக்டர் அவரை சற்றே முறைப்பது போல் பார்த்தார்… பிறகு

‘அதெல்லாம் ஒண்ணுமில்ல… அந்த குணா ஊர்லியே இல்லியாம்… மிஸ்ட்ரி டிவி சேனல் ஆளுங்களோட ஏதோ ப்ரோக்ராம் ஷூட் பண்ண போயிருக்கானாம்…’ என்று கூற

‘என்னது ஷூட்டிங்-க்கு போயிருக்கானா..? எதுக்காம்..’ என்று மீண்டும் கான்ஸ்டபிள் ஆர்வமாய் கேட்க…

‘அதெல்லாம் எதுக்கு நமக்கு… அவன் லிஷாவை கடத்தலை… அப்போ லிஷா எங்கே..? இப்போ, அதுதான் நம்ம பிரச்சினை..’ என்று இன்ஸ்பெக்டர் சற்றே கோபப்பட்டார்…

‘சார்.. ஒருவேளை இப்படி சொல்ல சொல்லி குணாவோட பொய் ஏற்பாடா இருந்தா..?’

‘சேனல்காரங்க பொய் சொல்லமாட்டாங்க… அங்க வெரிஃபை பண்ணிட்டுதான் நமக்கு இன்ஃபார்ம் பண்றாங்க…’

‘அப்போ, லிஷா எங்கே சார்.?’

‘அதான் தெரியல… நீங்க எதுக்கும் தாஸையும் சந்தோஷையும் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுங்க…’ என்று கூறிவிட்டு, ஸ்டேஷனுக்கு வெளியே சென்று சிகரெட்டை பற்ற வைத்தார்… அடுத்தடுத்ததாக இரண்டு சிகரெட்டுகள்…

அந்த ஸ்டேஷனுக்கு லிஷா நேற்று வந்து பேசியதும்… சில நிமிடங்களிலேயே அந்த ஸ்டேஷனின் சூழலை தனக்கு சாதகமாக மாற்றியதும்…  என்று இன்ஸ்பெக்டர் நினைவுகூர்ந்தபடி புகைபிடித்திருந்தார்…

அந்த ஸ்டேஷனில் அனைவருக்கும் லிஷாவை தனிப்பட்டமுறையில் பிடித்திருந்தது… பாவம் அந்த பெண்… அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது… என்று மனதளவில் தான் ஒரு போலீஸ் என்பதையும் மறந்து பிரார்த்தனை செய்துகொண்டார்… ஒவ்வொரு முறையும் அவர் ஊதிவிடும் சிகரெட் புகைகளில், ஒருமுறை மட்டுமே பார்த்த அந்த பெண்ணின் முகத்தை தேட முயற்சித்தார்… அவள் முகம் அவர் நினைவுக்கு சிக்கவில்லை… முகம் மட்டுமா..? அவள் எங்கிருக்கிறாள் என்ற குறிப்பும் எதுவும் சிக்காமல் இருந்தது…

தனது இரண்டாவது சிகரெட் கரைந்திருக்கும் போது மீண்டும் ஸ்டேஷனுக்குள் நுழையவும்… சரியாக தாஸும் சந்தோஷூம் ஸ்டேஷனுக்கு வந்தடைந்தனர்…

‘ஹலோ சார்..? குணா எங்கேயிருக்கான்னு கண்டுபிடிச்சுட்டீங்களா..?’ என்று நுழைந்தபடியே தாஸ் விசாரிக்க…

‘கண்டுபிடிச்சிட்டோம்… ஆனா, குணா லிஷாவை கடத்தலை… இன் ஃபாக்ட் அவன் இப்போ சென்னையிலியே இல்ல..’ என்ற இன்ஸ்பெக்டரின் பதில், அருகிலிருந்த சந்தோஷூக்கு மீண்டும் அதிர்ச்சியாய் இருந்தது…

‘வேறெங்க போயிட்டான்..’ என்று சந்தோஷ் ஆர்வம் தாளாமல் கேட்டான்…

‘அவன், மிஸ்ட்ரி டிவி சேனல் ஆளுங்களோட, ஏதோ ப்ரோக்ராம் ஷூட் பண்ண நேத்து நைட்டே கிளம்பிட்டாங்களாம்…. மும்பை மெயில்-ல ஏறுனதா கன்ஃபர்ம் பண்ணியிருக்காங்க… சோ அவன்கிட்ட லிஷா இல்ல-ங்கிறது நிச்சயம்…’ என்று கூற, தாஸ் முகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது…

அடக்கடவுளே..? இந்த குணா எதிர்பார்த்ததைவிட அதிக அவசரகுடுக்கனாக இருக்கிறானே..? இப்போதிருக்கும் நிலையில், லிஷாவை விட்டுவிட்டு அவனை முந்திக்கொண்டு அந்த கேணிவனத்துக்கு செல்வது என்பது இயலாத காரியம்… என்று மனதிற்குள் வெம்பினான்… ஆனால், சந்தோஷூக்கு இது பெரிய அதிர்ச்சியாக இருக்கவில்லை… அவன் கருத்தெல்லாம் லிஷாவின் மீது இருந்தது…

தாஸ் மிகவும் குழம்பிப் போனான்… லிஷாவைத் தேடுவதா, குணாவை முந்துவதா, சந்தோஷூக்கு ஆறுதலளிப்பதா… என்ன நிலையிது… என்று குழம்பிக்கொண்டிருந்தான்…

அப்போது, இன்ஸ்பெக்டருக்கு ஃபோன் வந்தது…

‘ஹலோ..?’

