Home » அதிசயம் ஆனால் உண்மை » அறிவியல் » பூமியும் வேற்றுக்கிரகவாசிகளும்..!

பூமியும் வேற்றுக்கிரகவாசிகளும்..!

ஏலியன்கள் என்ற விஷயமே யாருடைய கவனத்தையும் எளிதில் கவர்ந்துவிடுவதாக இருக்கிறது அல்லவா? திரைப்படத்துறைக்கு இது ஒரு ஜாக்பாட். விஷுவல் மீடியத்தில் இப்படிப்பட்ட ஏலியன்களையும் அவர்களது உலகையும் மிக எளிதில் சித்தரித்துவிடலாம் என்பது ஒரு பெரிய ப்ளஸ் பாயின்ட். திரைப்படத்துறை ஏலியன்களை கையில் எடுப்பதற்கு முன்னரே, Science Fiction என்ற ஜானரில் எப்போதோ ஏலியன்களைப் பற்றி(யும்) எழுதிவிட்டனர் எழுத்தாளர்கள். குறிப்பாக எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவரான H.G Wells. எனது சிறுவயதில், பைகோ க்ளாஸிக்ஸ் (Paico Classics) காமிக்ஸ் வரிசையில், தமிழில் இவரது Time Machine கதையைப் படித்த நினைவு இருக்கிறது. கால யந்திரத்தை உருவாக்கும் மனிதர் ஒருவர், மிக மிக தொலைதூர வருங்காலத்துக்குப் பயணப்பட்டு, உருவில் மிகச்சிறிய மனிதர்களை சந்திப்பார். இவரது கால யந்திரமும் களவு போய்விடும். அதே இடத்தில் இரவில், கொடிய உருவுடைய ஜந்துக்கள் கிணறுகளைப் போன்ற வடிவுடைய பாதாள வாயில்களிலிருந்து வெளிப்பட்டு இந்த குள்ள மனிதர்களை உணவுக்காக வேட்டையாடும். அப்போது ஒரு பெண்ணை இவர் காப்பாற்ற நேரும். இதன்பின் அந்தக்காலத்திலிருந்து மறுபடியும் வருங்காலம் நோக்கிப் பயணப்படுவார். அப்படிப் பயணப்படும்போது பூமியின் மெதுவான காலமாற்றம் அவருக்குத் தெரியும். இப்படியாக மறுபடியும் தனது காலத்துக்குத் திரும்பிவந்து, அங்கே இருக்கும் இவரது நபர்களிடம் இந்தக் கதையை அவர் விவரிப்பார். அவரிடம் வருங்காலத்தின் இரண்டு மலர்கள் இருக்கும். அதுவே ஆதாரம்.

இந்த காமிக்ஸ் கதை ஃப்ரேம் பை ஃப்ரேமாக நினைவிருக்கிறது. இதன்பின் பல ஆங்கில க்ளாஸிக் கதைகளை (Tom Sawyer, Prisoner of Zenda, Hound of the Baskervilles, Kidnapped, Treasure Island, Man in the Iron Mask, Count of Monte Cristo) பைகோவில் படித்திருக்கிறேன். திடீரென அந்தக் காமிக்ஸ் நின்றே விட்டது.

இந்த டைம் மெஷின் கதை, இதன்பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. நண்பர்கள் பலர் இதன் புதிய வடிவமான ‘The Time Machine‘ திரைப்படத்தைப் பார்த்திருக்கலாம். எனக்கு இந்தத் திரைப்படம் பிடிக்கவில்லை. காமிக்ஸ் பெட்டர். கதையும்.

இந்தக் கதை வெல்ஸினால் எழுதப்பட்டது 1895ல்.

ஆனால் இதற்கு வெகுகாலம் முன்பிருந்தே Science Fiction வழக்கில் இருந்தது. நமக்கெல்லாம் நன்கு தெரிந்த எட்கர் அலன் போ, நிலவுக்கு ஒரு பலூனில் பயணப்படும் கதை ஒன்றை எழுதியிருக்கிறார் (The Unparalleled Adventure of One Hans Pfaall – 1835). இதற்கும் முன்பே Frankenstein எழுதப்பட்டுவிட்டது. மேரி ஷெல்லியால் – 1818ல். இந்த வகை எழுத்தின் ரிஷிமூலம், பதினாறாம் நூற்றாண்டு ஐரோப்பா என்று தெரிகிறது. இந்த ஏலியன் தொடரில் விரைவில் நாம் பார்க்க இருக்கும் ‘கில்காமேஷ்’ (Gilgamesh) என்ற சுமேரியன் காவியம் (BC 2150-2000)தான் உலகின் முதல் Science Fiction என்பது ஆராய்ச்சியாளர்களின் யூகம்.

இப்படி ஏலியன்களைப் பற்றி எப்போதோ புத்தகங்கள் வந்துவிட்ட நிலையில், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்புகளில் ஒன்றான சினிமா, ஏலியன்களை விட்டுவிடுமா?

‘Hugo‘ படத்தின் மூலம் நமக்கு அறிமுகமான ப்ரெஞ்ச் இயக்குநர் ஜோர்ஜ் மெலியெஸ், உலகின் முதல் Space மற்றும் ஏலியன் (முதல் Science Fiction கூடத்தான்) படம் எடுத்த பெருமைக்கு சொந்தக்காரர். ஹ்யூகோ படத்தில் விவாதிக்கப்படும் A Trip to the Moon திரைப்படத்தில், ஒரு புல்லட் வடிவ கலம், பூமியிலிருந்து பீரங்கி மூலம் செலுத்தப்பட்டு நிலவின் கண் ஒன்றில் சென்று சொருகிக்கொள்ளும். அங்கே ஏலியன்களால் தாக்கப்பட்டு, மறுபடி பூமிக்கே திரும்பி வருவார்கள் அந்த கலத்தில் இருப்பவர்கள்.

இந்தப்படம் வெளியான ஆண்டு – 1902. இந்தப் படத்துக்குப் பின்னர் அடுத்த ஏலியன் படமான Himmelskibet, 1918ல் வெளிவந்தது. டென்மார்க்கில்.

இதன்பின்னர் தடதடவென்று ஏலியன் படங்கள் ஹாலிவுட்டில் அப்போதைய தொழில்நுட்பங்களை வைத்து எடுக்கப்பட்டன.

ஐம்பதுகளில் எடுக்கப்பட்ட குறிப்பிடத்தகுந்த படம் ஒன்று இருக்கிறது. ‘The Day the Earth Stood Still‘ என்ற பெயர் பல திரைப்பட ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். 2008ல் கியானு ரீவ்ஸ் நடித்து வெளிவந்த படம். இது, 1951ல் வெளிவந்த இதே பெயருடைய படத்தின் ரீமேக்தான். வேற்றுக்கிரகம் ஒன்றிலிருந்து பூமிக்கு வரும் ஏலியன் ஒன்றைப் பற்றிய கதை இது. மனிதர்கள் ஆயுதங்களைப் பெருக்கினால் பூமி அழிக்கப்படும் என்பது இந்த ஏலியன் கொண்டுவரும் செய்தி. அந்த வருடத்தின் சிறந்த படங்களில் ஒன்றாக இது அறியப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll To Top