Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பேய்கள் ஓய்வதில்லை – 5

பேய்கள் ஓய்வதில்லை – 5

செல்வி அந்தம்மாவிடம் இருந்து கையை உதறிய சமயம் தெருவில் ஒரே கூட்டமாய் மக்கள் ஓடினார்கள். என்னடா இது எங்கே ஒடுகிறார்கள் என்று ஒரே ஆச்சர்யமாக போய் விட்டது ராகவனுக்கு என்ன இது இன்று காலையில் இருந்து நடப்பது எல்லாம் வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டு ஓடுபவர்களை மறித்து எங்கே ஓடறீங்க? என்ன விசயம் என்றான்.

நம்ம ஏரிக்கரையோரமா ஏதோ பிணம் கிடக்காம்! போலிஸ் வந்திருக்கு அதான் போறோம். என்று சொல்லிவிட்டு சென்றான் ஒருவன்.

இது என்னடா புது கேஸ்! நம்ம ஊரில் கூடவா இப்படி நடக்கும்? என்று வியந்தவாறே ஏம்மா அப்ப வினோத்த நீ பார்க்கலியா? என்றான் ராகவன்.

இல்லேன்னா! அவர் சாப்பிட கூப்பிட்டதுதான் தெரியும்! நீங்க என்னல்லாமோ சொல்றீங்களே என்றாள் அவள்.

அப்படியா! என்று அவளை வினோதமாக பார்த்த ராகவன், டேய் வினோத் நீ வரும் போதே ஏதோ வில்லங்கத்தோட வந்து மாட்டியிருக்கேடா! என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு சரிவாம்மா! உன்னை வீட்டுல விட்டுட்டு நான் வினோத்தை தேடறேன் என்றான்.

இல்லேன்னா! பக்கத்துலதானே வீடு  நான் போயிக்கறேன் நீங்க போயி வினோத்தை கூட்டி வாங்க என்றாள் அவள்.

சரி என்று ராகவன் தலை அசைத்துவிட்டு எங்கு போயிருப்பான் இவன் என்று கிளம்பி வினோத் சென்ற திசையில் சென்றான். எல்லாத் தெருக்களும் சுற்றிவிட்டு அப்படியே காவல் தெய்வம் போரியம்மன் கோவில் அருகில் வந்ததும் நின்றான் ராகவன்.

அங்கு வினோத் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்தில் சலனமில்லை! அந்த அம்மனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகில் சென்ற ராகவன். டேய் வினோத் என்னடா ஆச்சு இங்க நிற்கறே! செல்வி வந்துட்டா வாடா போகலாம் என்றான்.

என்னது செல்வி வந்துட்டாளா?

ஆமாம்டா! இப்பத்தான் வந்தா!

எப்படி எப்படி வந்தா?  இந்த கோயில் வரைக்கும் ஓடி வந்த அவ மாயமா மறைஞ்சி இல்ல போனா? எப்படி? என்றான் வினோத்.

நிஜமாத்தாண்டா! அவ நார்மலா ஆயிட்டா! சாதாரணமா இருக்கா! கொஞ்ச நேரத்துக்கு முந்தி நடந்துகிட்ட செல்வியா இதுன்னு எனக்கே ஆச்சர்யமா இருக்குது. வா வீட்டுக்கு போய் சாப்பிடலாம். எதுக்கும் நாளைக்கு ஏதாவது மந்திரவாதியை பார்த்து மந்திரிச்சிக்கிலாம் என்றான் ராகவன்.

சரிடா! என்ற வினோத் அவனுடன் நடந்தான்.

வீட்டிற்கு வந்தனர். செல்வி வந்துட்டாளா? தட்டு வை இவனுக்கும் அந்த பெண்ணுக்கும் இலை போடு சாப்பிடலாம் என்றான் மனைவியிடம் ராகவன்.

ஏங்க! அந்த பொண்ணு இன்னும் வரவே இல்லைங்க!

என்ன சொல்றே இப்பத்தானெ பத்து நிமிசம் முன்னாடி அனுப்பி வைச்சேன்! நல்லா பேசுச்சே நான் வீட்டிற்கு போயிடறேன்னு சொல்லுச்சே!

இல்லீங்க இங்க இருந்து சாப்பாடு வேணாம்னு போனது இன்னும் திரும்பவே இல்லங்க!

இது என்னடா சோதனை என்று ராகவன் அலுத்துக் கொண்டான். சரி வா போய் தேடுவோம். என்று கிளம்பினர்.

