Home » சிறுகதைகள் » பழி போடாதீர்!
பழி போடாதீர்!

பழி போடாதீர்!

சங்கசூடணன் விக்கித்துப் போனான். “”குருவே! நான் அப்படி செய்வேனா! தங்கள் பிரியத்திற்குரிய மாணவன் அல்லவா நான்! என்னையா தாங்கள் தவறாக நினைக்கிறீர்கள்! நான் சுமுகியை ஒன்றுமே செய்யவில்லை. அவள் வீணாக என் மீது பழி சுமத்துகிறாள், நம்பாதீர்கள், என்று தன் ஆசிரியரான ஆனந்தகுருவிடம் எடுத்துச் சொன்னான். இவ்வாறு அவன் சொல்ல வேண்டிய அவசியம் என்ன! இதை அறிந்து கொள்ளும் முன் குரு அவனுக்களித்த பதிலை கேட்டு விடுங்கள். “”பாவி! சதிகாரா! உன்னை நல்ல மாணவன் எனக் கருதி வீட்டுக்குள்ளேயே வர அனுமதித்தேனடா! நீ என் மகளின் மானத்தையே பறித்து விட்டாயே! கயவனே! உனக்கு மன்னிப்பே கிடையாது! நீ இளவரசனாக இருக்கலாம். அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்காதே. உன் தந்தையிடம் முறையிடுவேன். அவர் நியாயம் தவறாத மன்னர் என மக்கள் மத்தியில் பெயரெடுத்தவர். அவரே உன்னைத் தண்டிக்கட்டும், என்றவர், மேல் வஸ்திரத்தை உதறி தோளில் போட்டுக் கொண்டு அரண்மனையை நோக்கி வேகமாக நடந்தார். சங்கசூடணனும் பின் தொடர்ந்தான்.

நடந்தது என்ன! ஆனந்தகுருவிற்கு ஒரு மகள். பெயர் சுமுகி. அவள் தன் தந்தையின் குருகுலத்திற்கு படிக்க வந்த சங்கசூடணனைக் காதலித்தாள். ஒரு தலைக்காதல்…இந்த விஷயம் சூடணனுக்கு தெரியாது. வகுப்பு நடக்கும் நேரங்களில், மறைந்து நின்று அவனது பேரழகை ரசிப்பது அவளது அன்றாட வேலை. சத்தியவிரதன் என்ற மாமன்னரின் மகன் சங்கசூடணன் என்பதால், ராஜா வீட்டு பிள்ளையாகவும் இருக்கிறானே என்று காதல் மேலும் அதிகரித்தது. ஒருநாள், குரு வெளியே போய்விட்டார். அந்த நேரம் பார்த்து சங்கசூடணன் வீட்டுக்குள் வந்தான். சுமுகி தனியாக இருந்தாள். வீட்டுக்கு வந்த சூடணனிடம், “”அன்பரே! மணந்தால் உங்களை மணப்பேன். இல்லையேல் மரணமடைவேன், என்று காதலை வெளிப்படுத்தினாள். “”ஐயோ! இதென்ன விபரீதம்! மாதா, பிதாவுக்கு அடுத்தபடியாக குருவை வைத்ததற்கு காரணம்…அவரும் தந்தைக்கு சமமானவர் என்பதால் தான்! அவ்வகையில், நீ எனக்கு தங்கை ஆகிறாய். இந்தப்பிறவியில் மட்டுமல்ல, எத்தனை பிறவி எடுத்தாலும் நீ என் தங்கை தான்.

வேண்டாம் அம்மா இந்த விபரீதக்காதல், நான் வருகிறேன், என்றவன் அவசரமாக வெளியேறி விட்டான். ஆனால், இதுபற்றி தந்தையி டம் தவறாகப் புகார் சொல்லிவிட்டாள் சுமுகி. “”அப்பா! நீங்கள் வெளியே சென்றிருந்த சமயத்தில், உங்கள் மாணவன் சங்கசூடணன் உள்ளே வந்தார். என்னைக் காதலிப்பதாகக் கூறினார். “குரு மகளிடம் இப்படி சொல்லலாமா! என நான் அறிவுரை சொன்னேன். அது அவர் காதில் ஏறவில்லை. பலாத்காரமாக என்னை அடைந்து விட்டார், என்று அபாண்ட பழியைப் போட்டாள். கண்ணீர் வடித்தாள். எந்த தந்தை தான் இதுகேட்டு பொறுப்பார்! இப்போது விவகாரம் சத்தியவிரதன் முன்னால் வந்தது. பெயருக்கேற்ற தன்மையைக் கொண்ட அவன், தன் மகனென்றும் பாராமல், ஒரு கையையும், காலையும் வெட்ட உத்தரவிட்டான். உத்தரவு நிறைவேற்றப்பட்டது. இந்த அநியாயத்தைப் பொறுக்க மாட்டாமல், பூமிக்குள் இருந்து ஆதிசேஷன் (நாகப்பாம்பு) வெளிப்பட்டான். “”சங்கசூடணா! இப்பிறப்பில் செய்த தவறுக்குரிய பலனை அவள் அனுபவிப்பாள். நீ இலங்கையில் ராவணனின் சகோதரன் விபீஷணனாகப் பிறப்பாய். உன் தங்கையாக சுமுகி, சூர்ப்பனகையாகப் பிறப்பாள். நான் லட்சுமணனாகப் பிறந்து அவளது மூக்கை அறுப்பேன், என்றான். பிறர் மீது அபாண்டமாக பழிபோட்டால், அதற்குரிய கர்மவினை எத்தனை பிறவி எடுத்தாலும் தொடரும்…புரிகிறதா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top