நிலவேம்பு!!!

நிலவேம்பு!!!

நிலவேம்பு பயன்கள்!

கோடைகாலம், குளிர்காலம் என்ற பிரிவுகள் தாண்டி இது காய்ச்சல் காலம்!

நிலவேம்புக் குடிநீர், டெங்கு, சிக்குன்குனியாவில் இருந்து ஏராளமான தமிழர்களைக் காப்பாற்றிய சித்த மருந்து.

சாதாரண சளி மருந்தான ஆடாதொடை இலைச்சாறு ரத்தத்தட்டுகளை உயர்த்துவது அறிவியல்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சளியுடன்கூடிய காய்ச்சலுக்கு, இதனை தினமும் 15 மில்லி முதல் 30 மில்லி வரை பயன்படுத்தலாம்.

நிலவேம்புக் குடிநீர் செய்வது எப்படி?

நாட்டு மருத்து கடைகள் மற்றும் சித்த மருத்துவ பார்மசிகளில் நிலவேம்புப் பொடி கிடைக்கும். லேசாக காய்ச்சல், தும்மல் வந்தால் இரண்டு குவளை தண்ணீரில் இரண்டு டீ ஸ்பூன் நிலவேம்புப் பொடி போட்டு, அது அரை குவளையாக வற்றும் வரை காய்ச்சி, வடிகட்டி இளஞ்சூட்டில் அருந்த வேண்டும். இது ஒரு நபருக்கான அளவு. அந்தக் குடிநீரே காய்ச்சலையும் வலியையும் காணாமல் போக்கடிக்கும்!

மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு, உடனடியாக கொடுக்க, நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படும் பொடியில் நிலவேம்பு மட்டும் இல்லையாம்!

“”நிலவேம்பு, மிளகு, கோரைக் கிழங்கு, பற்படாகம், விலாமிச்சைவேர், சந்தனத்தூள், சுக்கு, வெட்டிவேர், பேய்புடல் ஆகியவை சேர்ந்ததுதான் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கப் பயன்படும் பொடி” என்கிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். அவரிடம் பேசியபோது…

“”2006 ஆம் ஆண்டு சிக்குன்குனியா தாக்கியது. சித்த மருத்துவர்கள் சிக்குன்குனியாவுக்கு நிலவேம்புக் குடிநீரைக் கொடுத்தார்கள். 5 – 6 நாட்களில் சிக்குன் குனியா நோயைக் குணப்படுத்திவிட்டார்கள். அதற்குப் பிறகு மத்திய அரசின் “ஆயுஷ்துறை’யின் கவனம் நிலவேம்புக் குடிநீரின் பக்கம் திரும்பியது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் வந்தது. ரத்தத்தில் உள்ள ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை அப்போது குறைந்து போகும். சித்த மருத்துவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீரைக் கொடுத்தார்கள். ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்புக் குடிநீர் நல்ல மருந்து என்பது எல்லாருக்கும் தெரிந்தது.

தமிழக அரசு அரசு மருத்துவமனைகளில் நில வேம்பு குடிநீரைப் பயன்படுத்த அரசாணை பிறப்பித்தது. சிக்குன்குனியா, டெங்குவால் பாதிக்கப்பட்ட நிறையப் பேர் நிலவேம்புக் குடிநீரை நாடி வந்தார்கள்.

உடலில் வலியோடு கூடிய சுரம் வந்தால் அதை நிலவேம்பு போக்கும் என்று பழைய மருத்துவநூல்களில் கூறப்பட்டுள்ளது. அது உண்மை என்பதை நடைமுறையில் இப்போது எல்லாரும் உணர்ந்துவிட்டார்கள்.

நிலவேம்பு குடிநீரை வீட்டிலேயே தயாரிக்கலாம். நிலவேம்புப் பொடி 2 ஸ்பூன் எடுத்து, அதை இரண்டு டம்ளர் நீரில் போட்டுக் கலக்கி, அரை டம்ளராக ஆகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு மூன்று நாட்கள் இருவேளைகள் இதை அருந்தி வந்தால் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல் போன்றவை நீங்கிவிடும்.

நமது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் வந்துவிட்டது என்றால், நமக்கு அது தொற்றிக் கொள்ளாமல்  இருக்க,  முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, வாரத்துக்கு ஒருநாள் இந்த மருந்தைச் சாப்பிடலாம். ஆனால் தினம்தோறும் குடிக்கக் கூடாது.

நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கும் பொடியில் ஒன்பது மருந்துப் பொருட்கள் அடங்கியுள்ளன. எனவே நிலவேம்புக் குடிநீரை அருந்தினால், உடல் வலிமை பெறும். சளி நீங்கும். சிக்குன்குனியா, டெங்கு போன்றவற்றுக்கு மட்டுமல்ல,  சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் திறன் நிலவேம்புக் குடிநீருக்கு உள்ளது.

நிலவேம்புக் குடிநீர் தயாரிக்கப் பயன்படும் பொடி கிடைப்பது சிரமம் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது. அரசு சித்த மருத்துவ நிலையங்களில்  இலவசமாகவே கொடுக்கிறார்கள். சில தனியார் மருந்துக் கடைகளிலும் விற்கப்படுகிறது. குழந்தைகள், பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். வேறு மருந்து, மாத்திரைகளைச் சாப்பிடும்போது இந்த நிலவேம்புக் குடிநீரை அருந்தினால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமே என்று பயப்படத் தேவையில்லை. எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் ஒன்று, ஒரு சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே இந்த நிலவேம்புக் குடிநீரைப் பயன்படுத்த  வேண்டும்” என்கிறார் மருத்துவர் சிவராமன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top