வாசலுக்கு வந்து தெருவே விசாரித்துக் கொண்டு வந்தனர். ஏம்பா இவன் கூட ஒரு பொண்ணு வந்துச்சே அதை பார்த்தியா? ராகவன்கேட்க

அனைவரும் அவனை வித்தியாசமாக பார்த்தனர். யாரும் யாருப்பா அது பார்க்கலயே என்றனர்.

அப்போது ஏரிக்கரை பிணத்தை பார்க்க சென்ற கும்பல் ஒன்று திரும்பி வந்தது. அவர்களிடம் விசாரித்தான் ராகவன். ஏம்பா நீங்க போகும் போது என் கூட ஒரு பொண்ணு இருந்துச்சே அதை பாத்தீங்களா?

ஒரு சிறுவன் பதில் தந்தான். அந்த அக்காவா? அவங்க எங்களோடத்தான் ஏரிக்கரைக்கு வந்தாங்க! அங்கதான் இருக்காங்க!

வினோத்தும் ராகவனும் வேகமாக ஏரிக்கரைக்கு சென்றார்கள் அந்த கரையொரமாக இருந்த கும்பலை போலிஸ் விரட்டிக் கொண்டு இருக்க  அதற்கு எதிர்ப்புறமாக அந்த பிணத்தையே பார்த்து ஒரு கெக்களிப்பு சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள் செல்வி.

வினோத், செல்வியின் கையை பிடித்து இழுத்து, செல்வி என்ன இது? இங்க ஏன் வந்தே?என்று கேட்டான்.

விறுட்டென்று திரும்பிய செல்வியின் கண்களில் அனல் மின்னியது. சந்திரமுகி ஜோதிகா போல் ஒரு பார்வை!  விடு கையை! யார் நீ என்னை கேட்க என்று கேட்டாள்.

ஒரு நிமிடம் வினோத் மிரண்டு போனான். செல்வி! செல்வி! என்ன ஆச்சு உனக்கு ஏன் இப்படி வித்தியாசமா நடந்துக்கிற? என்றான்.

நான்.. நான் செல்வி இல்லே!

அப்ப நீ யாரு?

போக போகத்தெரியும் என்றாள் செல்வி.

இதற்குள் இவர்களை சுற்றி கும்பல்கூடிவிட்டது. அது மட்டும் இல்லாமல் போலீஸ் வேறு இங்க என்ன கும்பல் ஒதுங்கு ஒதுங்கு என்று கும்பலை விரட்டியது.

செல்வி வா போகலாம் இம்முறை அழைத்தது ராகவன்.

பதில் பேசாமல்  நடந்தாள் செல்வி.

நிமிடத்திற்கு நிமிடம் மாறிநடக்கும் செல்வியின் விசித்திர போக்கு ராகவனுக்கு ஆச்சர்யமாக மட்டுமல்ல, பயமாகவும் இருந்தது. சிறிது நேர மவுனமானபிரயாணத்திற்குபிறகு மூவரும் வீடுவந்தனர்.

இதற்குள் ராகவன் வீட்டு வாசலில் ஒரு கும்பலே கூடியிருந்தது. என்ன ராகவன் சார்! இந்த பொண்ணு யாரு? எதிர்த்தவீட்டிலபோயி கலாட்டா பண்ணாலாமே என்ன விசயம்? என்று வந்ததும் வராததுமாய் கேட்க ஆரம்பித்து விட்டார் பெருந்தனக்காரர் மணி.

ராகவனின்  தந்தையின் நண்பர் அவர். சிறுவயது முதலே பழக்கம். அவருக்கு சொல்லாமல் இருக்க முடியுமா? இது மட்டுமில்லாமல் ஒரு பெண்கள் கூட்டம் வைத்த கண் வாங்காமல் செல்வியையே பார்த்துக் கொண்டிருந்தது இது செல்விக்கு புதுமையாக இருந்தது.

ராகவன் சுருக்கமாக நடந்த அனைத்தையும் மணியிடம் சொல்லி முடித்தான். இந்த பொண்ணு மேல எதோ ஆவி இறங்கி இருக்குதுன்னு நினைக்கிறேன். இப்படித்தான் என் பேத்தி மேல கூட ஒரு பேயி இறங்கி படாத பாடு படுத்திச்சி!

இது என்ன புதுக் கதையா இருக்கு  என்றான் ராகவன்.