‘ . . . . . . ‘

‘அப்படியா..?’

‘. . . . . . .’

‘ஆமா, அதே நம்பர்தான்… எந்த ஏரியாவுல நின்னுட்டிருக்கு..?’

‘. . . . . .’

‘உள்ளே யாராவது இருக்காங்களா..? வண்டி ஆக்ஸிடெண்ட் ஏதாவது ஆன மாதிரி மார்க்ஸ்..?’

‘. . . . . ‘

‘குட், இப்பவே கிளம்பி வர்றேன்…’ என்று கூறி, ஃபோனைவைத்துவிட்டு, தாஸ் பக்கமாக திரும்பி…

‘தாஸ், சந்தோஷ் உடனே கிளம்புங்க… லிஷா ஓட்டிட்டு போன கார்.. பெசண்ட் நகர் பக்கமா, ஒரு கிஃப்ட் ஷாப் வாசல்ல நின்னுட்டிருக்காம்…’

‘சார்..? ஆக்ஸிடெண்ட் ஏதாவது..?’

‘நோ.. நோ… வண்டி முழுசாத்தான் இருக்கு… உள்ளே ஆளில்லே…’ என்று கூறியபடி இன்ஸ்பெக்டர் ஜீப்பில் ஏறி செல்ல… தாஸூம் சந்தோஷும் இன்னோவாவில் ஏறி, போலீஸ் ஜீப்பை பின்தொடர்ந்தபடி சென்றனர்…

——————————–

பெசண்ட் நகர்…

“MIGHTY GIFTS” என்று ஒரு கிஃப்ட் ஷாப் வாசலில், லிஷா ஓட்டிச் சென்ற தாஸின் கார் நின்று கொண்டிருந்தது… இன்ஸ்பெக்டர் வாசு அந்த காரை சுற்றி சுற்றி பார்வையால் அலசிக் கொண்டிருந்தார்… தாஸும் தன் சாவிக்கொத்திலிருந்த டூப்ளிகேட் சாவியை பிரயோகித்து காரை திறந்தான். உள்ளே ஒரு கிஃப்ட் பாக்கெட் இருந்தது…

இன்ஸ்பெக்டர் அந்த பாக்கெட்-ஐ உற்று நோக்கினார்…

தாஸ் அவரிடம், ‘சார்… இதை ஓபன் பண்ணி பாக்கலாமா..?’ என்று கேட்க…

‘நோ.. நோ.. அவசரப்படாதீங்க..’ என்று கூறி, தன்னருகில் இருந்த கான்ஸ்டபிளிடம் அந்த பார்சலை கொடுத்து… ‘அந்த கிஃப்ட் ஷாப்புக்குள்ள போய் இந்த பார்சல் இங்கே வாங்கினதுதானான்னு கேட்டுட்டு வாங்க..’ என்று ஏவிவிட… அந்த கான்ஸ்டபிள் விசாரிக்க சென்றார்..

‘கார் இப்போ கிடைச்சிட்டதால, கிட்நாப்பிங்-ஆ இருக்கும்னு அஸ்யூம் பண்ண முடியுது… இருந்தாலும், கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டா நல்லாயிருக்கும்..’ என்று இன்ஸ்பெக்டர் தாஸிடமும் சந்தோஷிடமும் கூறிக்கொண்டிருக்க… கான்ஸ்டபிள் திரும்பி வந்தார்…

‘சார், இந்த கடையில வாங்கினதுதானாம்… நேத்து நைட் பர்சேஸ் பண்ணியிருக்காங்க…’ என்று கூற, இன்ஸ்பெக்டர் அந்த பார்சலை பிரித்தார்… அதில்… ஒரு அழகான ராஜாவும் ராணியும் நடனமாடுவதுபோன்ற ஒரு பொம்மை இருந்தது… அதற்கு அடியில் ஒரு ‘க்ரீட்டிங் கார்டு’ இணைக்கப்பட்டிருக்க… அதை எடுத்து பிரித்து படித்தார்…

என் அன்பு காதலனுக்கு,
உன் பிறந்தநாளுக்கு காதலியாய் எனது கடைசி பரிசு (அடுத்த வருஷம்தான் நான் உன்  மனைவியாயிடுவேனில்ல..!)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
லிஷா

