Home » அதிசயம் ஆனால் உண்மை » அமானுஷ்யம் » பேய்கள் ஓய்வதில்லை – 3

பேய்கள் ஓய்வதில்லை – 3

முகேஷ் செல்போனை ஆன் செய்தான்!முதலில் முகேஷின் பயந்த குரல் பின்னர் ரவியின் உடைந்த குரல் மாறி ஆக்ரோஷமாய்

ஏண்டா மடையா எத்தினி பேயி படம் பார்த்திருப்பே? இப்படி ட்யூப் லைட்டா இருக்கியே? ரவி உடம்புல நான் புகுந்துட்டேன்! டொட்டடொய்ங்க்!

என்ன.. து! நீ ரவி உடம்புல புகுந்திட்டியா? யாரு யாருடா நீ!

அது! அது என்ன எத்தினி பேரு சேர்ந்து அடிச்சி கொன்னு போட்டாங்க தெரியுமா? அவங்களை நான் பழி வாங்க வேண்டாம்!

என்னது உன்னை அடிச்சி கொன்னுட்டாங்களா?

ஆமா! பிரண்ட்! ம்ம்ம்! ரவி அழ ஆரம்பித்தான்! நான் என்ன தப்பு செஞ்சேன்! ஒரு பொண்ணை லவ் பண்ணேன். அந்த பொண்ணும் என்னை லவ் பண்ணுச்சு! பாவிப் பசங்க  பொண்ண கொடுக்க விருப்பம் இல்லாமா என்னையும் அந்த பொண்ணையும் கொன்னுட்டாங்க! நான் விடமாட்டேன்! அவங்களை விடமாட்டேன்! ஆவேசமாக பேசினான் ரவி.

ரவி! ரவி உனக்கு என்னடா ஆச்சு இப்படியெல்லாம் பேசற? வியர்த்து வழிந்தபடி கேட்டான் முகேஷ்.

டேய்! விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு இப்ப சீதைக்கு ராமன் சித்தப்பான்னு கேக்குற? நான் தான் சொன்னேனே! நான் ரவி இல்லே!

அ.. அப்ப நீ யாரு?

அட அத நாங்க சொல்லிடுவோமா? இப்ப நான் வாரேன்! இவன் உடம்பு எனக்கு செட் ஆவலை? நாளைக்கு உன் உடம்பை டெஸ்ட் பண்ணி பார்க்கறேன்! இப்ப வரட்டா?

ஏறக்குறைய பத்துநிமிடங்கள் ஒலித்த அந்த செல்போன் உரையாடல் நின்றது. ரவி முகம் வெளுத்திருந்தான். அவன் உடல் அதிர்ந்தது. டேய் நானாடா இப்படி பேசினேன் டேய் என்னால நம்ப முடியலைடா!

நானும் தான் நம்பலை! ஆனா நீ கரண்ட் போனதும் பண்ண கூத்து என்னையே நடுங்க வைச்சிருச்சு! வீட்லயும் யாரும் இல்லை ஒரே பயமா இருக்கு! உன்னை இங்க தங்க வைச்சுக்கவும் பயமா இருக்கு  என்ன பண்றதுன்னே ஒன்னும் புரியலை!

ரவியும் திகைத்தான். இதுவரை நண்பனாக பார்த்த முகேஷ் இப்போது ஏதோ ஒருவித வேண்டாத வஸ்துவைப் போல பார்ப்பதாக உணர்ந்தான் ரவி. முகேஷ்! ஏண்டா என்னென்னொமோ சொல்றே? என்னை பார்த்து ஏண்டா பயப்படறே என்றான்.

டேய் உன்னை பார்த்து பயப்படலை! உன் மேல இறங்கி இருக்குற ஆவியை பார்த்துதான் பயப்படறேன்!

ஆவியாவது மண்ணாவது!

என்னடா இப்பதானே போட்டுக் காண்பிச்சேன்! உன் அட்ட காசத்தை இப்ப நீ அப்நார்மல் பர்சன்! உடனே உன் வீட்டுல சொல்லி ஏதாவது தாயத்து மந்திரிச்சி கட்டிக்கோ எல்லாம் உன் நல்லத்துக்குத்தான் சொல்றேன்.

என்னடா பயமுறுத்துறே?