வயசுக்கு வந்த பொண்ணாச்சே! இந்த விசயம் தெரிஞ்சா அப்புறம் யாரு பெண்ணை கட்டுவான்? அதான்  கமுக்கமா இருந்துட்டோம். இப்ப சுமார் ஆகி நல்லா ஸ்கூலுக்கு போயிட்டு வர்றா! இந்த மாதிரி பேய் மேட்டருக்கெல்லாம் நம்ம முஸ்லீம் நகர் தர்கா பாய் கிட்ட போறது தான் பெட்டரு! அவரு பாத்தாருன்னா எப்பேர் பட்ட பேயும் ஓடி போயிடும் என்ன பழைய பாய் இப்ப இல்லே! அவரு ஏ. ஆர் ரஹ்மானுக்கே வைத்தியம் பாத்தவரு! என்றார் மணி.

உங்க பேத்திக்கு என்ன ஆச்சு சார்? அதை சொல்லுங்களேன் என்றான் வினோத்.

சரி இங்க வாணாம்! அப்படி ஓரமா போயி பேசுவோம்! யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு நினைச்சேன். இன்னிக்கு என் நாக்குல சனி புகுந்துட்டா போல என்று சலித்துக் கொண்டே கொஞ்ச தூரமாக அழைத்துச் சென்று கோயில்படிக்கட்டு அருகில் அமர்ந்தார் மணி.

என் பேத்தியை நல்லா படிக்குதுன்னு கான் வெண்ட் ஸ்கூலுக்கு அனுப்புனான் என் மவன். வேண்டாம்டா! இங்க பக்கத்துல இருக்கற கவர்மெண்ட் ஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைடான்னா கேக்கலை! அதான் அனுபவிச்சான்! ஸ்கூலுக்கு அழுதது இல்லாமா தனியா ஒரு ஐம்பதாயிரம் ரூபா இந்த பொண்ணுக்கு செலவழிக்க வேண்டியதா போச்சு!

என்ன பேய் ஓட்ட அவ்வளவு செலவு ஆகுமா?

முதல்லேயே பேய்னு தெரிஞ்சுதா? ஏதோ நோவுன்னு இந்த ஆஸ்பத்திரி அந்த ஆஸ்பத்திரின்னு  போயி கொஞ்சம் செலவு பண்ணிட்டு அப்புறம் இல்ல பாய்கிட்ட போயி நின்னோம்! முதல்லேயே தெரிஞ்சிருந்தா பத்தாயிரத்தோட முடிஞ்சிருக்கும் என்று அலுத்துக் கொண்டார் மணி.

சரி அப்புறம் என்ன ஆச்சு?

இந்த பொண்ணு படிச்ச ஸ்கூல்ல டீச்சருங்க டார்ச்சர் ஜாஸ்தி போல! ஒரு சுமாரா படிக்கிற பொண்ணு ஒண்ணு  டீச்சருங்க தொல்லை தாங்காமா மூணாவது மாடியில இருந்து விழுந்து தற்கொலை பண்ணிகிச்சு போல பாவி பசங்க இத பணத்தாலே மூடி மறைச்சுட்டாங்க!

அந்த ஆத்மா அங்கேயே அலைஞ்சி கிட்டு இருந்தா போல நல்ல வெயில் நேரத்துல பிராக்டிகல் செய்ய கெமிஸ்டிரி லேபுக்கு போயிருக்கா என் பேத்தி.  மூனாவது மாடியில தான் அந்த லேப் இருந்திருக்கு.

மூணாவது மாடிக்கு போன பேத்தி லேபை திறந்து உள்ள நுழைஞ்சு இருக்கா! ஒரே இருட்டா இருக்கு. அப்படியே துழாவி  ஸ்விட்சை போட்டுருக்கா.

வெளிச்சம் பரவி இருக்கு எதிர்ல பெஞ்சு மேல அந்த செத்து போன பொண்ணு உட்காந்து ஏதோ செஞ்சிகிட்டு இருந்திருக்கா!

என்னாடா இது! பூட்டின ரூமுக்குள்ள பொண்ணு! எப்படி? அது பேயின்னு தெரியாம என் பேத்தி கிட்ட போயி மேல தொட்டு ஏய்? யாரு நீ எப்படி நீ உள்ளே வந்தேன்னு கேட்டுருக்கா?

அந்த பேயி மெல்லமா திரும்பி ஒரு பார்வை பார்த்து சிரிச்சுச்சாம் ! இவ நடுக்கமெடுத்து வீல்னு அலறிகிட்டு கீழே விழுந்தவதான் எந்திரிக்கவே இல்லை!

மணி சொல்லிக் கொண்டே போக ஆர்வமுடன் கேட்ட இருவருக்கும் உடல் சிலிர்த்தது. மூன்றாவதாக ஒரு உருவமும் இவர்கள் பேசுவதை கேட்டது. அது!

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top