இறை துகள்!!!

“கடவுள் இருக்கிறார்” என்பதை அறிவியல் ரீதியாக நிரூபித்துவிட்டால் எப்படி இருக்கும்? ஆத்திகர்கள் அனைவரும், “இப்பொழுதாவது கடவுளை உணருங்கள்” என்பார்கள். நாத்திகர்கள் அனைவரும், “கடவுளை அறிவியல் வென்றுவிட்டதால் அறிவியலே கடவுள்” என்பார்கள். அறிவியலால் விளக்க முடியாத சங்கதிகள் பல. அட்லாண்டிக் கடலின் பெர்முடா முக்கோணத்தைப் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்தவண்ணம் உள்ளது. சபரிமலை ஜோதிக்கு இன்னும் விளக்கம் தர முடியவில்லை.

அறிவியலின் வரலாற்றைப் படித்தாலோ, அல்லது காலத்தின் வரலாற்றைப் படித்தாலோ.. ஏன், கடவுளின் வரலாற்றைப் படித்தால் கூட, நாம் சேருமிடம் ஒன்று தான் – பிக் பேங் (மகா பெருவெடிப்பு). ஆங்கிலத்தில் சொல்லப்போனால், Big Bang Singularity. அது தான் இயற்கையின் அனைத்து நியதிகளையும், “கடவுள்” தகர்த்தெறிந்த வினாடி. உலகப்புகழ் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை வியக்க வைத்த வினாடி. அவரைப்போன்ற இயற்பியல் – கணித மேதைகளையும் ஆத்திகர்களாக்கிய வினாடி. பிரபஞ்சம் ஆரம்பித்த வினாடி. காலத்தின் ஆரம்பத்தைக் குறிக்கும் வினாடி.

குத்துமதிப்பாக, எவ்வளவு வருடத்திற்கு முன் இது நடந்தது? ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபத்தொன்பதில், புகழ்பெற்ற எட்வின் ஹப்பில் மிக முக்கியமான அடிப்படை விதியைக் கண்டுபிடித்தார். அது என்னவென்றால், “எத்திசையில் பார்த்தாலும், அனைத்து நட்சத்திரக் குடும்பங்களும் நம்மைவிட்டு அதிவேகமாக தொலைவில் போய்க்கொண்டிருக்கின்றன.” என்பதுதான். ஆம்.. பிரபஞ்சம் விரிவடைந்துகொண்டே போய்க்கொண்டிருக்கிறது. அப்படியென்றால், பின்னோக்கினால், ஏதோ ஒரு காலத்தில் சுமாராக 20000,000,000 வருடங்களுக்கு முன்னால், அனைத்து நட்சத்திரக் குடும்பங்களும் மிகவும் அருகருகே இருந்திருக்க வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால், அவை அனைத்தும் ஒரே இடத்தில் இருந்திருக்க வேண்டும். மிகவும் சிறிய இடத்தில், அதிக அடர்த்தியுடன் அனைத்து நட்சத்திரங்களும் இருந்திருக்க வேண்டும். அந்த நுண்ணளவு (Infinitesimal) இடத்தில், பிரபஞ்சத்தை உருவாக்கியவர் திடீரென்று, “என் நட்சத்திரங்களின் விதிகளும், அக்குடும்பங்களின் நியதிகளும் நாசமாய்ப் போகட்டும்” என்று சொன்னால் எப்படி இருக்கும்? அந்த க்ஷணத்தைத்தான் பெருவெடிப்பு என்று இன்றைய விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

இந்த கணத்தைத்தான் சோதனைச் சாலையில் பாவனை செய்ய (simulate) நினைக்கிறார்கள் விஞ்ஞானிகள். இதன் மூலம் இறை துகளை (God Particle) அடையாளம் காண முயல்கிறார்கள். இந்த இறைதுகள் என்னவென்று சுருக்கமாகப் பார்ப்போம்.

பிரபஞ்சத்திலிருக்கும் அனைத்து அம்சங்களும் அடிப்படைத் துகள்களால் ஆனவை என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தத் துகள்களுக்குத் தனித்தனியாய் நிறை ஏதுமில்லை. பெருவெளியில் நகரும் இத்துகள்கள் ஹிக்ஸ் களம் (Higgs field) என்றழைக்கப்படும் களத்திலிருந்து தம் நிறையைப் பெறுகின்றன. அதாவது இந்தக் களம்தான் பிரபஞ்சத்தை இணைக்கிறது. இந்தக் களம் இதுவரை நாம் கண்டறியாத ஒரு துகளால் ஆனது என்பது தியரி.

இன்னும் கண்டறியப்படாத இத்துகளுக்குப் பெயர் கூட வைத்தாகி விட்டது – ஹிக்ஸ் போஸான் (Higgs Boson). (உலகப்புகழ் பெற்ற இந்திய விஞ்ஞானி சத்யேந்த்ர நாத் போஸ் அவர்களின் நினைவில்?). இதனை இறைதுகள் என்றும் அழைக்கிறார்கள்.

இந்தத் துகளைக் கண்டறிய இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைய, பிரபஞ்சம் உருவான கணத்தை சோதனைச் சாலைக்கே கொண்டுவரும் பட்சத்தில் இதனை எப்படியும் கண்டுவிட முடியும் என்று நம்பித்தான் இந்த சோதனை உருவாக்கப்பட்டிருக்கிறது.

