Home » சிறுகதைகள் » கனவு மட்டுமே காண்பவர்களுக்கு!!!
கனவு மட்டுமே காண்பவர்களுக்கு!!!

கனவு மட்டுமே காண்பவர்களுக்கு!!!

நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்” – அர்த்தம் தெரியுமா?

ஒரு ஊரில் ஒரு சோம்பேறி இருந்தான். வீடு வீடாக போய் பிச்சையெடுத்து உண்பதே அவன் வேலை.

எந்த வேலைக்கும் செல்ல விரும்பாத அவனுக்கு பெரிய பணக்காரனாகவேண்டும் என்கிற கனவு மட்டும் இருந்தது. ஒரு முறை அவன் பிச்சையெடுக்கும்பொது ஒரு வீட்டில், அவனுக்கு ஒரு பானை நிறைய பாலை கொடுத்தார்கள்.

பானை நிறைய பால் பிச்சை கிடைத்த சந்தோஷத்தில் அவன் அதை வீட்டுக்கு கொண்டுவந்து அதை காய்ச்சி அதில் கொஞ்சம் குடித்துவிட்டு மீதியை தயிராக்கும் பொருட்டு உரையூற்றி ஒரு உறியில் தொங்கவிட்டான்.

தனது குடிசையில் உள்ள கயிற்று கட்டிலில் சாய்ந்தவன் மெல்ல யோசிக்க ஆரம்பித்தான்.  காலை இந்த பானையில் உள்ள பால் முழுதும் தயிராகியிருக்கும்.

தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பேன். வெண்ணையை காய்ச்சினால் நெய் கிடைக்கும். அதை பக்கத்து ஊர் சந்தைக்கு கொண்டு சென்று விற்று நல்ல லாபம் பார்ப்பேன்.

பின்னர் அதை வைத்து ஒரு ஜோடி ஆடுகள் வாங்குவேன். ஆடுகளை வீட்டுக்கு கொண்டு வந்து வளர்ப்பேன்.

இரண்டு விரைவில் நான்காகும். நான்கு அப்படியே எட்டாகும். ஒரு ஆட்டுப் பண்ணையே வைக்கும் அளவிற்கு என்னிடம் ஆடுகள் இருக்கும்.

ஆடுகளை அப்படியே சந்தையில் விற்றுவிட்டு இரண்டு பசுக்கள் வாங்குவேன். பசுக்கள் மூலம் பால் வியாபாரம் செய்து நன்கு பொருளீட்டுவேன்.

பசுக்கள் பல்கி பெருகும். அடுத்து அதை வைத்து குதிரைகளை வாங்குவேன். குதிரைகளும் பல்கி பெருக, குதிரை லாயம் அமைப்பேன்.

குதிரைகளை அக்கம் பக்கத்து ஊர்களுக்கும் சமஸ்தானங்களுக்கும் விற்பேன். இப்படி நான் செல்வந்தனானவுடன் எனக்கு பலர் பெண் தர முன்வருவார்கள்.

ஒரு அழகான பெண்ணை திருமணம் செய்துகொண்டு அவளுடன் குடும்பம் நடத்துவேன். எனக்கு ஒரு மகன் பிறப்பான்.

அவனை நான் கொஞ்சி மகிழ்வேன். மகன் தவழும் பருவத்தில், தவழ்ந்துகொண்டே குதிரைகளுக்கு அருகே செல்வான். குதிரைகள் குழந்தையை மிதித்துவிட்டால் என்ன செய்வது? எனக்கு கோபம் தலைக்கேறும்.

“குழந்தை குதிரைக்கு அருகே செல்வதை கூட பார்க்காமல் என்னடி செய்துகொண்டிருக்கிறாய்?” என்று என் மனைவியை எட்டி உதைப்பேன்.”

கயிற்றுக் கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவன், தன்னை மறந்து எழுந்து கால்களை தூக்கி உதைக்க, மேலே உறியில் தொங்கவிடப்படிருந்த பால் பானையில் கால்பட்டு பானை உடைந்து கீழே விழுந்து எல்லா பாலும் கொட்டிவிடுகிறது.

பிச்சையாக கிடைத்த எல்லா பாலும் வீணாக போய்விடுகிறது. நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கும் என்பார்கள் அல்லவா? அதன் அர்த்தம் இது தான்.

“இலக்குகளை அடைய உழைக்காமல் செயலாற்றாமல் வெறும் கனவு மட்டுமே காண்பவர்களுக்கு”  மேற்கூறிய கதையில் உள்ள பிச்சைக்காரனுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

வாழ்க்கையில் வெற்றி பெற கனவு காண்பதற்கும், கனவு மட்டுமே காண்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top