இல்ல நீதான் என்னை கொஞ்ச நேரம் முன்னாடி பயமுறுத்திட்டே! சரி சரி நீ கிளம்பு நேரம் போயிகிட்டே இருக்கு இந்தா ஆஞ்ச நேயர் கோயில் துளசி இதை கையில வச்சிகிட்டு  போ! என்று பூஜையறையில் இருந்து ஒரு துளசி இலையை எடுத்து வந்து தந்தான் முகேஷ்.

அவனிடமிருந்து துளசியை வாங்கிய ரவியின் உடல் நடுங்கியது! அவன் பற்களை நறநறவென கடித்தான். டேய்! துளசியை கொடுத்து என்னை விரட்ட முடியாது! தெரிஞ்சுக்கோ என்று கத்தினான்!

ஒரு நொடி அயர்ந்து போன முகேஷ்! நீ இன்னும் போகலையா? இவன் உடம்புலதான் இருக்கியா? என்றான்.

இல்லடா! போய் போயி வந்துருக்கேன்! இவன நான் விட மாட்டேன்! இவன் மூலம் நான் பழிவாங்கணும் என்றது அந்த குரல். நீ யாரு? எதுக்கு பழி வாங்கணும்?

அதெல்லாம் சொல்ல முடியாது இப்ப வரேன்! பையன் ரொம்ப பயந்து போயிருக்கான்! நான் வரேன்!

ரவி ஓட ஆரம்பித்தான்.

டேய் ரவி நில்லுடா! நில்லு! கத்தியபடியே பின்னால் ஓடினான் முகேஷ்!

வேகமாக ஓடிய ரவி இரண்டு தாவாக ஓடினான். நெடுவரம்பாக்கம் வழியே சென்றான் ஏறக்குறைய ஒரு கிலோ மீட்டர் ஓடியிருப்பான். அவனை துரத்தி சென்ற முகேஷ் களைத்து போயிருந்தான்.

ஊர் உறங்கியிருந்ததால் யாரும் இவர்கள் ஓடுவதை கவனிக்க வில்லை! சில நாய்கள் மட்டுமே துரத்தி வந்தன. அவைகளின் குரல் பயங்கரமாக இருந்தது. பக்கத்து ஏரிக்குள் நரிகளின் ஊளையிடும் சத்தம் அந்த இரவில் பயங்கரமாக இருந்தது. ஆனால் இது எதையும் பொருட்படுத்தாது ஒரே மூச்சில் ஓடிக் கொண்டிருந்தான் ரவி.

முகேஷிற்கு மேல் மூச்சு வாங்கியது. இந்த மாதிரி ஓட்டம் அவன் ஓடியது இல்லை! இன்று யார் முகத்தில் முழித்தோமோ இதுஎன்ன வேதனை  என்றுஅவன் மனம் புலம்பியது. ஆனால் நண்பன் ஓடுகிறானே அவனை காப்பாற்ற வேண்டுமே என்று மிக வேகமாக அவனை பின் தொடர்ந்தான் முகேஷ்.

ஏறக்குறைய அரைமணி நேரம் கடந்த பின் அந்த ஆலயம் கண்ணில் தென்பட்டது. அகோர வீரபத்திரர் ஆலயம் அது. சென்னிவாக்கத்தினுள் நுழைந்து விட்டோம் என்று நினைத்தான் முகேஷ்.

ஓடிக்கொண்டிருந்த ரவி அந்த ஆலயத்தின் முன் சென்றதும் அப்படியே நின்றான். சிறிது நேரத்தில் மூர்ச்சை அடைந்து விழுந்தான். பின்னால் வந்த முகேஷ் பதறிப்போய் அருகே சென்று  ரவி! ரவி! என்ன ஆச்சுடா! எழுந்திருடா! என்று அவனை தட்டி எழுப்பினான். ரவியின் உடலில் சலனமில்லை!

முகேஷ் வியர்த்து வழிந்தான். இப்போது என்ன செய்வது தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்தான். அப்போது அவனது முதுகில் யாரோ கைவைத்தார்கள். திரும்பிய முகேஷ் வீல் என அலறினான்.

ராகவனுடன் உள்ளே வந்த வினோத் இன்னும் இந்த வீடு மாறலைடா! அப்படியே இருக்கு அதே ஓட்டு வீடு! வயல் வெளின்னு சுகமா இருக்கே! என்றான்.

பேச்சை மாத்தாதே வினோத்! இப்ப சொல்லு நீ எதுக்கு அந்த பொண்ணை கூட்டிட்டு வந்திருக்கே அவ யாரு? என்றான்.