என்று எழுதியிருக்க… இன்ஸ்பெக்டர் திரும்பி சந்தோஷை பார்த்து…

‘சந்தோஷ்..? இன்னிக்கி… உங்க பிறந்த நாளா..?’ என்று கேட்க, அப்போதுதான் சந்தோஷூக்கே அது நினைவு வருகிறது.. ‘ஆமா சார்..’ என்று பரிதாபமாக கூற, லிஷாவின் அந்த பரிசை இன்ஸ்பெக்டர் அவனிடம் கொடுத்தார்…

சந்தோஷ் அதை படித்து பார்த்துவிட்டு ‘லி..ஷ்..ஷா…ஆஆ…’ என்று கதறி அழ ஆரம்பித்தான்… நிற்க முடியாமல் தடுமாறியபடி அழுத சந்தோஷை தாஸ் தாங்கலாக பிடித்தபடி தனது இன்னோவை நோக்கி அழைத்து சென்றான். அங்கிருந்த போலீஸ்காரர்களும் அவன் அழுவதை பார்த்து கலங்கினர்…

தாஸ் அவனை அழைத்து வந்து தனது காருக்குள் அமர வைத்தான்…

‘ப்ளீஸ் சந்தோஷ் அழாதே… லிஷாவுக்கு ஒண்ணும் ஆகாது… எப்படியும் கண்டுபிடிச்சிடுவோம்… நான் பாத்துக்குறேன்..’ என்று ஆறுதல் கூற…

சந்தோஷ் அழுதபடி, ‘என் பிறந்த நாளுக்கு ஞாபகமா கிஃப்ட் வாங்கி வச்சிருக்கா பாருங்க பாஸ்… அதுவும், காதலியாய் கடைசி பரிசுன்னு வேற போட்டுட்டு போயிருக்கா..’ என்று கூறி கூறி அழும் அவனை நினைக்க தாஸுக்கும் அழுகை வந்துவிடும்போலிருந்தது…

‘சரி, அழாதே.. நீ இந்த வண்டியிலியே உக்காந்துட்டிரு… நான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிட்டு வந்துடுறேன்..’ என்று சந்தோஷை இன்னோவாவில் அமரவிட்டுவிட்டு, மீண்டும் இன்ஸ்பெக்டரிடம் வந்தான்…

‘என்ன சார், இப்போ லிஷாவை வேற எப்படி டிரேஸ் பண்றது..?’ என்று கேட்க…

‘தெரியல… கிட்நாப்பிங்தான்-னா… ரொம்பவும் நீட்டா நடந்திருக்கு.. கார்ல ஒரு கீறல் கூட இல்ல…. வாங்குன கிஃப்ட் அழகா பேக் பண்ணி, காருக்குள்ள வச்சி லாக் செய்யப்பட்டிருக்கு… அவளை யாரும் பலவந்தமா இழுத்துட்டு போகலைன்னு தோணுது… சோ… மே பி… லிஷாவுக்கு நல்லா தெரிஞ்சவங்க இதுல இன்வால்வ் ஆகியிருக்கலாம்… ஆனா ஒரு விஷயம்தான் குழப்பமா இருக்கு…’

‘என்னது சார்..?’

‘ஒருவேளை பணத்துக்காக கிட்நாப் பண்ணியிருந்தாங்கன்னா, இதுவரைக்கும் அவங்க டிமாண்ட்ஸை ஃபோன் பண்ணி சொல்லியிருப்பாங்க… ஃபோன் வராததால இது மணி மோட்டிவ் கிட்நாப்பிங்தானான்னு கன்ஃபர்ம் பண்ண முடியாம இருக்கு…’ என்று இன்ஸ்பெக்டர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தாஸின் செல்ஃபோனில் பழைய ரிங்டோன் ஒலித்தது…

ரிங்டோன்
நாடகமெல்லாம் கண்டேன் உனது
ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
சேலாடும் விழியிலே…

டிஸ்ப்ளேவில் ‘லிஷா காலிங்..’ என்று வந்தது…

‘சார்… லிஷாகிட்டருந்து ஃபோன்..’ என்று கூற, அங்கிருக்கும் அனைவரது கவனமும், தாஸ் மீது படர்ந்தது…

‘எடுங்க… எடுத்துப் பேசுங்க தாஸ்… கேஷூவலா பேசுங்க… நாங்க கூட இருக்கிற மாதிரி காட்டிக்காதீங்க…’ என்று இன்ஸ்பெக்டர் செயல்முறையை விளக்க… தாஸ் பதற்றத்துடன் அந்த ஃபோனை எடுத்து ஆன் செய்தான்…

‘ஹலோ..?’

‘. . . . .’

‘ஹலோ..? லிஷா..?’

‘. . . . .’

‘பிரம்ம சித்தர் சமாதி இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சி சொல்லு…  இல்லன்னா கண்டிப்பா லிசாவைக் கொண்ணுடுவேன்…’ என்ற மறுமுனை குரல் , ஒரே வரியில் பேசிமுடித்ததும் இணைப்பு துண்டிக்கப்பட்டது…

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top