எழுத்தாளர் டான் ப்ரௌண் எழுதிய “ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்” படித்ததுண்டா? அதில் வரும் விக்டோரியா மட்டும்தான் நினைவில் இருக்கிறாளா, அல்லது CERN பற்றியும் சற்றே ஞாபகம் உள்ளதா? உலகின் மிகப்பெரிய துகள் விரைவாக்கி (particle accelerator) இருக்குமிடம் CERN. ஃப்ரான்ஸ்-ஸ்விட்சர்லாண்ட் எல்லைப்பகுதிகளில் CERN தன் சோதனைகளைத் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வார காலம் ஆகிவிட்டது.

பூமிக்கு நூறு மீட்டர் அடியில், இருபத்தி ஏழு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு வட்டகுகையொன்றில் Large Hadron Collider என்றொரு துகள் விரைவாக்கியை வடிவமைத்துள்ளார்கள். புரோட்டான்களை இரண்டு திசைகளிலும் மிக விரைவாக செலுத்தி, ஒளியின் வேகத்தில் அவற்றை மோதவிட்டால், பெருவெடிப்புச் சூழலை உருவாக்கலாம் என்று எண்ணியுள்ளார்கள்.

இந்தச் சோதனையில் இந்தியாவும் ஒரு சிறிய பங்கு வகிக்கின்றது. நடராசரின் ஆனந்த தாண்டவம் உலகை ஆக்கவும், அழிக்கவும் செய்வதாக நம்பும் நம் மக்கள் நடராசரின் உருவச்சிலையைக்கூட CERNல் வைத்துவிட்டார்கள்.

இதில் இன்னுமொரு விஷயம் என்னவென்றால், இந்தச் சோதனையை தொடங்குவதற்கு முன், எல்லா திசைகளிலிருந்தும் தடை. இதைச் செய்தால், உலகம் அழிந்துவிடும் என்று!! இந்தச் சோதனையினால், மக்களுக்கு ஒரு தீங்கும் நேராது என்று நிரூபித்துவிட்டு முழுவீச்சாக தன் வேலையில் இறங்கியுள்ளது CERN.

சில வருடங்களுக்கு முன் ‘மேட்ரிக்ஸ்’ என்றொரு ஆங்கில திரைப்படம் வந்தது. மனிதர்கள் அனைவரும் அடிமைப்பட்டிருக்க, கதாநாயகன் ‘நியோ’ அவர்களை மீட்கப்போராடும் கதை. தவறினால், உலகம் அழிந்துவிடுமாம். ஆனால், படத்தின் நடுவே கதாநாயகன் புரிந்துகொள்கிறார் “தன்னுடைய வேலை, உலகத்தை (ஆறாவது முறையாக) அழித்து, புதிய மனிதர்களை மீண்டும் உருவாக்கி, மீண்டும் அவர்களை சிறைப்படுத்த உதவ வேண்டும்” என்று. சில வருடங்கள் கழித்து, மீண்டும் (ஏழாவது முறை) மீட்கப்போகிறோம் என்ற நினைப்பில் மனிதர்களை அழிக்க ஒரு புது ‘நியோ’ வருவாராம். படத்தின் கதைக்குள் போக வேண்டாம். இதற்கும் நம் உரையாடலுக்கும் என்ன சம்பந்தம்?

பெருவெடிப்புக்கு முன்னே என்னதான் இருந்தது? எப்படி நட்சத்திரக் குடும்பங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வந்தன? எப்படி வந்து சேர்ந்தன? எங்கிருந்தோ வந்து சேர்ந்தனவோ? அப்படியென்றால், இன்று நம்மை விட்டுப் பிரியும் நட்சத்திரங்கள் அனைத்தும் மீண்டும் ஒரு முறை சந்திக்குமோ? மீண்டும் அதே வெடிப்பு நேருமோ?

நேராது என்று சொல்வோர் உண்டு. “Steady State Theoryயின் படி பிரபஞ்சம் ஒரு கட்டமைப்பிற்கு வந்துவிட்டது – இனிமேல் மாறாது. ‘பிக் பேங்’ கெல்லாம் வெறும் ஜீபூம்பா!!”

உண்மையென்னவென்றால், யாராலும் இதுதான் சரியென்று அடித்துச் சொல்ல முடியவில்லை. எந்த ஒரு அனுமானத்திற்கும் நிரூபணம் இல்லை.

பிரபஞ்சமோ நம்முடன் மும்முரமாக கண்ணாம்பூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது. அவ்விளையாட்டுகளைப் புரிந்துகொள்ளவே நாம் முயன்று கொண்டிருக்கிறோம். நம் முயற்சிகளில், CERN நிறுவனத்தின் இந்தப் படி மிகவும் முக்கியமானது! இயற்கையின் பல கேள்விகளுக்கு விடைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடைகள் கிடைக்குமா? ஹிக்ஸ் போஸான் தென்படுமா? அல்லது, அந்தக் காலத்து ஈதரைப் போல ஹிக்ஸ் போஸானும் மனிதரை ஏமாற்ற இயற்கை தீட்டிய சதியா? (ஈதர் — எங்கும் நிறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் எண்ணியிருந்த ஒரு பொருள். வெளிச்சம் ஈதர் முலமாகத்தான் பரவும் என்று சொன்னோர் பலர். 1887ல் மார்லே-மிக்கெல்ஸன் அவர்கள் ஈதரைக் காட்டுகிறேன் என்று ஆரம்பித்து படுதோல்வியுற்றார்கள். விளைவு : ஈதர் என்றொன்று கிடையவே கிடையாது!!)

இயற்கையின் விளையாட்டு தொடருமா?

****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top