என்னடா இப்படி கேக்குற? அதான் சொன்னேனே?வைப்னு!

டேய் விளையாடாதே! இதை யார் நம்பனாலும் நான் நம்ப மாட்டேன்! வொய்ப் அது இதுன்னு ரீல்விடாதே உண்மையை சொல்லு! அவ கழுத்தில் தாலியை காணோம். காலில் மெட்டியை காணோம் நீ என்னடான்னா இப்படி ரீல் விட்டுகிட்டு திரியறே என்றான் ராகவன்.

சரி அவ என் வொய்ப் இல்லன்னே வச்சிக்கோயேன்! நீ என்னை வீட்டுல சேர்க்க மாட்டியா?

அது வேற விசயம்? ஆனா என்கிட்ட கூட உண்மைய சொல்ல கூடாதா?

சொல்றேன் ரொம்ப பசிக்குது சாப்பிட்டு பேசுவோமா? என்றான்.

சாரிடா! ஏதோ ஆர்வத்துல உன்னை கவனிக்க மறந்துட்டேன். கை கால் அலம்பிட்டு வா! சாப்பிடலாம் என்றான்.

செல்வி செல்வி! வா கை கால் கழுவிட்டு சாப்பிடலாம் என்று வினோத் அழைக்க அந்த பெண் எதையோ பறிகொடுத்தவள் போல நின்று கொண்டிருந்தாள்.

செல்வி! என்ன யோசனை? வா என்று குரல் கொடுக்கவும் அவள் திரும்பினாள்

அவள் கண்களில் ஒரு தீட்சண்யம்! பூஜையறையில் இருந்த ஆஞ்சநேயர் படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என்ன செல்வி அப்படி பார்க்கிற? என்றான் வினோத்.

நான் செல்வி இல்லே என்றாள் அந்த பெண்.

என்னது?

நான் செல்வி இல்லேன்னு சொல்றேன் இல்ல?

சரி நீ யாரு?

அத இப்ப சொல்ல முடியாது!

சரி விடு! வா சாப்பிடலாம்!

என்ன சாப்பாடு வைச்சிருக்க?

ஐயர் ஊட்ல என்ன இருக்கும் தயிர்சாதம் சாம்பார்சாதம் தான் இருக்கும்!

ஐயே! இத யாரு துண்ணுவாங்க? கறிச்சோறு! முட்டை எதுவும் இல்லையா? அதெல்லாம் இருந்தாத்தான் சாப்பிடுவேன்.

என்னடா என்ன நடக்குது இங்கே இவளை நீ செல்வின்னு சொல்றெ? அவ இல்லேன்னு சொல்றா? கறிச்சோறு கேக்குறா? நீ நம்மாத்த பத்தி சொல்லித்தானே கூட்டிட்டு வந்தே?

யோவ் அய்யரே! நீ சும்மா இரு! வினோத்து! நீ இப்ப கறிச்சோறு ஏற்பாடு பண்ணு துண்ணே ரொம்ப நாளாகுது என்றாள் செல்வி

அந்த கர்மத்தை எல்லாம் எங்கனா வெளியே போய் திண்ணு தொலைங்க! இது ஆச்சாரமான இடம்!

சரி வா நாம போவோம்! அய்யரே டாட்டா! என்று விடுவிடுவென வேகமாக நடக்க ஆரம்பித்தாள் செல்வி.

செல்வி நில்லு! உனக்கு இந்த ஊருல என்ன தெரியும்?  நில்லு நில்லு! என்று பின்னால் ஓடினான் வினோத். இரண்டு தெருக்கள் ஓடிய செல்வி ஒரு வீட்டின் முன்னால் நின்றாள். அந்த வீட்டில் இருந்து ஒருவித மாமிச வாசம் வர உள்ளே நுழைந்து ஆகா! என்ன வாசனை! என்றாள்.

திடுமென உள்ளே நுழைந்த செல்வியை கண்டு யாரு! யாரும்மா! நீ திடீர்னு உள்ள நுழைஞ்சு என்னென்னமோ பேசற?

செல்வி அதை சட்டை செய்யாமல் உள்ளே நுழைந்து அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மீன் குழம்பினை ஒரு கரண்டியில்  எடுத்து வாயினுள் ஊற்றிக் கொண்டாள் தடுக்க முயன்ற வீட்டுக்காரணுக்கு பளார் என்று ஒரு அறை விட்டாள். அவன் விதிர்விதிர்துப் போனான்.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top